.jpg)
செப்டெம்பர் 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை சிங்கப்பூரில் நடைபெற ஏற்பாடாகியுள்ள Young Spikes Media 2010 போட்டியில் இலங்கையிலுள்ள விளம்பர நிறுவனங்கள் சார்பில் பேட்ஸ் (Bates)விளம்பர நிறுவன அணி போட்டியிட தகுதி பெற்றுள்ளது.
பேட்ஸ் விளம்பர குழுமத்தின் மீடியாஎட்ஜ் மற்றும் 141D நிறுவனத்தின் ஆர்.கோபி கிருஷ்ணா மற்றும் உதாரா ஹெட்டியாராச்சி ஆகியோரே இப்போட்டிக்கு இலங்கை சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையிலுள்ள முன்னணி விளம்பர நிறுவனங்களிடையே நடத்தப்பட்ட தெரிவு செய்தலுக்கான போட்டியில் மிகத்திறமையாக ஊடக விளம்பரத்துறையில் தமது ஆற்றல்களை வெளிக்காட்டிய இந்த இருவரும் இலங்கை சார்பாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
'உள்நாட்டு விளம்பர தாபனத்தாருடன் போட்டியிட்டு வெற்றி பெற்று தெரிவானதைத் தொடர்ந்து வெளிநாட்டு நிறுவனங்களைச் சேர்ந்த போட்டியாளர்களை சிங்கப்பூரில் எதிர்கொள்ள எம்மை தயார்ப்படுத்தி வருகிறோம்' என ஆர். கோபி கிருஷ்ணா கருத்து தெரிவித்திருந்தார்.
ஆர். கோபி கிருஷ்ணா கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன்,CIM துறையில் தமது உயர்கல்வியை தொடர்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
உதார ஹெட்டியாராச்சி கொழும்பு பிஷப்ஸ் கல்லூரியின் பழைய மாணவி ஆவார்.
பேட்ஸ் விளம்பரக் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிமல் குணவர்தன கருத்து தெரிவிக்கையில், 'சர்வதேச ரீதியில் தொடர்பாடல் துறை மாற்றம் கண்டு வருகிறது. இதற்கு பிரதான காரணம் நவீன ஊடக துறையின் வளர்ச்சியாகும். இந்த நவீன நுட்பங்களை முறையாக பயின்று அவற்றை எமது நாட்டிலும் அறிமுகப்படுத்துவது குறித்து நாம் அவதானமாக செயலாற்றி வருகிறோம். இந்த சந்தர்ப்பத்தில் எமக்கு இவ்வாறான வாய்ப்பு கிட்டியது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.

