Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 13 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
- க.அகரன்
“கனகராயன்குளம் கிராம அபிவிருத்தி சங்க காணியை பொலிஸாருக்கு வழங்குவதை வன்மையாக கண்டிக்கின்றோம்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அலுவலகம் இன்று (13) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“நீண்ட காலமாக கனகராயன்குள பொலிஸார், கிராம அபிவிருத்திச் சங்கத்துக்குச் சொந்தமான காணியையும், நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான காணியையும் கையகப்படுத்தி தங்கள் ஆளுகைக்குள் வைத்திருந்தார்கள்.
2013 ஆம் ஆண்டு பொலிஸாரின் சேவைக்கென பொதுமக்களின் மயானமாக பயன்படுத்தப்பட்டு வந்த பெரியகுளம் காணி வழங்கப்பட்டது. அதன் பின்பும் கனகராயன்குள பொலிஸார் கிராம அபிவிருத்தி சங்கத்துக்குச் சொந்தமான காணியையும் நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான காணியையும் விட மறுத்து வந்தார்கள்.
குறித்த பிரச்சினை தொடர்பாக வவுனியா வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடந்த 5 வருடங்களாக தொடர்ச்சியாக ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு வருட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலும் கனகராயன்குள பொலிஸார் தாம் விடுவிப்பதாக கூறிவந்த போதிலும் அக் காணிகளை தம் வசமே தொடர்ச்சியாக வைத்திருந்து அக் காணிகளில் சில அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து வந்துள்ளார்கள்.
இந்நிலையில், கடந்த வருட இறுதியில் புதிதாக மாற்றம் பெற்று வந்த வவுனியா மாவட்ட செயலர் சேமரத்தின விதான பத்திரன, குறித்த காணிகளை கனகராயன்குள பொலிஸாருக்கு வழங்குவதுக்குரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றார். கனகராயன்குளத்தில் பொதுத் தேவைகளுக்கான கட்டங்கள் கட்டுவதற்கோ, வைத்தியசாலை ஒன்றை அமைப்பதற்கோ எந்த ஒரு பொதுக்காணியும் இல்லாத நிலையில் மாவட்டச்செயலரின் நடவடிக்கை பலத்த சந்தேசகத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா வடக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற சிங்களக் குடியேற்றங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் கடந்த காலத்தில் பல நடவடிக்கைகள் நெடுங்கேணிக் கிராமங்களை அண்மித்துள்ள பகுதிகளில் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற அரசஅதிகாரிகள் குறித்த இப்பிரச்சினையிலும் பாரமுகமாக இருப்பதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன் கிராம அபிவிருத்திக்கு சொந்தமானதும் நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான காணியினையும் கனகராயன்குளப் பொலிஸாருக்கு வழங்குவதுக்கு மேற்கொள்ளும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தி கனகராயன்குளப் பொதுத் தேவைகளுக்கு அக்காணிகளை விடுவிக்குமாறு கோருவதுடன் தவறும் பட்சத்தில் சகல தமிழ்த்தரப்புக்களையும் பொது அமைப்புக்களையும் ஒன்றிணைத்து மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்றிணையும் மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் என்பதனை சகல அரச அதிகாரிகளுக்கும், மாவட்ட செயலரினதும் கவனத்துக்குக் கொண்டுவருவதுடன் இச் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago