
அஸ்டன் வில்லா கழகத்தின் அணித்தலைவர் ஸ்டிலியன் பெட்ரோ தனக்கு ஏற்பட்டுள்ள இரத்தப் புற்றுநோய்க்கான சிகிச்சைகளை இன்றைய தினம் ஆரம்பிக்கவுள்ளார். லண்டனிலுள்ள வைத்தியசாலையில் தனக்கான சிகிச்சைகளை மேற்கொள்ளவுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பெட்ரோவின் இரத்தப் புற்றுநோய் தொடர்பான தகவல் பொதுமக்களுக்காக வெளிப்படுத்தப்பட்டது. பல்கேரியாவைச் சேர்ந்த ஸ்டிலியன் பெட்ரோ, சில நாட்களை லண்டனில் சிகிச்சைக்காக முதலில் கழிக்கவுள்ளார்.
கடந்த சனிக்கிழமை ஆர்சனல் கழகத்திற்கெதிராக இடம்பெற்ற பிறீமியர் லீக் போட்டிக்கு முன்னதாக அணியிடம் உரையாற்றிய பெட்ரோ, தனக்கு ஏற்பட்ட நோய்க்கு எதிராகப் போராடவுள்ளதாகத் தெரிவித்திருந்தார். அப்போட்டியில் பங்குபற்றியிராத அவர், ரசிகர்களுடன் இணைந்து, தனது குடும்பத்தினருடன் அப்போட்டியைக் கண்டுகளித்திருந்தார். அப்போட்டியில் அஸ்டன் வில்லா கழகம் 2-4 என்ற கணக்கில் தோல்வியடைந்திருந்தது.
தனது இரத்தப் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்பு அவர் உதைபந்தாட்டப் போட்டிகளிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. (க்ரிஷ்)
.gif)