2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விபூசிகா உடமைகளை எடுத்துக்கொண்டார்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 07 , பி.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பாலேந்திரன் விபூசிகாவின் (13) வீட்டிலிருந்த உடமைகள் பொலிஸார் மற்றும் கண்டாவளை சிறுவர் நன்னடத்தை அதிகாரி விஜயகுமார் சுரேஸ் ஆகியோர் முன்னிலையில் விபூசிகா திங்கட்கிழமை (07) எடுத்துக் கொண்டார்.

விபூசிகாவின் உடமைகளை அவரது வீட்டிலிருந்து எடுப்பதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் கடந்த மார்ச் 31 ஆம் திகதி அனுமதியளித்திருந்தமையை அடுத்தே சிறுமியின் வீட்டிலிருந்த நகைகள் மற்றும் அவரது உடமைகள் திங்கட்கிழமை (07) எடுக்கப்பட்டன.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினையடுத்து, சந்தேகநபர் ஒருவர் ஒளிந்திருந்ததாகக் கூறப்படும் வீட்டிலிருந்து காணாமற்போன இளைஞர் ஒருவரின் தாயும் சகோதரியும் கடந்த 13 ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து இவர்கள் இருவரும், கடந்த மார்ச் 14ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன் பிரகாரம் தாயாரான பாலேந்திரன் ஜெயக்குமாரிக்கு (50) 3 மாதகாலம் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். அத்துடன் மகள் விபூசிகா  வைத்தியச் சான்றிதழ் பெறுவதற்காக சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மருத்துவச் சான்றிதழ் பெற்று சிறுமியினை கடந்த 17 ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி ஆஜர்ப்படுத்தினார். இதன்போது நீதவான், சிறுமியினை  31 ஆம் திகதி வரை கிளிநொச்சியிலுள்ள சைவச் சிறுவர் இல்லமான மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் ஒப்படைத்து பராமரிக்கும்படி சிறுவர் நன்னடத்தை அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தார்.

 தொடர்ந்து வழக்கு கடந்த 31 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சிறுமியினை தொடர்ந்தும் குறித்த சிறுவர் இல்லத்தில் வைத்து பராமரிக்கும் படியும், சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் மற்றும் பொலிஸாருடன் சென்று சிறுமியின் வீட்டிலிருக்கும் உடமைகளை சிறுமி எடுத்துக் கொள்ளவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .