2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

த.தே.கூ.,ஜனநாயக மக்கள் முன்னணியை ஆதரிக்க தீர்மானித்துள்ளது: டெனிஸ்வரன்

Kogilavani   / 2014 மார்ச் 24 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

'எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள  மேல் மாகாணசபைத் தேர்தலை தமிழ் பேசும் மக்களாகிய நாங்கள் புத்தி சாதுரியமாக முகம் கொடுக்க வேண்டியுள்ளது. ஏனெனில் மேல் மாகாணத்தில் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க கூடிய ஒரே ஒரு சக்தியாக திகழ்பவர்கள் ஜனநாயக மக்கள் முன்னணியினர். அந்தவகையில் இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக மக்கள் முன்னணிக் கட்சியினை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளது. எனவே மக்கள் அனைவரும் ஒரே அணியில் ஒன்று திரண்டு வாக்களிக்க வேண்டும்'   என வடமாகாண சபை போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை (24) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

'இக் கட்சியின் தலைவர் மனோகனேசன் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர். அவரது கரங்களை பலப்படுத்துவதோடு அவரோடு இணைந்து செயற்படும் நண்பன் குகவரதன் மற்றும் கட்சியின் வேட்பாளர்களின் வெற்றியையும் உறுதி செய்து மேல் மாகாணத்தில் புதுயுகம் படைக்க தமிழ் மக்கள் தீர்மானம் எடுக்கவேண்டும்.

மன்னார் புனிதசவேரியார் கல்லூரியில் என்னோடு கல்வி கற்ற குகவரதன் பல கஷ்டங்களுக்கு மத்தியில் கல்விகற்று இன்று பொறியியலாளராக உயர்ந்த நிலையில் வாழ்கிறார் என்றால் அது அவரது விடா முயற்சியாகும்.

வடமாகாணம் வரலாற்றுக்காலம் தொடக்கம்; கல்வியில் சிறப்புற்று விளங்கியது. யுத்த காலத்திலும் சிரமங்களுக்கு மத்தியிலும் கல்வியை கைவிடவில்லை. இன்று எமது சமூகம் இதனை சரிவரச் செய்ய வடமாகாண சபை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஆனால், மேல் மாகாணத்தில் தமிழ் சமூகம் கல்வியில் பின்தங்கியுள்ளது.

அதனை நிவர்த்தி செய்து கல்விச் சமூகத்தை உருவாக்கும் திட்டங்கள் பல உள்ளன. எனவே தமிழ் மக்கள் தமது அமோக வாக்குகளை ஜனநாயக மக்கள் முன்னணியினருக்கு வழங்கவேண்டும். அவர்களது வெற்றி மேல்மாகாணத்தின் புரட்சிகரமான மாற்றத்திற்கான வெற்றியாகும்.

வடக்கில் தமிழ் மக்கள் வெளிக்காட்டிய ஒற்றுமையை மேல் மாகாணத்திலும் வெளிக்காட்டுங்கள். தமிழின பாதுகாப்பை உறுதி செய்யுகள். உலகமே தமிழர்களை திரும்பிப்பார்க்கும் நிலைமையை ஏற்படுத்துங்கள்'  என மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .