2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சில அமைச்சர்களின் நிர்வாக நடவடிக்கைகளால் மக்கள் அதிருப்தி: ஞானசீலன் குணசீலன்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

அண்மைக்காலமாக வடமாகாண சபையில் சில அமைச்சர்களின் நிர்வாக நடவடிக்கைகள் வடபகுதி மக்கள் மத்தியில் பல்வேறு மட்டங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஞானசீலன் குணசீலன் தெரிவித்தார்.

இது தொடர்பில்  அவர் செவ்வாய்க்கிழமை (01) விடுத்துள்ள அறிக்கையில மேலும் தெரிவித்துள்ளதாவது,
'
அரசாங்கம் மாகாணசபைக்குரிய முழு அதிகாரங்களையும் வழங்கவில்லையென்பது யாவரும் அறிந்ததே. அதுவொரு புறமிருக்க,  தற்போது கைவசமுள்ள அதிகாரங்களைக் கூட சரியாக பயண்படுத்தாமல் கண்மூடித்தனமாக இருப்பது கவலைக்குரிய விடயம். இதனால், கைவசமுள்ள அதிகாரங்களும் எம்மால் பயன்படுத்தப்படாமல் மத்திய அரசே அதனைக் கையாள இடமளிக்கப்படுகின்றது.

இதற்கு பல சம்பவங்கள் ஆதாரமாக உள்ளன. சில குறிப்பிட்ட பிரச்சினைகளை எடுத்துக் கூறினால், அண்மையில் யாழ்ப்பாணத்தில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கும் சுகாதார வைத்திய அதிகாரிகளுக்குமிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு இரு பிரிவினரும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இவ்விடயத்தில் உள்ளூராட்சி சபைகளில் அதாவது பிரதேச சபைகளில் பணி புரிந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சுகாதாரத் திணைக்களத்திற்கு உடனடியாக மாற்றப்பட வேண்டுமென மாகாண சுகாதார அமைச்சால் பிரதேச சபைகளுக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு சில குறிப்பிட்ட பிரதேச சபைகளின் தவிசாளர்களிடமிருந்து எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ஒத்துழைப்பும் மறுக்கப்பட்டது.

உண்மையில் பொதுச் சுகாதார பரிசோதகர் நியமனம் பிரதேச சபைகளுக்கு இல்லை. அது மாநகரசபைக்கே உள்ளது. அங்கேயும் சுகாதார வைத்திய அதிகாரி நியமனம் இருத்தல் வேண்டும். சுகாதார வைத்திய அதிகாரி இல்லாது விட்டால் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சுகாதாரத் திணைக்கள சுகாதார வைத்திய அதிகாரியின் மேற்பார்வையிலே பணியாற்ற வேண்டும். எனவே, சட்டத்திற்கு அமைவில்லாது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பிரதேச சபைகளுக்கு நியமித்தது முதல் தவறு.

எவ்வாறாயினும்,  கூட்டமைப்பு ஆளும் கட்சியாக உள்ள சுகாதார அமைச்சும் உள்ளூராட்சி அமைச்சும் எடுத்த முடிவு அதே கூட்டமைப்பின் தலைவர்களினால் நிர்வகிக்கப்படும் பிரதேச சபைகளினால் உதாசீனம் செய்யப்பட்டது கேலிக்குரியது.

கூட்டமைப்பின் மாகாணசபை அதிகாரங்களை கூட்டமைப்பினரே உதாசீனம் செய்யும்போது, அரசாங்கத்ததை குறை கூறிக்கொண்டிருப்பது எவ்வாறு பொருந்தும். உண்மையில் மாகாண சபையுடைய சில அமைச்சுக்களின் பலவீனத்தையே காட்டுகின்றது.

இதில் ஒரு விடயம் என்னவென்றால் இப்பிரச்சினை ஆளுநர் தரப்பிற்கு கொண்டு செல்லப்பட்டபோது, உடனடியாகவே ஆளுநரின் தலையீட்டால் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பிரதேச சபைகளிலிருந்து சுகாதாரத் திணைக்களத்திற்கு மாற்றப்பட்டார்கள்.

இன்றும் மாகாண சுகாதார அமைச்சுக்கு எமது மாகாணத்தில் நிர்வாக மாவட்டங்களில் சில மாவட்டங்களில் திணைக்களத் தலைவர்களாக உள்ளவர்கள் தகுதியற்ற, சிரேஷ்ட வைத்திய அதிகாரிகள் அல்லாத ஏற்கெனவே மத்திய சுகாதார அமைச்சின் இடமாற்றத்தை பெற்றவர்களே உள்ளார்களெனவும் இவர்கள் வலுக்கட்டாயமாக அரச அரசியல் பலத்தை பாவித்து திணைக்களத் தலைவர்களாக தொடர்ந்தும் இருந்து வருகின்றார்கள்.

மேலும், முறைகேடுகள் சம்பந்தமாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் படி மக்கள் பல தடவை சுகாதார அமைச்சுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். எனினும்,  எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இறுதியாக ஒரு உயர் அதிகாரி நிதி மோசடி செய்தமை தொடர்பில் குறித்த அதிகாரி மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் உடனடியாக இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளார். இந்நடவடிக்கை கூட இறுதியில் ஆளுநரின் தலையீட்டினால் மட்டுமே நடைபெற்றுள்ளது.
தற்போது இடமாற்றம் பெற்றவரின் இடத்திற்கு தற்காலிகமாக  அதே மாவட்டத்திலுள்ள ஒரு சிரேஷ்ட வைத்திய அதிகாரியை நியமிக்கும்படி உறுப்பினர்கள் உட்பட ஏனையோராலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளபோதும், மாகாண சுகாதார அமைச்சினால் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் வேறு மாவட்டத்தில் பிராந்திய சுகாதார வைத்திய சேவைகள் பணிப்பாளாராக கடமையற்றும் ஒருவர் தனது மாவட்டத்துடன் மேலதிகமாக பதவி வெற்றிடம் உள்ள மாவட்டத்தையும் சேர்த்து பணிபுரியுமாறு ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தொடர்பாக பல முறைப்பாடுகள் உள்ளமை தொடர்பாக நான் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளேன்.

எனவே மோசடி நடந்ததாக கூறப்படும் மாவட்டத்தில் இவரை நியமிப்பது நடைபெற்ற மோசடிகளை மூடி மறைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். குறித்த நியமனத்திற்கு எதிராக பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள்; கிடைக்கப்பெற்றுள்ளது.
மன்னார் மாவட்ட சுகாதாரத் திணைக்கள நிர்வாகம் மிகவும் சீரழிந்து காணப்படுகின்றது. பல அலுவலகர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

பல்வேறு பிரச்சினைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இவற்றுக்கு எதிராக   நடவடிக்கை எடுக்கப்பட்டு திணைக்கள தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டாலும் இங்கு மாகாண சுகாதார அமைச்சரின் அறிவுறுத்தல்கள் அலட்சியம் செய்யப்பட்டு புறக்கணிக்கப்படுகின்றன.
இதற்குரிய மேலதிக எந்த நடவடிக்கைகளும் மாகாண சுகாதார அமைச்சு மேற்கொள்ளவில்லை. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏற்கெனவே இடமாற்றம் பெற்றுள்ளார். இவரை விடுவிப்பதிலும் பின்புறத்தில் சில அரசியல் அளுத்தங்கள் காணப்படுவதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன.

எனினும் மாகாண சுகாதார அமைச்சு தனக்கிருக்கும் அதிகாரத்தின் படி இவரை விடுவிக்கவும் வேறொருவரை பதில் கடமைக்கு உடனடியாக நியமிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளாமல் உள்ளது.

இங்கு பல ஊழியர்கள் சம்பள நிறுத்தம் செய்யப்பட்டும் அநீதியான முறையில் இடமாற்றம் செய்யப்பட்டும் துன்பப்படுகின்றனர். மேலும் ஊழியர்களிடையே பாரபட்சமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறான முறையில் வடமாகாண சபையில் சில அமைச்சர்கள் மந்தகதியில் செயற்படுவது சில அமைச்சர்களின் ஊழல் சம்மந்தமாக வெளிவரும் செய்திகளும் சில வேளைகளில் மக்கள் கடமையை மேற்கொள்ளாமல் வெறும் விளம்பரச் செயற்பாடுகளை மேற்கொள்வதாக உள்ளது.

ஏற்கெனவே எமது மாகாண சபையின் வெற்றியின் பின் தமக்கு நீதி கிடைக்கும் என நம்பியிருந்த மக்களுக்கு மனத் தளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

எனவே, கூட்டமைப்பின் அரசியல் தலைவர்கள் சிந்தித்து மக்களின் நலனை கருத்திற்கொண்டு கட்சி அரசியலுக்கு அப்பால் சுயநலத்தற்கு அப்பால் ஒன்றிணைந்து ஒரே கட்சியாக இணைந்து எம் மக்களுக்காக உழைக்க வேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .