2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அனல் பறக்கவுள்ள அவுஸ்திரேலியா - இந்தியா அரையிறுதி

George   / 2015 மார்ச் 25 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-A.R.V.லோஷன்

நடப்பு சம்பியன்கள், அதிக உலகக்கிண்ணங்கள் வென்று உலகின் முதற்தர ஒருநாள் அணியை சந்திக்கும் விறுவிறுப்பான, பெரும் பரபரப்பான இரண்டாவது அரையிறுதி நாளை.

அவுஸ்திரேலியா அணி தற்போது தரப்படுத்தலில் முதலிடத்தில் இருக்கும் அணி மட்டுமல்ல, தொடர்ச்சியாக தன்னுடைய சிறப்பான வெற்றிகளைப் பதவு செய்து வரும் அணி. அத்துடன் சொந்த மண்ணில் விளையாடும்போது மேலும் பலம் சேர்ந்து எதிரணிகளை ஓடஓட விரட்டக்கூடிய ஆற்றலும் சேர்ந்துவிடும்.

அண்மைய உதாரணம், அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் தொடர்.

ஆனால்,இந்திய அணி அந்த முக்கோண ஒருநாள் தொடரில் கண்ட படுதோல்விகளுக்குப்  பிறகு, இந்த உலகக்கிண்ணத்தில் இதுவரை எடுத்துள்ள உத்வேகமான வெறித்தனமான வெற்றி ஓட்டம், அவர்கள் வைத்துள்ள உலகக்கிண்ணத்தை மீண்டும் அவர்களே வசப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு ஆற்றலுடையதாகத் தெரிகிறது.

இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளிலும் வென்றுள்ள இந்தியாவும், நேற்று வெற்றி பெற்ற நியூ சீலாந்தும் மட்டுமே இந்த உலகக்கிண்ணத் தொடரில் எந்தவொரு போட்டியிலும் தோற்காத இரு அணிகள்.

இவ்விரு அணிகளுக்கும் இடையில் இருக்கும் மோதல்களும், மைதானத்துக்கு வெளியேயும் நீடிக்கும் பகைமை கலந்த நீண்ட கால பழி தீர்க்கும் உணர்வுக்கு மேலதிகமாக மிக நீண்ட காலமாகவே இருந்து வரும் போட்டி கலந்த பகைமை உணர்வும் இந்த அரையிறுதிப் போட்டியை மேலும் முக்கியமானதொரு போட்டியாக மாற்றுகிறது.

என்னதான் கிரிக்கெட் உலகத்தை நடத்தும் BIG 3 எனப்படும் மூன்று கிரிக்கெட் சபைகளில் இவ்விரண்டும் முக்கியமானவையாக இருந்தாலும், அதிகார விஷயங்களிலும், பணபலத் தீர்மானங்களிலும் இந்திய கிரிக்கெட் சபையும், கிரிக்கெட் அவுஸ்திரேலியாவும் சிரித்துக்கொண்டே அறுத்துக்கொள்ளும் நட்புடன் கூடிய எதிரிகள்.

அவுஸ்திரேலியா ஆட்டத்திலும், கிரிக்கெட் ஆட்சியிலும் முற்றுமுழுதாக ஆதிக்கம் செலுத்திய தசாப்தத்தைத் தாண்டிய காலம் இருந்தது.

எனினும் IPL காலத்தின் பின்னர் கூடியுள்ள இந்திய ஆதிக்கமும், அண்மைக்கால இந்திய கிரிக்கெட் அணியின் பரவலான வெற்றிகளும் இந்தியாவையும் சில விடயங்களில் முந்த வைத்திருக்கின்றன.

அது மட்டுமல்லாமல், இந்த உலகக்கிண்ணத் தொடரை சரியாக பார்த்து வந்திருந்தால், போட்டிகளை பார்க்க வந்திருந்த சொந்த நாட்டு ரசிகர்களுக்கு இணையாக, அல்லது சிலவேளைகளில் அதிகமாக இந்திய மற்றும் இலங்கை ரசிகர்கள் தமது நாட்டு அணிகள் விளையாடும் போட்டியைப் பார்க்க வந்திருந்தார்கள். நாளை சிட்னியிலும் இதே போல நடக்கலாம். 

எனவே, ஆடுகளத்தைத் தவிர மீதி எல்லாக் காரணிகளுமே இரண்டு அணிகளுக்கும் சமமானதாக மாறுவதற்கு இடமுண்டு.

இரண்டு அணிகளுமே சர்ச்சைகளினதும் மோதல்களினதும் மைய அணிகள். அதிலும் இந்திய அணி மீதும், இந்தியாவின் பல்வேறுவிதமான ஆதிக்கம் மீதும் எதிரணிகளின் ரசிகர்கள் மிகக்கடுமையான அதிருப்தியையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருவது வழக்கமானது.

சமீபத்திய உதாரணம் - பங்களாதேஷூக்கு எதிரான காலிறுதி சர்ச்சைகள். 

இப்போது, அதிகமாக பேசப்பட்டு வரும் சிட்னி ஆடுகளம் பற்றியும் கொஞ்சம் பார்க்கலாம்.

பரவலாக (அதிகமாக இந்திய ஊடகங்கள்) நாளை விளையாடப்படவுள்ள சிட்னி ஆடுகளம் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு அதிக சாதகத் தன்மை உடையது என்றும், அதனால் இந்தியாவுக்கு கூடுதலான வாய்ப்புடையதாகவும் பேசப்பட்டு வருகிறது.
அதிலும் நாளை விளையாடப்படவுள்ள ஆடுகளமானது தென் ஆபிரிக்க - இலங்கை அணிகள் விளையாடிய காலிறுதி விளையாடப்பட்ட ஆடுகளம் என்பது தான் அதற்கான முக்கிய காரணம்.

டுமினியும், தாஹிரும் இலங்கை அணியை சுருட்டிய அந்தப் போட்டியில் ஆடுகளத்தினால் இலங்கை அணி தடுமாறியதை விட, இலங்கையின் வீரர்கள் மோசமான, ஒரு விதமான பயந்த நிலையில் நின்று ஆடியே விக்கெட்டுக்களை தென் ஆபிரிக்காவின் அதிகம் 'ஆபத்தில்லாத' சுழல்பந்து வீச்சாளர்களுக்கு வழங்கியிருந்தனர். சிட்னி ஆடுகளம்

அவுஸ்திரேலியாவின் ஆடுகளங்கள் எல்லாவற்றிலும் சுழல்பந்து வீச்சுக்கு அதிக சாதகத் தன்மை தர்த்க்கூடிய மைதானம் எனினும், இந்திய ஆதரவளார்கள் நினைப்பது போல, ஆசிய உப கண்ட ஆடுகளங்கள் போல ஒரேயடியாக சுழல்பந்துவீச்சை ஆதரித்துவிடக்கூடிய ஆடுகளமாக சிட்னி இருக்கப்போவதில்லை.

இதற்கு உதாரணமாக இந்த உலகக்கிண்ணத்தில் சிட்னியில் நடைபெற்ற போட்டிகளில் தான், தென் ஆபிரிக்கா மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 408 ஓட்டங்களையும், இதே அவுஸ்திரேலியா இலங்கைக்கு எதிராக 376 ஓட்டங்களையும் குவித்தது,
மற்ற இரு போட்டிகளில் ஒன்று ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து, அடுத்தது இலங்கை சுருண்ட காலிறுதி.

சுழல்பந்துக்கு சாதகம் தரும் என்று கணித்தோருக்கு பாதகமான விடயமாக கடந்த இரு நாட்களாக சிட்னியில் பெய்து வரும் மழை அமைந்துள்ளது.

இது ஆடுகளத்தை வேகப்பந்து வீச்சாளருக்கு சாதகமாக மாற்றிவிடும்.

ஆடுகளத்தில் எகிறும் தன்மை இருந்தால் இந்தியர்களை விட ஒப்பீட்டளவில் வேகம் உடைய அவுஸ்திரேலியர்களுக்கு அது வாய்ப்பாக அமையும் அதேவேளை, ஸ்விங் இருந்தால் இந்தியாவின் தற்போதைய கட்டுக்கோப்பான வேகப்பந்துவீச்சு வரிசைக்கு சாதகமாக அமையும்.

ஆனால், ஆடுகளம் துடுப்பாட்ட சாதகமானதாக மாறினால், இரு அணிகளிலும் நிரம்பியிருக்கும் மலைபோல ஓட்டங்களைக் குவிக்கும் அதிரடி துடுப்பாட்ட வீரர்களில் யாருக்கு வாய்ப்பு இருக்கும் என்பது ஊகிக்கக் கடினமானதே.

இந்த உலகக்கிண்ணத்தைப் பொறுத்தவரை இந்தியா சார்பாக 5 சதங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் ஷீக்கார் தவான் மட்டும் இரண்டு சதங்களைப் பெற்றுள்ளார்.அவுஸ்திரேலியா இதுவரை 3 சதங்களையே பெற்றுள்ளது.

ஆனால், பலம் வாய்ந்த இந்தியத் துடுப்பாட்ட வரிசை ஒப்பீட்டளவில் 300 - 330 ஓட்டங்களைக் குறிவைத்து, பின்னர் இந்தத் தொடர் முழுதும் விளையாடிய போட்டிகளில் எல்லாமே எதிரணிகளின் அத்தனை விக்கெட்டுக்களையும் வீழ்த்திய பந்துவீச்சாளர்களைக் கொண்டு கட்டுப்படுத்தி, வெற்றிகளை சுவைத்து வந்திருக்கிறது.

அவுஸ்திரேலியா தனது வழமையான முழுமையான தாக்குதல் பாணியையே கையாண்டு வந்துள்ளது.
400 ஓட்ட எண்ணிக்கையைக் குறிவைத்து ஆரம்பம் முதல் அடித்து நொறுக்குவது, பின்னர் அசுர வேகப்பந்து மூலம் எதிரணிகளை நிர்மூலமாக்குவது.

நியூசிலாந்திடம் கண்ட மயிரிழையிலான தோல்வியைத் தவிர, (பாகிஸ்தானின் வஹாப் ரியாஸின் தனியொரு போராட்டம் இன்னொன்று) அவுஸ்திரேலியாவின் பயணமும் நிதானமானதே.

சிட்னியில் அவுஸ்திரேலிய - இந்திய மோதல்கள்.

சிட்னி மைதானத்தில் அவுஸ்திரேலியா இந்தியாவை எப்போதுமே துவம்சம் செய்து வந்திருக்கிறது.
இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் அவுஸ்திரேலியா இந்தியாவிடம் ஒரே ஒரு தடவை தோற்றிருக்கிறது.
அது 7 ஆண்டுகளுக்கு முன்னர், 2008இல்.

அதேபோல, இறுதியாக சிட்னியில் அவுஸ்திரேலியா விளையாடியுள்ள பத்து போட்டிகளில் 8 வெற்றி.
தோல்வியுற்ற இரண்டு போட்டிகளும் நம் இலங்கை அணிக்கு எதிராக விளையாடியவை.
நாணய சுழற்சியின் முக்கியத்துவம் இங்கே அதிகம் தான். ஆனால் அவுஸ்திரேலிய வெற்றிகள் இவற்றையெல்லாம் தாண்டியவையாகவே இருக்கின்றன.

இந்திய அவுஸ்திரேலிய அணிகள் இதற்கு முதல் கடந்த உலகக்கிண்ணத்தில் மோதியபோது, அந்தக் காலிறுதிப் போட்டியில் இந்திய அணியின் அபாரமான வெற்றியுடன் 1999 முதல் இருந்து வந்த அவுஸ்திரேலிய உலகக்கிண்ண சாம்ராஜ்யமும் உடைந்து, ரிக்கி பொன்டிங் என்ற அற்புதத் தலைவரின் மணி மகுடமும் போனது.

அதேபோல, 1992ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக அவுஸ்திரேலியா அரையிறுதியை எட்டிப் பார்க்காமல் வெளியேறியது.

இம்முறை அரையிறுதியில் இவ்விரு அணிகளும் சந்திக்கின்றன.

அவுஸ்திரேலியா இதுவரை விளையாடியுள்ள 6 உலகக்கிண்ண அரையிறுதிகளிலும் தோல்வி கண்டதில்லை.
(1999 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவுடன் சமநிலை முடிவைப் பெற்றது)

இந்தியா விளையாடியுள்ள 5 உலகக்கிண்ண அரையிறுதிகளில் 3இல் வென்று இறுதிப் போட்டிகளுக்கு சென்றுள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை விளையாடியுள்ள 10 உலகக்கிண்ணப் போட்டிகளில் அவுஸ்திரேலியா 7இலும், இந்தியா மூன்றிலும் வென்றிருக்கின்றன.
 

இரண்டு அணிகளும் ஒப்பீட்டளவில் சமபலமுடையதாகத் தெரிந்தாலும், இந்தியாவின் களத்தடுப்பு அண்மைக்காலமாக முன்னேற்றம் கண்டு துடிப்பானதாகத் தெரிந்தாலும், அவுஸ்திரேலியாவின் களத்தடுப்பு ஒப்பீட்டளவில் ஒரு படி மேலே தான். 

ஆனால், அவுஸ்திரேலியாவின் சுழல்பந்துவீச்சு பலவீனம் இந்தியாவுக்கான சிறிய வாய்ப்பாக அமையும்.
அநேகமாக அவுஸ்திரேலியா மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள், போல்க்னர் ஆகியோரோடு தான் விளையாடும் என்று கருதினால், மக்ஸ்வெல் தான் அவர்களது பிரதான சுழல்பந்து வீச்சாளராக இருப்பார். இந்தியத் துடுப்பாட்டவீரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள இடமுண்டு.

ஆனால், மிட்செல் ஸ்டார்க் இந்த உலகக்கிண்ணத்தின் முக்கியமான பந்துவீச்சாளராக எதிரணிகளை அச்சுறுத்தி விக்கெட்டுக்களை அள்ளுகிறார். அவரது யோர்க்கரும் பவுன்சரும் எந்த துடுப்பாட்ட வீரரையும் தடுமாற வைக்கும்.

இந்திய அணி என்றாலே மிரட்டி எடுக்கும் ஜோன்சனும் கூட சேர்கையில், இன்னும் உறுதி பெறும் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சில், ஹேசில்வூட்டும் நம்பிக்கை தருகிறார்.

போல்க்னர், வொட்சன் ஆகியோர் மித வேகப்பந்து வீச்சில் முக்கிய விக்கெட்டுக்களை எடுக்க உதவக்கூடும்.
பாகிஸ்தானின் முக்கிய விக்கெட்டுக்களை சரித்தது போல, மக்ஸ்வெல் தனது பங்களிப்பை, ஓட்டங்களைக் குறைவாகக் கொடுத்து வழங்கினால் அவுஸ்திரேலியாவுக்கு வாய்ப்புத்தான்.

மறுபக்கம், இந்தியாவின் ஷமி, மோஹித் ஷர்மாவின் தடுமாறாத கட்டுப்பாடான பந்துவீச்சும், ஸ்விங்கும் இந்தியாவின் ஒரு பலம் ; எகிறும் பந்துகளை வீசும் இந்திய அணியின் வேகமான பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் அச்சுறுத்தக்கூடிய ஒருவர்.
இந்தத் தொடர் முழுதும் சிறப்பாகப் பந்துவீசும் அஷ்வினுடன், ஜடேஜா, ரெய்னா ஆகியோரும் தக்க நேரத்தில் சேர்ந்தால் இந்தியாவின் பந்துவீச்சு உலகத் தரமானது.

அவுஸ்திரேலியாவுக்கு இருக்கும் நம்பிக்கை, இதே பந்துவீச்சை முன்பு முக்கோணத் தொடரில் வதைத்ததும், இதுவரை உலகக்கிண்ணத் தொடரில் இணையாக சேர்ந்து பெரிதாக சோபிக்காத (ஒரேயொரு அரைச்சத இணைப்பாட்டம்) முக்கியமான நாளைய போட்டியில் கலக்கும் என்பதுமே.

பின்ச், வோர்னர் என்ற அதிரடிகளின் பின், நம்பிக்கை தரும் உறுதியான ஸ்டீவ் ஸ்மித் இருக்கிறார்.
தலைவர் மைக்கேல் கிளார்க்  இலங்கைக்கு எதிராக அரைச்சதம் பெற்றிருந்தாலும், இன்னும் முன்னைய 'ஓட்டக்குவிப்பு' கிளார்க்காக அவர் தெரியவில்லை.

அடுத்து வரும் மக்ஸ்வெல் ஒரு அவுஸ்திரேலிய ஏபி டீ வில்லியர்ஸ்.
அசுரவேகத்தில் ஓட்டங்கள் குவிக்கும் மக்ஸ்வெல் எந்தப் பந்துவீச்சுக்குமே ஒரு சிம்ம சொப்பனம்.
இவர் தான் இந்தத் தொடரில் அவுஸ்திரேலியாவின் அதிகூடிய ஓட்டக் குவிப்பாளர்.

தடுமாறிக்கொண்டு இருந்த வொட்சன், பாகிஸ்தானுக்கு எதிராகப் போராடியதன் பலனாக ஓட்டங்கள் பெறும் மனோநிலைக்குத் திரும்பியுள்ளார் போல தெரிகிறது.

வேகமாக ஓட்டங்கள் பெற ஹடின் மற்றும் போல்க்னர், ஜோன்சன் ஆகியோரும் இருக்கிறார்கள்.
இதற்கு சற்றும் குறையாத இந்தியாவின் வரிசை.

ரோஹித் ஷர்மாவும் இறுதியாக கழசஅக்குத் திரும்பியிருப்பது இந்தியாவுக்கு மிகுந்த நம்பிக்கையளிக்கும் ஒரு விடயம்.
என்ன தான் இந்தியாவின் ஆரம்ப இணைப்பாட்டம் அவுஸ்திரேலியாவுக்கு எதிராகத் தடுமாறினாலும், தவானும் ரோஹித்தும் இருக்கும் சிறப்பான துடுப்பான கழசஅ இந்தியாவுக்கு சாதகமானதே.

அதேபோல, ரோஹித் ஷர்மா கடைசியாக அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய இரண்டு இன்னிங்க்சில் பெற்றுள்ள ஓட்டங்கள், 138, 209.

கோலி எப்போதும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம், தொடர்ந்து ரஹானே.. மோசமாக ஆடக்கூடியவர் அல்ல. 
சுரேஷ் ரெய்னா நம்பியிருக்கக்கூடிய ஒரு ஓட்ட இயந்திரம். தேவையானபோது மத்திய வரிசையைத் தாங்கி, வேகமாகவும் ஓட்டங்களைக் குவிக்கக் கூடியவர்.

தோனியை இந்திய அணி ரசிகர்கள் ஒரு காவல் தெய்வமாகப் பார்க்கிறார்கள். முடித்துவைக்கும் ஆற்றலுடைய ஒரு கூலான மனிதர்.

தேவையேற்படின் ஜடேஜா, அஷ்வின் ஆகியோரும் ஓட்டங்களில் உதவக்கூடியவர்கள்.

எனினும் இரண்டு அணிகளினதும் துடுப்பாட்ட வரிசைகளின் பலவீனங்களை இரு அணிகளும் குறிவைக்கும்.
அவுஸ்திரேலியா சூழலுக்கும், ரிவேர்ஸ் ஸ்விங்குக்கும் தடுமாறக்கூடியது. அத்தோடு வஹாப் ரியாஸ் அன்று காட்டிய உதாரணத்தை நாளை உமேஷ் யாதவ் பயன்படுத்தலாம்.

எதிர்ப்பக்கத்தில் இந்தியர்கள் எகிறும் பந்துகளுக்கும், ஸ்விங்கும் பந்துகளுக்கும் இலகுவாக ஆட்டமிழக்கக் கூடியவர்கள்.
எனவே ஸ்டார்க், ஜோன்சனின் தாக்குதல்கள் பயங்கரமாக இருக்கும்.

இன்னொன்று, நேற்றைய நியூ சீலாந்து, தென் ஆபிரிக்க போட்டி கிரிக்கெட்டின் உன்னதத்தோடு இரு அணிகளும் அர்ப்பணிப்பான, பொறுப்புணர்வான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தன என்றால், நாளைய போட்டி மைதானத்துக்குள்ளே வார்த்தை மோதல்களும், வலியக்கொழுவல்களும் வம்புச் சண்டைகளும் நடக்கக்கூடிய உணர்ச்சி மிகுந்த ஆட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு அணிகளும் உலகக்கிண்ணத்தைக் குறிவைத்து இருக்கின்றன.

அவுஸ்திரேலியாவுக்கு இந்தியாவிடம் கடந்த உலகக்கிண்ணத்தில் இழந்த பெருமையை, சொந்த மண்ணில் மீண்டும் பெறும் உத்வேகமும், நடப்பு சாம்பியன்கள் இந்தியா தம்மிடம் உள்ள கிண்ணத்தை எந்த வகையிலும் இழந்துவிடக்கூடாது என்ற வெறியும் இருக்கிறது.

இதனால் தோல்வி என்பதை யோசிக்கவே தயங்குகிறார்கள்.

நாளைய தோல்வியின் தாக்கம் மிகப் பெரிதாக இரு அணிகளுக்குமே இருக்கும்.
நாளை இந்தியா தோற்றால், 1987க்குப் பிறகு முதல் தடவையாக ஆசிய அணி ஒன்று இல்லாத உலகக்கிண்ண இறுதிப்போட்டியாக ஞாயிறு போட்டி அமையும்.

அத்துடன் அவுஸ்திரேலியா இத்தொடர் முழுவதும், அண்மையில் காலமான தங்கள் சக வீரர் பிலிப் ஹியூசை நினைவு கூர்ந்து கறுப்புப் பட்டியுடன் ஆடி வருவதால், ஹியூசுக்காக இந்த உலகக்கிண்ணத்தை வென்று அர்ப்பணிக்க ஆர்வத்துடனும் உத்வேகத்துடனும் காத்திருக்கிறது.

அவுஸ்திரேலியாவுக்கு சொந்த மண், அண்மைக்கால ஆதிக்கப் பலாபலன்களின் அடிப்படையில் கூடுதல் வாய்ப்புக்கள் இருப்பது போல தெரிந்தாலும், இந்திய அணி தோனியின் தலைமையில் முன்னைய இயலாமைகளை உடைத்து வரும் அணி.

ஆனால். நாளைய போட்டி வாழ்வா சாவா தீர்மானமிக்க போட்டி. எனவே உயிரைக் கொடுத்த, பதறாமல், இறுதி வரை போராடக்கூடிய அணி மெல்பேர்னில் நியூ சீலாந்தை சந்திக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .