-எஸ்.றொசேரியன் லெம்பேட்
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட சவேரியார்புரம் கடற்பரப்பில் இன்று சனிக்கிழமை காலை தொழிலுக்குச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர், கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சிலாபத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சவேரியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான மத்தேஸ் பிரான்சீஸ் சகாயம் (வயது-55) என்பவரே உயிரிழந்தவராவார்.
இன்று சனிக்கிழமை காலை 5.30 மணியளவில் குறித்த நபர் சவேரியார்புரம் கடற்பரப்பில் 'தெப்பம்' ஒன்றில் தொழிலுக்குச் சென்றுள்ளார். இதன்போது பலத்த காற்றின் காரணமாக தெப்பம் கவிழ்ந்த நிலையில் குறித்த நபர் கடலினுல் வீழ்ந்து மரணமடைந்துள்ளார்.
இந்த நிலையில், காலை 6 மணியளவில் குறித்த நபர் சென்ற 'தெப்பம்' கரை ஒதுங்கியுள்ளது. அதனைக்கண்ட சவேரியார்புரத்தைச் சேர்ந்த சக மீனவர்கள் சுமார் 20 படகுகளில் 30 இற்கும் மேற்பட்டவர்கள் கடலுக்குள் சென்று தேடுதலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சுமார் 6.30 மணியளவில் குறித்த நபர் மீட்கப்பட்டு, சிலாபத்துறை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி மன்னார் பொதுவைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை சிலாபத்துரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.