2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஜோசப்வாஸ் நகர் கிராம மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரிக்கை

Super User   / 2013 ஜூலை 25 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராம மக்களின் அவல நிலையை பூர்த்தி செய்யுமாறு கோரி மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது. அணையாத தீபங்கள் பெண்கள் தலைமைத்துவ அமைப்பினால் மன்னார் பிரதேச சபையின் தலைவருக்கு நேற்று புதன்கிழமை இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"ஜோசப்வாஸ் நகர் மக்களாகிய நாங்கள் 1999 ஆண்டு யுத்தத்தின் காரணமாக எமது உயிர்களை பாதுகாக்கும் நோக்குடன் விடத்தல் தீவிலிருந்து இடம்பெயர்ந்து கடல் மார்க்கமாக பள்ளிமுனை கிராமத்தின் கடற் பகுதியினை வந்தடைந்தோம்.

வந்தடைந்த நாள் முதல் எங்கள் எல்லோரையும் மாவட்ட செயலகத்தினுடாக பேசாலை நலன்புரி நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு இரண்டு வருடங்களாக அங்கு அகதி வாழ்கை வாழ்ந்து வந்ததை நீங்கள் அனைவரும் அறிந்த உண்மையே.

அச்சமயத்தில் 2001ஆம்; ஆண்டு மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், எங்களை நேரில் வந்து சந்தித்து எமது பிரச்சினைகளை கேட்டறிந்தகொண்டார். அன்று தொடக்கம் எங்கள் மக்களின் மீள்குடியேற்றத்திற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தோட்டவெளி கிராமத்திற்கு அண்மையில் காட்டுப் பகுதியாக காணப்பட்ட இடத்தினை துப்பரவு செய்து தரப்பட்டு தற்காலிகமாக குடியமார்த்தப்பட்டோம்.

அப்போது எமது நிலையினை அறிந்து கொண்ட ஆர்.டி.எப். நிறுவனம் எம்மை வந்து சந்தித்து மக்களின் அடிப்படை பிரச்சினைகளை கேட்டறிந்து தற்காலிகமாக குடியமர்வதற்கான தற்காலிக கொட்டகையினை அமைப்பதற்கு உதவி வழங்கினர்.

இது மட்டுமன்றி அன்றில் இருந்து அரசாங்கத்தினால் உணவு முத்திரையும் குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் வழங்கப்பட்டது. பின்னர் உணவு முத்திரையினை மீள் ஒப்படைக்குமாறு பணிப்புரைவிடுக்கப்பட்டது. ஒப்படைக்கும் வேளையில் மக்களாகிய எங்களுக்கு அங்கு வரப்பட்ட அரச உத்தியோகஸ்தர்களினால் கூறப்பட்டது உணவுமுத்திரையினை நிறுத்தி உங்களுக்கு 25,000 ரூபாவும் வீட்டுத்திட்டமும் தருவதாக கூறப்பட்டது.

அன்று மக்களாகிய எமக்கு இருந்த சந்தோசம் மிகப் பெரியதாக காணப்பட்டது. ஆனால் எமக்கு கிடைத்தது 25,000 ரூபா மட்டுமே அன்றில் இருந்து இன்று வரைக்கும் மக்களாகிய நாம் ஒலை குடிசையில் தான் வாழ்ந்து வருகின்றோம். ஆனாலும் 07 வருடங்கள் கழிந்த நிலையில் கூட அரசாங்கத்தினாலோ பிரதேச சபையினாலோ மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளவும் இல்லை.

அப்படி மேற்கொள்ளுவதற்கான திட்டம் தீட்டிருந்தால் மக்களுக்கு தெரியப்படுத்தப்படவும் இல்லை என்பது வெந்த புண்ணில் வேல் பாச்சும் செயலாக காணப்படுகின்றது. வருடா வருடம் மழைக்குள்ளும் வெள்ளத்திற்குள்ளும் வாழ்ந்து வருகின்றோம் .

ஒலையால் வேயப்பட்டுள்ள எமது வீடுகள் தற்போது காற்றடி தூக்கி எறியப்படும் நிலை காணப்படுகின்றது. இதனால் எமது கிராமத்தில் காணப்படும் ஒட்டு மொத்த குடும்பங்களும்; பாதிப்படையும் நிலை காணப்படுகின்றது.

தற்போது யுத்தம் முடிவுற்ற நிலையில்  இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் எமது கிராமத்தின் 420 குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டதன் காரணத்தினை அரசாங்க திணைக்கள அதிகாரிகள் மக்களுக்கு சரியான முறையில் தெளிவுப்படத்தவும் இல்லை இதை பற்றி கதைத்ததும் இல்லை.

ஆனால் மக்களாகிய நாம் கிராம அதிகாரியிடம் கேட்டுள்ளோம் அவரோ இதை பற்றி எழுதி ஜனாதிபதிக்கு அனுப்புங்கள் என மக்களாகிய எங்களுக்கு சுருக்கமான விதத்தில் பதிலினை அளித்துள்ளார். மீனவ தொழில் செய்வதற்கான நிரந்தரமானதொரு துறைமுகம் எமக்கு கொடுக்கப்படவில்லை.

எங்களுக்கு பின்வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு வேண்டிக்கொள்கின்றோம். அவையாவன:
  • இந்திய அரசாங்கத்தின் வீட்டுத்திட்டம் வழங்கப்பட வேண்டும்
  • மலசலக்கூடம் இல்லாதவர்களுக்கு மலசலகூடம் அமைத்தக் கொடுக்கப்பட வேண்டும்
  • கிராமத்தினுள் வீதிவிளக்குகள் பொருத்தப்படல் வேண்டும்
  • மின்சாரம் இல்லாதவர்களுக்கு மின்சாரத்தினை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • பெண்கள் தலமைவகிக்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிதிட்டங்களை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .