2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

காணி தருவதாக கூறி அழைத்துச்செல்ல முற்பட்டால் அறிவிக்கவும்: சி.வி.

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 30 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

எவராவது காணி தருவதாக கூறி அழைத்துச்செல்ல முற்பட்டால், உடனடியாக  தமக்கு அறிவியுங்கள் என்று  வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா, சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்திலுள்ள  மக்களை வியாழக்கிழமை  (29.1) முதலமைச்சர்  சந்தித்தபோது, அம்மக்களை வேறிடங்களுக்கு மாற்றி குறித்த காணியை வேறு திட்டங்களுக்காக சிலர் பயன்படுத்தவுள்ளதாக தெரியப்படுத்தப்பட்டது. இந்நிலையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இச்சந்திப்பின்போது கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, சிதம்பரபுரம் நிலன்புரி நிலையம் தொடர்பாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டது. எனினும், அரசாங்க அதிபர் இதுவரை செய்யவில்லை என்றும் முதலமைச்சருக்கு சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் வடமாகாண சுகாதார அமைச்சர், அரசாங்க அதிபருக்கு 3 தடவைகள் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு ஞாபகமூட்டியபோதிலும், மக்களுக்கு காணி வழங்குவதை செயற்படுத்தவில்லை.

இங்குள்ள மக்கள் இங்கேயே வசிக்க விரும்புகின்றனர். இவர்களின் இரண்டாவது தலைமுறையும் இங்கு வந்துள்ளது. அத்துடன், இவர்களுக்கான தொழில்வாய்ப்புகளும் இங்கேயே உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, அவர்கள் இங்கிருந்த வேறிடங்களுக்கு  செல்லமுடியாது. இந்தக் காணிகளை இங்குள்ள மக்களுக்கு வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை. போதுமான காணி காணப்படுகின்றது. அரை ஏக்கர்  படி குடும்பமொன்றுக்கு வழங்கமுடியும் என ஆணித்தரமாக முதலமைச்சருக்கு அவ்விடத்தில் வைத்து தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், முகாம் பற்றியும் அம்மக்கள் அவ்விடத்தில் குடியமர்த்தப்படவேண்டிய தேவை பற்றியும் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

இதன்போது, நலன்புரி நிலையத்திலுள்ளவர்களும்   தாம் படும் இன்னல்களை முதலமைச்சருக்கு தெரியப்படுத்தினர்

இவற்றை செவிமடுத்த முதலமைச்சர், இவ்விடயம் தொடர்பாக மீண்டும் ஒருமுறை ஒருங்கிணைப்புக்குழுக் கூட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு கோருவோம் என அமைச்சர் ப.சத்தியலிங்கத்திடம் தெரிவித்ததுடன், அங்கிருந்த மக்களிடம் இவ்விடயத்தை நானாக செய்ய முடியுமாக இருந்தால் நான் செய்வேன். அதனால், நாங்கள் தருவதாக கூறவில்லை. பார்க்கின்றோம் என்றே கூறியுள்ளோம். எனினும்,  இந்தமுறை உரிய நடவடிக்கை எடுப்போம்.  இந்நிலையில் நீங்கள் தொடர்ந்தும் இங்கேயே இருப்பதற்கு பாருங்கள். அதற்கான நடவடிக்கையை நாம் எடுப்போம். நீங்கள் வேறிடங்களில் காணி தருவதாக கூறி யாராவது அழைத்துச்செல்ல முற்பட்டால் எங்கும் செல்லாதீர்கள். இது தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு உடன் அறிவியுங்கள். வேறு பிரச்சினைகள் இருந்தாலும்  அவருக்கு உடன் அறிவியுங்கள்.
நாங்கள் தற்போது மத்திய அரசுடன் இவ்விடயம் தொடர்பாக பேசிக்கொண்டிருக்கின்றோம். எனவே விரைவில் நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .