2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இழுவை மீன்பிடி மீதான தடை: ‘நடைமுறைப்படுத்தப்படவில்லை’

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2017 செப்டெம்பர் 13 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடல் சூழலுக்கும் வளங்களுக்கும் அழிவை ஏற்படுத்தும் இழுவை மடி கொண்டு மேற்கொள்ளப்படும் மீன்பிடி முறையை தடைசெய்ய மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக நாடாளுமன்றம் ஊடாக சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட போதும் இன்று வரை குறித்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமையினால் உள்ளூரில் உள்ள மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு தொடர்ந்தும் முகம் கொடுத்து வருவதாக, வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.எம். ஆலம் தெரிவித்தார்.

மன்னார் மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தில், இன்று (13) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே ஆலம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆலம் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், உள்ளூரில் இத்தொழில் புரிவோர் முன்பை விட மிகவும் தீவிரமாக, தங்களின் தொழில் நடவடிக்கைகளை கடலையன்டிய கரையோரங்களிலும் செய்து வருகின்றார்கள். இதன் காரணமாக சிறுதொழில் புரியும் மீனவர்கள் மிகவும் பாதிப்படைதுடன் பட்டிவலை ஏனைய தொழில் செய்வோருக்கு பெரும் இழப்பு ஏற்படுத்துவதுடன் கரைவலை தொழில் புரிபவர்பகளுக்கும் இடையூறுகளை எதிர்நோக்குகின்றனர். 

இழுவை மடித் தொழில் முறையை, இத்தொழில் புரிவோரும் சில மீனவத் தலைவர்களும் சில அரசியல் பிரதிநிதிகளும் சில மதத் தலைவர்களும் கண்ணை மூடிக்கொண்டு நியாயப்படுத்துகின்றனர். இதனைவிட ஏனைய தொழில்களுக்கு நடைமுறையில் கூறப்பட்ட விடயங்களை தீவிரமாக கையாளும் கடற்தொழில் திணைக்களமும் இத்தொழில் புரிவோருக்கு சாதகமாகவே செயற்படுகின்றனர். 

எனவே, இச்சட்டமூலத்தை நடை முறைப்படுத்துவதில் கால தாமதம் செய்யும் ஒவ்வொரு நிமிடமும் வட மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் எதிர்காலத்தில் இழக்கப்படப்போவதை இத்தொழிலை நியாயப்படுத்துபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே, நிறைவேற்றப்பட்ட இழுவை மடிச்சட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த கடற்தொழில் திணைக்களம் மற்றும் கடற்படையினரை அமைச்சர் பணிப்பதுடன் மேலும் வெளிநாட்டுப் படகுகளுக்கான ஒழுங்கு விதிச் சட்ட திருத்தத்துக்கு தற்போது சட்டமா அதிபரின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதால் இச்சட்டத்தை விரைவாக நாடாளுமன்றில் நிறைவேற்றி, இதன் பிற்பாடு இந்திய தரப்புடனான மீனவர் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமாறும் ஏற்கெனவே விடுவிக்க இணங்கப்பட்ட படகுகள் போக மீதமாக இருக்கும் படகுகளுக்கு இச்சட்டம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதனையும் வட மாகாண மீனவர்களாகிய நாம்  கேரிக்கை விடுக்கின்றோம்” எனக் கூறினார். தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கடற்தொழில் அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .