2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பொதுபலசேனாவுக்கு அமைச்சர் றிஷாட் கண்டனம்

Super User   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்.

ஜாதிக பலசேனா கொழும்பு நிப்போன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் மாநாட்டை பொதுபலசேனா அமைப்பு குழப்பியதை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடுமையாக கண்டிக்கிறது என்று  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்ருமா றிஷாட் பதியுதீன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது.

கடந்த புதன்கிழமை (09) இனங்களிடையே புரிந்துணர்வையும் சேர்ந்து வாழ்தலையும் தனது நோக்காகக் கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்படும் ஜாதிக பல சேனா என்ற அமைப்பினால் கொழும்பு கொம்பனித்தெருவிலுள்ள நிப்போன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டை குழப்பிய 'பொது பல சேனாவின'; அடாவடித்தனமானதும் நேர்மையற்றதுமான செயற்பாட்டை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

இக்குழப்பமானது ஊடகவியலாளர் கருத்தரங்கின் ஏற்பாட்டுக்குழுவினரின் பேரில் சமூகமளித்திருந்த சட்டத்தின் பாதுகாவலர்களுக்கும் அவர்களது கௌரவத்திற்கும் பங்கம் விளைவிக்கும் விதத்தில் அமைந்திருந்தது. அக்குழப்பக்காரர்கள் அந்த ஊடகவியலாளர்கள் கருத்தரங்கின் ஏற்பாட்டாளர்களை மிரட்டியதுடன் சட்டத்தையும் ஒழுங்கையும் மதியாது அந்த கருத்தரங்கையே கைவிடுவதற்கு கட்டாயப்படுத்தியதுடன் மன்னிப்புக் கேட்குமாறும் அவர்களைத் தடுத்து மறித்து பயமுறுத்தி நிர்ப்பந்தித்துள்ளனர்.

எங்கள் தாய்நாட்டின் புனித புத்த மதத்தின் காவலர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு சட்டத்தின் பாதுகாவலர்களை அவமதித்துத் திரியும் தீவிரவாதிகளை மட்டுப்படுத்தி சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநிறுத்துமாறு அரசாங்கத்தையும் சட்டத்தின் காவலாளர்களையும் இத்தால் கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த இரண்டு வருடங்களாக தறிகெட்டுத்திரியும் பொது பல சேனா இயக்கம் இந்நாட்டில் சமாதானத்துடன் வாழும் சிறுபான்மையினரை குறிப்பாக முஸ்லிம்களை குறிவைத்து தாக்கிவருகிறது. இந்த இயக்கத்தின் இக்கொடூர செயற்பாட்டை நிறுத்தத்தவறிய சட்டப்பாதுகாவலர்களின் ஏனோ தானோ என்ற அசமந்தப் போக்கு பொது பல சேனா உறுப்பினர்களுக்கு தைரியமளித்து ஊடகவியலாளர்கள் முன்னிலையிலும் நிலைகெட்டு தாண்டவமாட வழி செய்துள்ளது.

இலங்கை வரலாற்றில் முஸ்லிம் சமூகமானது ஒரு தேசப்பற்றுள்ள சமூகமென்று நிறூபித்துள்ளது. ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் பலவந்தமாக அவர்களது பரம்பரை கிராமங்களிலிருந்தும் இருப்பிடங்களிலிருந்தும் இரண்டு மணித்தியாலங்களில் அவர்கள் வாழ்ந்த பிரதேசத்திலிருந்து 1990 ம் ஆண்டு வெளியேற்றப்பட்டதும் மேலும் காத்தான்குடி பள்ளி வாயிலிலும், ஏறாவூரிலும், பொலநறுவையிலுள்ள, அலிஞ்சிப்பொத்தான கிராமத்திலும் முஸ்லிம்கள் மிக மோசமான முறையில் படுகொலைசெய்யப்பட்டதும் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாதிகளின் ஈழ நாடு கோரிக்கைக்கு ஆதரவு வழங்காமையும் அவர்கள் தாய்நாட்டின் மீது கொண்ட பற்றுமே காரணமாகும்.

இந்த நாட்டில் 2009 ம் ஆண்டில் சமாதானம் உதயமானபோது மற்ற சமூகங்களைப் போன்றே முஸ்லிம் சமூகமும் அதன் பலன்களை அனுபவிக்க ஆர்வமாக இருந்தது. முஸ்லிம் சமூகத்தின் இந்தக் கனவுகள் பொதுபல சேனாவினால் ஏற்படுத்தப்பட்ட துவேச உணர்வுகளாலும் மனவேதனையாலும் கவலையாலும் தூள் தூளாக்கப்பட்டுள்ளது.

பொதுபல சேனா அமைப்பு அதன் பகிரங்க பிரவேசத்தை பல ஆண்டுகளாக செயல் முறையிலிருந்த ஹலால் உறுதிப்படுத்தும் சான்றிதழை தடை செய்ய வேண்டுமென்ற கோசத்தின் மூலம் ஆரம்பித்தது. மனித பண்பாடுகளுக்கு ஒவ்வாத வார்த்தைகளால் மிக உயர்ந்த சமய அமைப்பான ஜம்மியதுல் உலமா மீது வீசியெறிந்தது. இந்த நச்சுத்தன்மையான இழிவான செயலானது இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் மனதை எளிதில் பாதிக்கக்கூடியதாக இருந்தது. முஸ்லிம் சமூகத்தின் மீதான இந்த பொதுபல சேனாவின் முடிவில்லாத தாக்கம் பல விதமான முறையில் செயல்படுத்தப்பட்டது. இதில் ஒன்றுதான் கௌரவமான முஸ்லிம் பெண்களின் ஆடைகளைப் பரிகசிப்பது பள்ளிவாயில்களைத் தாக்குவது முஸ்லிம் வியாபாரஸ்தலங்களைத் தாக்குவது போன்ற செயற்பாடுகளும் மற்றும் அல் குர்ஆன் சட்டப்படி முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்களுக்கு கொடுக்கும் உணவில் துப்புவது போன்ற பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுவதுமாகும்.

நீண்ட கால இனங்களுக்கிடையான மோதல் ஒரு முடிவுக்கு வந்ததும் அதை தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து இவ்வகையான பொய்களை கட்டவிழ்த்து விடுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதும் இதன் பிண்ணனியில் உள்ள நோக்கமும் பதில் காண முடியாத கேள்வியாக மாறியுள்ளது.

இந்த நாட்டில் நாம் கஷ்டப்பட்டுப் பெற்ற சமாதானத்தை சீர்குலைப்பதற்காக ஒரு மறைமுக சக்தி பின்னணியில் இருக்குமோ என சந்தேகிக்கவும் முடிகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள்  காலத்தில் நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் மிக இலகுவான முறையில் எந்தக் கேள்வியுமில்லாமல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றதைப் போன்று அதற்கு சமமாக இப்போழுது பொதுபல சேனா செயற்படுகிறது என்பது எல்லோர் மனதிலும் ஒரு கேள்வியாக பதிலை எதிர்பார்த்திருக்கிறது.

தமிழீழ விடுதலைப்புலிகளின்; அதிகாரம் வட கிழக்கு மாகாணங்களில் மட்டுமே நீடித்திருந்தது. ஆனால் இங்கு பொதுபல சேனா தங்களது அதிகாரங்களை முழு இலங்கைத் தீவிலுமே செலுத்துகிறது. சில நாட்களுக்கு முன்பு பொது பல சேனா வட மாகாணம் சென்று அங்குள்ள அரச அதிகாரிகளையும் பல துன்பங்களுக்கு ஆளாக்கி அங்கு வாழ்ந்துவரும் முஸ்லிம்களையும் மிகவும் கடுமையாக முறையற்ற வார்த்தைகளால் பழித்திருப்பதும் மிகவும் கௌரவமான மதகுருமார்களுக்கு மட்டுமல்ல. சாதாரண மக்களுக்கும் ஒவ்வாத ஒரு செயலாகும்.

ஆகக்குறைந்தது தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத ஆட்சி சட்டத்தை பாதுகாப்போரால் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பொதுபல சேனாவின் அதிகாரங்கள் சட்டத்துக்கு மேம்பட்டதாக தென்படுகின்றது.

ஆகவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சட்டத்தையும் ஒழுங்கையும் எல்லோருக்கும் சமமாக அமுல்படுத்தும்படியும் யுத்த நிறுத்தத்திற்கு பின்னால் பொதுவாக சிறுபான்மை சமூகத்துக்கும் குறிப்பாக முஸ்லிம்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளை விசாரிக்க ஒரு கொமிஷனை நியமிக்கும்படியும் ஆட்சியில் இருப்பவர்களை கேட்பதுடன் இந்த புதுவருடத்தில் எல்லா சமூகங்களுக்கும் இந்த நாட்டின் சமாதானத்தை பயனுள்ளதாக ஆக்கும்படியும் கேட்டுக்கொள்கிறது என்றும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .