2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கை உலக T20 சம்பியன்; நீண்ட பெருங்கனவு பலித்தது

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஐந்தாவது உலக T20 கிண்ணம் ஐந்தாவது புதிய சாம்பியனுக்கு...

கடந்த கட்டுரையில் எழுதியிருந்த எண் கோலம் உண்மையானது. கடந்தமுறை போட்டியை நடத்திய நாடு இம்முறை சம்பியன் ஆகியுள்ளது.

எத்தனை ஆண்டுகள் காத்திருந்தோம் இப்படி ஒரு வெற்றிக்கு... எத்தனை இறுதிப்போட்டிகளில் தோற்று கவலையுடன் தொடர்ந்து வந்த நாட்களைக் கழித்து முடங்கியிருப்போம்?

ஒவ்வொரு தரமும் இதோ ஒரு கிண்ணம், அதிலும் ICC கிண்ணம் எமக்குத் தான் என்று நினைத்திருக்க, வெல்கிறோம் என்று பாதிவேளை நினைத்திருக்க, கையை விட்டுக் கிண்ணம் போக வெறுங்கையுடன் வந்திருப்போம்...

இப்படி ஏங்கிக்கொண்டிருந்த இலங்கை ரசிகர்களுக்கு கொண்டாட்டம் மிகுந்த ஞாயிறு இரவு தொடர்ச்சியான மகிழ்ச்சியை இன்னும் தந்துகொண்டே இருக்கிறது.


திசர பெரேராவின் வெற்றி, சிக்ஸர் உலகம் முழுவதும் வாழும் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு வழங்கிய உற்சாகம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் மூலம் கிடைத்த மகிழ்ச்சி.

இலங்கை கிரிக்கெட்டின் இரு பெரும் சிகரங்கள் தமது இறுதி T20 சர்வதேசத் தொடராக இத்தொடரை அறிவித்தபிறகு விடைபெறுகின்ற நேரமாவது இந்த இரு கனவான்களுக்கும் பரிசாகக் கிண்ணம் ஒன்று வெற்றிகொள்ளப்பட்டிருப்பதானது இலங்கை கிரிக்கெட்டுக்கும் ரசிகர்களுக்கும் மனது மறக்காத விடயமாக மாறியுள்ளது.

உலக T20 கிண்ணத் தொடர் ஆரம்பிக்கும் முன்னரே இலங்கைக்கு ஒரு பக்கம் அழுத்தத்தையும் மறுபக்கம் வெல்லவே வேண்டும் என்ற உத்வேகத்தையும் வழங்கியிருந்தது.

இலங்கை அணியை விட இறுதிப்போட்டிக்கு செல்லும்போது இந்திய அணிக்கு மனநிலையில் அதிக உறுதியும் அணி நிலையில் அதிக உறுதியும் இருந்தது பற்றி முன்னைய கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன்.

தொடர்ச்சியான இறுதிப்போட்டி வெற்றிகள் (அதிலும் டோனியின் தலைமையிலேயே) இந்தியாவுக்கு அளித்திருந்த மனவுறுதியும் தொடர்ச்சியாக இறுதிப்போட்டிகளில் இலங்கை கண்டுவந்த தோல்விகள் இலங்கைக்கு அளித்திருந்த கிலேசமும் இந்தியாவை வெற்றிவாய்ப்பு அதிகமுடைய அணியாகக் காட்டியிருந்தன.

எனினும் இலங்கை அணியிடம் நியூஸிலாந்துக்கு எதிரான வெற்றிக்குப் பின் ஏற்பட்டிருந்த ஓர் உறுதியான மாறுதல், இந்தியாவுக்கு எதிரான பந்துவீச்சின் போது மிகத் துல்லியமாக தெரிந்திருந்தது.

இலங்கையும் இந்தியாவும் மோதிக்கொண்ட 3ஆவது ICC கிண்ணம் ஒன்றின் இறுதிப்போட்டி இதுவாகும். (2002 - Champions Trophy - மழையினால் கிண்ணம் பகிரப்பட்டது. 2011 உலகக் கிண்ணம் - இந்தியா வென்றது)

போட்டி ஆரம்பிக்குமுன் பெய்த மழையும், மழை வருவதற்கான அறிகுறிகளும் மழை விதியை மீண்டும் அழைக்குமோ அல்லது பகிர்வோ என்ற கேள்விகளையும் எழுப்பாமல் இல்லை.

ஆனால், சற்றுத் தாமதித்த போட்டியானது இடைநடுவே ஒரு மழைத்துளி இடையூறு கூட இல்லாமல் இலங்கைக்கு மறக்கமுடியாத வெற்றியைப் பரிசளித்துப் போயுள்ளது.

இப்போது இலங்கை அணியும் இந்தியாவைப் போலவே, (மூன்றாவது அணியாக மேற்கிந்தியத் தீவுகளையும் சொல்லலாம்) ICCயின் எல்லாக் கிண்ணங்களையும் வென்றெடுத்துள்ள பெருமையைப் பெற்றுள்ளது.

இலங்கை - 1996 - உலகக் கிண்ணம்


2002 - சம்பியன்ஸ் கிண்ணம் (மினி உலகக் கிண்ணம்) - இந்தியாவுடன் இணை சம்பியன். இப்போது உலக T20 சம்பியன்

இன்னொரு சுவாரஸ்ய விடயம்...

இந்தியா டெஸ்ட் அந்தஸ்து கிடைத்து 50 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது முதலாவது உலகக் கிண்ணத்தை 1983இல் வென்றது. அதன் பின்னர் அவர்களுக்கான அடுத்த ICC கிண்ணத்தை வென்றெடுக்க 24 ஆண்டுகள் ஆனது. (தோனியின் தலைமையில் 2007இல் உலக T20), (சம்பியன்ஸ் கிண்ணம் 2002இல் இந்தியாவுக்கு இலங்கையோடு பகிரப்பட்டது) இந்த நீண்டகாலக் காத்திருப்புக்குப் பின்னர் அடுத்தடுத்து ICC கிண்ணங்கள் கிடைத்தன.

இலங்கையை இந்தியாவோடு ஒப்பிடும்போது விரைவு.

டெஸ்ட் அந்தஸ்து கிடைத்து 15 ஆண்டுகளுக்குள் 1996இல் உலகக் கிண்ணம் கிடைத்தது. இப்போது 18 ஆண்டுகளில் அடுத்த ICC கிண்ணமாக உலக T20. இது இவ்வளவு காலம் இருந்து வந்த மனத்தடை ஒன்றை உடைப்பதாக அமையலாம். இனி கிண்ணங்கள் குவியலாம்.


இலங்கை அணியின் இரண்டு பொற்காலங்களைச் சேர்ந்த இரு தலைமுறை வீரர்களுக்கும் ஓர் உலகக்கிண்ணம்/ ICC கிண்ணமாவது அவர்களது ஓய்வுக்கு முன்னர் கிடைத்திருப்பது தன்னலமற்று அவர்கள் தாய்நாட்டுக்கு விளையாடியதற்கான பரிசாக அமைகிறது.

அர்ஜுன ரணதுங்க, அரவிந்த டீ சில்வா, ரொஷான் மகாநாம, அசங்க குருசிங்க, முரளிதரன், வாஸ், ஹஷான் திலகரத்ன, சனத் ஜயசூரிய, ரொமேஷ் களுவிதாரண, குமார் தர்மசேன, மார்வன் அத்தப்பத்து ஆகிய மூத்த வீரர்கள் இலங்கையின் முதலாவது உலகக் கிண்ணத்தைக் கொண்டுவந்தவர்கள்.


இவர்களில் அர்ஜுன, குருசிங்க, மகாநாம, களுவிதாரண தவிர ஏனையோருக்கு 2002 சம்பியன்ஸ் கிண்ணத்தை வெல்லக்கூடிய பேறும் கிடைத்தது.

இந்த 90-2000 இருந்த அணிக்குப் பிறகு இலங்கையின் மிகச் சிறந்த சாதனைகள் படைத்த சிரேஷ்ட வீரர்கள் மஹேல, சங்கா, டில்ஷான், ஏன் மாலிங்க, ரங்கன ஹேரத் ஆகியோர் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் ஓய்வு காலத்தை நெருங்கி வரும் நிலையில் இதுவரை உலகக்கிண்ண, மற்றும் ICC கிண்ணங்களின் தோல்விகளுடன் கழிந்த விரக்திப் பொழுதுகள் ஒரு மிகப் பெரிய வெற்றிக் கனியைப் பரிசளித்துள்ளன.


பங்களாதேஷின் இரவுப் பனி மிர்ப்பூரில் பெரிதாகத் தாக்கம் செலுத்தாவிட்டாலும், மழையின் அச்சுறுத்தல் காரணமாக நாணய சுழற்சியின் முக்கியத்துவம் இருந்தது.

இலங்கையின் தலைவராக மூன்றாவது போட்டியில் தலைமை தாங்கிய லசித் மாலிங்க, இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் என்று முடிவெடுக்க சில காரணங்கள் இருந்தன.

மழை குறுக்கிட்டால் டக்வேர்த் - லூயிஸ் முறைப்படி இலக்கை அடைவது சாதகமானது.

தொடர்ச்சியாக இந்தியாவை வெற்றிகரத் துரத்தியடிக்கும் அணியாகக் காடும் பலமான துடுப்பாட்ட வரிசை எந்தப்பெரிய இலக்குகளையும் அண்மைக்காலமாக வெற்றிகண்டிருந்தன. அதிலும் குறிப்பாக விராட் கோளி இரண்டாவது துடுப்பாட்டத்தில் ஒரு மன்னர்.

ஆனால், கோளி முதலாவதாக ஆடினாலும் கூடத் தன்னால் வேகம் குறையாமலும் நிதானம் தவறாமலும் ஓட்டங்களைக் குவிக்க முடியும் என்பதை அதிரடியாட்டம் ஆடிக் காட்டியிருந்தார்.

ஆனால் இந்தியாவின் துரதிர்ஷ்டம் அவர் மட்டுமே இறுதிப்போட்டியில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடியிருந்தார்.

இலங்கை அணியின் வியூகங்களுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது.

இந்தியாவின் ஒவ்வொரு துடுப்பாட்ட வீரர்களையும் பொறியில் சிக்கவைக்க அவர்கள் வகுத்த பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு வியூகங்களால் ஓட்டங்களைப் பெறுவதில் இந்தியாவின் விராட் கோளி தவிர்ந்த எல்லோருமே திக்கித் திணறினர்.

அதிலும் யுவராஜ் சிங்கும் வழமையாக இறுதி ஓவர்களில் சிக்சர் மழை பொழியும் தலைவர் டோனியும் மாட்டிக்கொண்டது தான் பெரும் ஆச்சரியம்.

நான் முன்னைய கட்டுரையில், "அடிக்கடி T20 வகைப் போட்டிகளில் இவ்விரு அணிகளும் சந்தித்திராவிட்டாலும் கூட, இரு அணிகளினதும் ஒவ்வொரு வீரர் பற்றியும், அணிகளின் பலம், பலவீனம் பற்றியுமே இரு பக்கமும் கொஞ்சமேனும் சந்தேகம் இல்லாமல் தெரியும்" என்று சொல்லியிருந்ததைப்போல ஒவ்வொரு இந்திய வீரர்களின் பலவீனம் அறிந்து அந்த இடங்களில் பந்துகளைத் துல்லியமாக இலங்கைப் பந்துவீச்சாளர்கள் வீசியிருந்தார்கள்.


களத்தடுப்பாளர்கள் புதிய, புதிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள்.

குழம்பிப்போன இந்திய வீரர்களில், குழம்பாமல், இலங்கை வீரர்களால் சலனப்படுத்தப்படாமல் அடித்தாடிய ஒரேயொருவர் விராட் கோளி மட்டுமே. உலகின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரராக துரிதமாக எழுந்துவந்திருக்கிறார் கோளி.

இலங்கையின் இந்த வியூக வகுப்பில் மாலிங்கவுக்கு நிச்சயம் மஹேல, சங்கா ஆகியோரின் துணை இருந்திருக்கும்.

விராட் கோளி, 58 பந்துகளில் 77 ஓட்டங்கள்


துடுப்பெடுத்தாடிய ஏனைய அத்தனை இந்திய வீரர்களும் 62 பந்துகளில் 53 ஓட்டங்கள்.

ஆனால் இலங்கை அணி வீசிய கடைசி 5 ஓவர்களில் இந்தியாவால் 30 ஓட்டங்களையே பெற முடிந்தது. அதிலும் கடைசி 3 ஓவர்களில் கோளியே ஓட்டங்கள் குவிக்கத் தடுமாறினார்.

அவ்வளவு துல்லியமாக இலங்கையின் பந்துவீச்சாளர்கள் அடித்தாட முடியாதவாறு பந்துவீசி இருந்தார்கள்.

உலகின் மிகச் சிறந்த T20 இறுதி ஓவர்களின் பந்துவீச்சாக இதைக் குறிப்பிடலாம்.

ஆனால் கோளி, டோனி ஆகியோர் ரசிகர்களின் வசைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள, யுவராஜ் சிங் மட்டும் இந்திய ரசிகர்களின் கோபத்துக்கும் பழிச் சொல்லுக்கும் ஆளாகிப்போனார்.

கடைசி 4 ஓவர்களில் யுவராஜ் - 9 பந்துகளில் 4 ஓட்டங்கள், டோனி - 7 பந்துகளில் 4 ஓட்டங்கள், கோளி - 8 பந்துகளில் 7 ஓட்டங்கள்.

லசித் மாலிங்க மட்டுமில்லாமல், குலசேகர, சச்சித்திர சேனநாயக்க ஆகியோரும் கூட மிகக் கட்டுப்பாடாக, முன்னாள், இந்நாள் வீரர்களின் பாராட்டுக்களைப் பெறும் அளவுக்கு மிகச் சிறப்பாகப் பந்துவீசி இருந்தார்கள்.

ஒரு பந்துவீச்சாளர் அணித் தலைவராக இருந்து ஓர் அணிக்கு ICC கிண்ணம் ஒன்றைப் பெற்றுக்கொடுத்த முதல் சந்தர்ப்பம் இது.


அதேபோல, அரையிறுதி வரை எந்தவொரு போட்டிகளையும் தோற்காமல் வந்த அணி, கிண்ணம் வென்றதில்லை என்பது மீண்டும் நடந்தது.

131 என்ற இலக்கு மேலோட்டமாக இலகு போல் தெரிந்தாலும், இறுதிப்போட்டியின் அழுத்தமும் இலங்கை அணிக்கெதிராக முன்னைய இந்திய செல்வாக்கும் இந்தப் போட்டியை போட்டித்தன்மையுடையதாக மாற்றும் என்றே எண்ண வைத்தது.

அதிலும் இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கையில் கொஞ்சம் சிக்கல் இருக்கும் என்ற எண்ணம் பரவலாக இருந்தது.

குசல் ஜனித் பெரேரா, டில்ஷான் ஆகியோரின் ஆட்டமிழப்புக்களுக்குப் பின், தங்கள் இறுதிப்போட்டியில் விளையாடும் கிரிக்கெட் நண்பர்களும் கிரிக்கெட் தாண்டியும் உயிருக்குயிரான நண்பர்களாக இருக்கும் இலங்கையின் இரு கிரிக்கெட் சிகரங்கள் சேர்ந்துகொண்டார்கள்.

தமக்கிடையே 1,700 மணிநேரங்களையும், 600க்கு மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளையும் கொண்டுள்ள மஹேலவும் சங்காவும் T20 சர்வதேசப் போட்டியோன்றில் இறுதியாக இணைந்தார்கள்.


இந்த இறுதி இணைப்பு தனிப்பட்ட முறையில் இருவருக்கும் ஒரு முக்கிய கிண்ணம் பெறும் பெருங்கனவுடன் தங்கள் நாட்டுக்கான பெரிய கடமையொன்றை நிறைவு செய்யும் இறுதி முயற்சியோன்றையும் முன்கொண்டு இவர்கள் பெற்ற ஓட்டங்கள் 24 ஆனால் அந்த 24உம் இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமானவையாக அமைந்தன.

மஹேல ஆட்டமிழக்கும் நேரம் இலங்கையின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டிராவிட்டாலும் கூட, முன்னைய 4 இன்னிங்ஸில் மொத்தமாக 19 ஓட்டங்களையே பெற்றிருந்த சங்கக்கார நிதானமாக நின்று ஓட்டங்கள் பெறும் நிலையில் இருந்தார்.

சங்காவுக்கு மறுபக்கம் துணை இருந்தால் வெற்றி நிச்சயம் என்னும்போது, இந்தத்தொடர் முழுதும் இலங்கைக்கு நல்ல முடிவுத் தருணங்களைப் பெற்றுக்கொடுத்த Finisher மத்தியூஸ் வருவார் என்று நம்பியிருக்க, அதிரடியாக ஆடும், ஆனால் இத்தொடரில் பெரிதாக ஓட்டங்கள் பெறாத இன்னொருவர் திசர பெரேரா அனுப்பிவைக்கப்பட்டார்.

இது இலங்கையின் இன்னொரு சாமர்த்தியமான அணுகுமுறையாக அமைந்தது.

முக்கியமான தருணங்களில் formக்குத் திரும்பி தேவையான ஓட்டங்களைப் பெறும் Big match players போல திசர நிகழ்த்திய அதிரடி ஓட்டக்குவிப்பு இந்தியப் பந்துவீச்சாளர்களை நிலைகுலைய வைத்தது.

இது நிதானமாக ஓட்டங்கள் பெற்றுக்கொண்டிருந்த சங்கா, வேகமாக ஓட்டங்கள் குவிக்க வாய்ப்பை வழங்கியது.

சங்கக்கார தனது 8ஆவது T20 சர்வதேச அரைச் சதத்தைப் பெற்ற அதேவேளை, 25,000 சர்வதேச ஓட்டங்களையும் பூர்த்தி செய்தார்.


முன்னதாக மஹேல உலக T20 போட்டிகளில் 1,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார்.

வழமையாக மைல் கற்களை அடையும் நேரங்களில் அமைதியாகக் கொண்டாடும் சங்கா, இந்த அரைச் சதத்தை மிக உற்சாகம் + ஆவேசமாகக் கொண்டாடிய காட்சி, இந்தப் போட்டியும் சங்காவின் ஓட்டங்களும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதைக் காட்டி நின்றன.

திசர அடித்த மூன்றாவது சிக்ஸர், இலங்கையின் வெற்றி ஓட்டங்களைக் கொண்டுவந்தது. 13 பந்துகள் மீதமிருக்க இலகுவான வெற்றியாக அமைந்தது.

இந்த வெற்றிக்காகவே காத்திருந்த இலங்கை ரசிகர்கள், ஓடிவந்து மைதானத்தின் நடுப்பகுதியில் சங்காவையும் திசரவையும் ஆரத்தழுவிய காட்சி மீண்டும் 1996ஐ மனதுக்குள் கொண்டுவந்தது.

சின்னக் குழநதைகள் போல குதூகலித்தாலும், மறக்க முடியாத இந்த வெற்றியின் புல்லரிப்பும் நெஞ்சு நிறைந்த வெற்றிக்களிப்புடன் ஆனந்தக் கண்ணீருடன் கொண்டாடிய இலங்கையின் சிரேஷ்ட வீரர்கள், எத்தனை காலம் இந்தத் தருணத்துக்காகக் காத்திருந்தார்கள் என்று சிந்திக்க செய்தது.

அதிலும் தேர்வாளர் குழுவின் தலைவர் சனத் ஜயசூரிய (இவர் இத்தொடர் ஆரம்பிக்க முதல் மஹெல & சந்காவுடன் கருத்து வேற்றுமைகளைக் கொண்டிருந்தாலும் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட தருணம் விளையாட்டின் வெற்றி எல்லாவற்றையும் மறக்கடிக்கும் என்று காட்டி நின்றது), பயிற்றுவிப்பாளர் குழாமில் இருக்கும் முன்னாள் வீரர்கள், இன்னும் முன்னாள் வீரர்கள் அனைவரும் களத்தில் நின்று வாழ்த்தி, மகிழ்ச்சியில் கலந்துகொண்டது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

இலங்கையின் இந்த வெற்றி சில முக்கியமான அடிப்படைகளை அடையாளப்படுத்தியுள்ளது.

லசித் மாலிங்க மற்றும் இலங்கையின் பந்துவீச்சாளர்களின் இறுதி ஓவர்களின் கட்டுப்பாடான பந்துவீச்சு.

திட்டமிட்ட வியூகங்கள்


சிரேஷ்ட வீரர்கள் கைகொடுத்த தேவையான பொழுதுகள்.

இவ்வளவுக்கும் இந்தத் தொடர் முழுவதும் அதிக ஓட்டங்கள் குவித்தோர் வரிசையில் முதல் வீரர் விராட் கோளி.

இலங்கையின் மஹேல ஜெயவர்த்தன தான் இலங்கை சார்பாகக் கூடுதலான ஓட்டங்கள் பெற்றவர். கோளி பெற்ற ஓட்டங்களின் பாதியளவு ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்த மஹேல, வரிசையில் 11ஆம் இடம்.

ஆனால், இலங்கையின் ஏனைய மூன்று வீரர்கள் 100 ஓட்டங்களைத் தாண்டியிருந்தார்கள்.

பந்துவீச்சாளரிலும் அதிக விக்கெட்டுக்களைப் பெற்றவர்கள் வரிசையில் அஷ்வின் 11, மிஷ்ரா 10. இலங்கையின் குலசேகர 8 விக்கெட்டுக்கள்.

ஆனால் மீண்டும் இலங்கையின் ஏனைய பந்துவீச்சாளர்கள் மூன்று பேர் 5 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார்கள்.

அதேபோல, இந்தியா தான் சந்தித்த அத்தனை போட்டிகளையும் வென்று வந்த அணி.

ஆனால் முக்கியமான இறுதிப் போட்டியில் இலங்கையிடம் தோற்றுப்போனது.

இங்கே தான் இலங்கை நிற்கிறது...

பலவீனப் புள்ளிகள் குறைவாக, அணியில் ஒருவரில் மட்டும் தங்கியிராமல், அந்தந்த போட்டிகளில் ஒவ்வொருவர் அணியின் ஹீரோக்களாக மாறி பெற்றுக் கொடுத்த வெற்றியின் தொடர்ச்சி தான் இந்த அரிய கிண்ணம்.

லசித் மாலிங்கவை இலங்கையின் அதிர்ஷ்டக்காரத் தலைவர் என்றும் சொல்லலாம். மூன்று போட்டிகள், மூன்றிலும் வெற்றி...

இந்த நேரத்தில் தான் அதிருப்திப்படாமல், அணிக்குள் குழப்பம் தராமல் நியமிக்கப்பட்ட தலைமைப் பதவியை அணியின் நலனுக்காக விட்டுக்கொடுத்த தினேஷ் சந்திமாலையும் ஞாபகப்படுத்திக்கொள்ளவேண்டும்.

இந்த அணியொற்றுமை தொடர்ந்தும் இருக்குமானால், 2015 உலகக் கிண்ணம் என்னும் பெரும் கனவும் கைகளில் வசப்படும்.

இரு பெரும் சிகரங்களுக்கு வெற்றியுடன் விடை கொடுக்கும் வாய்ப்பு இலங்கை அணிக்குக் கிடைத்ததையும் 18 ஆண்டுகாலத்தின் பின் பெற்ற வெற்றிக்கிண்ணமும் அளித்த உற்சாகத்தைத் தான் நன்றியுடன் நேற்று இலங்கை ரசிகர்கள் விமான நிலையம் முதல் காலி முகத்திடல் வரை காத்திருந்து வெளிப்படுத்தியிருந்தார்கள்.

இப்போது கனவு பலித்தது...
அடுத்து உலக T20 அணி புதிய சகாப்தம் நோக்கி இனி பயணிக்க இந்த வெற்றி ஓர் ஆரம்பமே...

தொடரின் நாயகனாக மிகப் பொருத்தமான விராட் கோளி, ஓட்டங்கள் குவித்த ரோஹித் ஷர்மா, பந்துவீச்சில் அஷ்வின், மிஸ்ரா ஆகியோரின் மிகச் சிறப்பான வெளிப்பாடுகள் இருந்தும் இந்திய அணி தொற்றுப்போனதானது நிச்சயம் இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியும் ஏமாற்றமாகவும் இருக்கும்.

ஆனால் தொடர்ச்சியான நியூஸிலாந்து - தென் ஆபிரிக்கா தொடர் தோல்விகள், ஆசியக் கிண்ணத் தோல்வி ஆகியவற்றின் பின் இவ்வளவு தூரம் இந்திய அணியின் பெறுபேறு உண்மையில் இந்தியாவுக்கான ஒரு மகிழ்ச்சியான மாற்றமே.

இனி IPL ஆரம்பிக்க இவையும் கடந்து போகும்.

இந்த உலக T 20 தொடர் தந்த அதிர்ச்சிகள், அடையாளங்கள், சாதனைகள், தடங்கல் பல இருந்தாலும் வெற்றியின் வழித் தடமாகப் பதிந்த ஹேரத்தின் நியூஸிலாந்துக்கு எதிரான பந்துவீச்சு, மாலிங்கவின் இந்தியாவுக்கு எதிரான இறுதி ஓவர், திசரவின் சிக்சர்கள், சங்காவின் 50 உற்சாகம்...

இவற்றோடு சங்கா, மஹேலவின் ஆதரவு அணைப்பும் ஆனந்தக் கண்ணீரும் எத்தனை காலம் சென்றும் மறக்க முடியாத நினைவுகளாகப் பதியப்போகின்றன.

மகளிர் உலக T20 கிண்ணம் தொடர்ச்சியான மூன்றாவது தடவையாக அவுஸ்திரேலிய மகளிர் வசம்.

ஹட் ட்ரிக் அடித்த சாதனைப் பெண்களையும் வாழ்த்துவோம்.

மெக் லனிங் தலைமையிலான இந்தத் துடிப்பான அணி தொடரின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரே அணி என்பது மிகப் பொருத்தமான ஒன்றே.

ஒரு மாதத்துக்குள்ளேயே இலங்கைக்கு இரண்டாவது கிண்ணம்...

ஆசிய சம்பியன்கள் இப்போது உலக T20 சம்பியன்களும் கூட...

இலங்கையின் வெற்றியைக் கொண்டாடிக்கொண்டே மஹேல, சங்கா ஆகியோருக்குப் பதிலாக இலங்கை இனி T20 அணிக்குள் உள்வாங்கப்போகும் இளையவர்கள் யார் என்ற ஆர்வத்தோடு...
 
www.arvloshan.com

You May Also Like

  Comments - 0

  • Balasubramanian Tuesday, 22 April 2014 02:33 AM

    இந்திய - இலங்கை இரண்டும் வலுவான டீம். இலங்கையின் நிதான
    விளையாட்டு சிறப்பாக இருந்தது. வாழ்க வளமுடன்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .