2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அசைக்க முடியாத அவுஸ்திரேலியா: 5ஆவது தடவை உலக சம்பியனாக

A.P.Mathan   / 2015 மார்ச் 31 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

5 கண்டங்களிலும் ஒவ்வொரு உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றி, 5ஆவது தடவையாக உலகக்கிண்ணம் வென்று உலகக் கிரிக்கெட்டின் அசைக்க முடியாத அசத்தல் சம்பியனாக அவுஸ்திரேலியா தன்னை அற்புதமாக வெளிக்காட்டியுள்ளது.

உலகக்கிண்ணம் இம்முறை மிகப் பொருத்தமான அணிக்குப் போய்ச் சேர்ந்துள்ளது.

மிகச் சிறந்த அணி, சிறப்பாக விளையாடிய அணிக்கு உலகக்கிண்ணம் கிடைத்தது.

எல்லாவிதமான சூழ்நிலையிலும் சிறப்பாகத் தன்னை வெளிப்படுத்திய அணிக்கு கிண்ணம் கிடைத்துள்ளது.

கிரிக்கெட் ஆடுகளத்திலேயே பலியான தங்கள் சக வீரனை சகோதரனாக, அவனுக்காக அர்ப்பணிக்க, தங்கள் நாட்டுக்கான ஐந்தாவது உலகக்கிண்ணத்தை வென்றுள்ளது அவுஸ்திரேலியா.

தடுமாறாமல், கொண்ட குறி மாறாமல், வெல்வதற்குத் தேவையான அணி, வியூகம், ஆற்றலைக் கொண்ட அவுஸ்திரேலியாவின் வெற்றி மிகப் பொருத்தமானதும், எதிர்பார்த்ததுமே.

எந்த அணியையும் வீழ்த்தும் பலமும், பெற்ற வெற்றிகள் எல்லாவற்றையுமே அசத்தலாகவும், ஆதிக்கம் செலுத்திப் பெற்றது அவுஸ்திரேலியா.

ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், க்ளென் மக்ஸ்வெல், ஜோஷ் ஹேஸில்வூட் என்று எதிர்காலத்துக்கான வீரர்கள் தங்கள் தடங்களை அழுத்தமாக இந்த வெற்றித்தொடரில் பதித்துள்ளனர்.

தங்களை சிறப்பாக வழிநடத்திய தலைவன், தன்னை உணர்ந்து விடைபெறும் நேரம், அவனுக்காக வழங்க ஒரு கிண்ணம் இந்த உலகக்கிண்ணம்.

33வயதில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் கிளார்க், உலகை வென்ற, இன்னும் உலகை வெல்லும் ஓர் அணியையும் விட்டுச் செல்கிறார்.

அடுத்த உலகக்கிண்ணத்தை வெல்லும் அவுஸ்திரேலிய அணியை இப்போதிருந்தே புதிய தலைவரின் கீழ் கட்டியெழுப்பும் வாய்ப்பையும் வழங்கி செல்லும் கிளார்க்குக்கு வாழ்த்துக்கள்.

இந்த வெற்றி கிரிக்கெட் உலகத்துக்கு வழங்கியுள்ள பல்வேறு தகவல்களில் மிக முக்கியமானது, இந்த பெரும்பான்மையாக இளம் வீரர்களைக் கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி இன்னும் 10 வருடங்களுக்காவது உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தப்போகிறது.

கடந்த இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா முதலாவது பந்து முதல் காட்டிய ஆதிக்கமும் நியூசிலாந்தை தலையெடுக்க விடாமல் மடக்கிப் போட்டதும், உண்மையான அவுஸ்திரேலியாவின் பலத்தை உலகுக்கு உணர்த்தியது.

இறுதிப் போட்டிக்கு முன்னதான அத்தனை போட்டிகளையும் சொந்த நாட்டில் விளையாடிவிட்டு, மாபெரும் இறுதிப் போட்டியை மெல்பேர்ன் போன்ற பெரிய மைதானத்தில் அசுர பலமும் ஆற்றலும், சொந்த நாட்டின் ரசிகர்களின் பலமும் சேர்ந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவது இலகுவான காரியம் அல்ல.

பிரம்மாண்டமான மைதானம், திரண்டு வந்திருந்த 93,000க்கும் அதிகமான ரசிகர்கள் (உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியொன்றில் உலக சாதனை ரசிகர் எண்ணிக்கை இதுவாகும்), முதற்சுற்றில் தோற்றதற்கு பழி வாங்கக் காத்திருந்த அவுஸ்திரேலியாவின் வேகம் என்று அத்தனை விஷயமும் சேர்ந்துகொள்ள நியூசிலாந்து சந்தித்தது மிகப்பெரிய அழுத்தம்.

நாணய சுழற்சி அதிர்ஷ்டம் சேர்ந்தாலும், அவுஸ்திரேலிய அணி ஒரு திட்டத்தோடேயே களமிறங்கி இருந்தது.

அத்தனை பந்துவீச்சாளர்களையும் அடித்து நொறுக்கி பதம் பார்த்திருந்த நியூசிலாந்து அணித் தலைவர் மிட்செல் ஸ்டார்க்கின் முதல் இரு பந்துகளில் தடுமாறி மூன்றாவது பந்தில் விக்கெட் தகர்க்கப்பட்டதோடு அவுஸ்திரேலிய அணி போட்டியைத் தங்கள் வசப்படுத்திவிட்டது.

மக்கலமிடம் காணப்பட்ட ஒருவகைப் பதற்றம், நியூசிலாந்து அணியின் ஏனைய வீரர்களுக்கும் தொற்றியதுபோல ஒரு போராட்டம் இல்லாமலேயே சரணடைந்தது போல ஆனது நியூசிலாந்தின் துடுப்பாட்டம். க்ராண்ட் எலியட் தவிர்த்து.

ஆபத்தில்லாத ஒரு மக்ஸ்வெல்லின் பந்துக்கு தொடரின் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவராக, குமார் சங்கக்காராவை முந்திய மார்ட்டின் கப்டில் ஆட்டமிழந்தது இதற்கு நல்ல உதாரணம்.

ரொஸ் டெய்லர் - எலியட் ஆகியோரின் சத இணைப்பாட்டம், நியூசிலாந்தைக் காப்பாற்றியிருந்தாலும் கூட, போராட்டத்தை வெளிப்படுத்தும் அளவுக்கோ, அவுஸ்திரேலியாவுக்கு சவால் விடும் அளவுக்கோ இல்லை.

அரையிறுதியில் நியூசிலாந்து அணி தடைதாண்டி, இறுதிப் போட்டிக்கு வர உதவிய ஹீரோவான எலியட், அந்தப் போட்டியில் இருந்த அதே மன நிலை & அதேவிதமான அடித்தாடும் ஆற்றலைத் தொடர்ந்தார்.

மிகத் துல்லியமாக பந்துவீசிக்கொண்டிருந்த அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை அவ்வாறு எதிர்கொண்டு நிதானமாகவும் வேகமாகவும் ஆடுவது என்பது இலகுவான காரியமல்ல. 

இந்த இணைப்பாட்டத்தை உடைத்தவர் முக்கியமான விக்கெட்டுக்களை தொடர் முழுவதும் எடுத்த ஜேம்ஸ் போல்க்னர். 

ரொஸ் டெய்லர் ஹடினின் அபார பிடிஎடுப்பு ஒன்றுக்கு ஆட்டமிழக்க, அடுத்த இரு பந்துகளில் போல்க்னர் வீசிய அருமையான பந்து ஒன்று, பயங்கரமான அதிரடி வீரர் அன்டர்சனை ஆட்டமிழக்கச் செய்தது.

மக்கலம் போலவே அன்டர்சனும் பூஜ்ஜியம்.

இந்த ஆட்டமிழப்புக்கள், அதுவும் இடது கை வேகப்பந்து வீச்சாளரால் கைப்பற்றப்பட்ட சடுதியான இரு விக்கெட்டுக்கள் 1992இல் இதே மெல்பேர்னில் வசீம் அக்ரம் அடுத்தடுத்து வீழ்த்திய இங்கிலாந்து விக்கெட்டுக்களை ஞாபகப்படுத்தியது.

மிக எதிர்பார்க்கப்பட்ட 'முன்னாள்' அவுஸ்திரேலியரான ரொங்கியும் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு நியூசிலாந்து அணியை வாரிச் சுருட்டியது.

அவுஸ்திரேலிய பந்துவீச்சும், அதற்குத் துணை நின்ற களத்தடுப்பும், சமயோசிதமாகவும், அதேவேளையில் எதிரணியை கூடுமான விரைவில் ஆட்டமிழக்கச் செய்யவேண்டும் என்ற நோக்கிலும் அணியை வழிநடத்திய தலைவர் கிளார்க்கும் பாராட்டுக்குரியவர்கள்.

ஆனால், பொதுவாகவே கண்ணியமான, பழகுதற்கினிய நியூசிலாந்து வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறும்போது தகாத வார்த்தைகள் மற்றும் கோபப்படுத்தும் வசைகளுடன் வழியனுப்பியது வேண்டாத செயலாகவே தெரிந்தது.

அதிலும் சிறப்பாக ஆடிவிட்டு களம் விட்டு நீங்கிய எலியட், இறுதிப் போட்டியுடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அமைதியான மனிதர் வெட்டோரி ஆகியோரையும் திட்டி அனுப்பியது அவுஸ்திரேலிய அணியின் மற்றொரு குரூர முகத்தைக் காட்டிய செயல்கள்; அவுஸ்திரேலிய ரசிகர்களுக்கே இந்த செயல் மகிழ்ச்சியளித்திராது.

நியூசிலாந்து பெற்ற 183 ஓட்டங்கள், 1983 உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்திய அணி பெற்ற ஓட்ட எண்ணிக்கையை ஞாபகப்படுத்தியது. அந்தப் போட்டியில் இந்தியா தன்னுடைய மிதவேகப் பந்துவீச்சாளர்களின் அற்புதமான பந்துவீச்சினால் பலமான மேற்கிந்தியத் தீவுகள் அணியையே சுருட்டி 40 ஓட்டங்களால் வெற்றியைப் பெற்றதும் பலருக்கு ஞாபகம் வந்திருக்கும்.

ஆனால், இந்த அவுஸ்திரேலிய அணி தமக்குக் கிடைத்த வாய்ப்பை விடுகின்ற அளவுக்கு தடுமாறக்கூடிய அணி அல்ல.

மீண்டும் ஒரு தடவை அவுஸ்திரேலிய ஆரம்ப இணைப்பு சறுக்கியது.

நியூசிலாந்தின் ஐவர் பெற்ற பூஜ்ஜியங்களுக்கு அடுத்தபடியாக ஏரொன் ஃபிஞ்ச் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து மகிழ்ச்சியடையக் கூடியதாக இருந்த ஒரே சந்தர்ப்பம் இது தான்.

முதலில் வோர்னரின் அதிரடி, பின்னர் தனக்கேயான நாளாக அன்றைய நாளை - தன்னுடைய ஒருநாள் சர்வதேசப் போட்டியின் இறுதி நாளை மாற்றிய தலைவர் கிளார்க்கின் அற்புத ஆட்டம், இவை இரண்டையும் சரியாக செலுத்தும் நிதானமான மற்றொரு ஆட்டத்தை வெளிப்படுத்திய அவுஸ்திரேலியாவின் எதிர்கால நாயகன் ஸ்டீவ் ஸ்மித் இவற்றோடு அவுஸ்திரேலிய வெற்றி இலகுவானது.

ஸ்டீவ் ஸ்மித் 5ஆவது தொடர்ச்சியான 50க்கு மேற்பட்ட ஓட்டப்பெறுதியை அன்றைய தினம் பதிவு செய்து உலகக்கிண்ண சாதனையை ஏற்படுத்தினார்.

ஸ்மித் 3ஆம் இலக்கத்தில் வந்த பிறகு அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் உறுதியுடன், வலிமைப்பட்டுள்ளது.

வழமையாக வந்தவுடன் வேகமாக அடித்தாடி தான் ஆதிக்கம் செலுத்தும் ஸ்மித், அன்றைய தினம் சத இணைப்பாட்டத்தில் தனது தலைவர் கிளார்க்கை அடித்தாட விட்டு அழகு பார்த்தார்.

ஸ்மித்தின் அழகான, நிதானமான ஆட்டம் கண்டு ஒரு தடவை ஹென்றி வீசிய பந்து விக்கெட்டில் படும், பேல்ஸ் கீழே விழாமல் மரியாதை செய்திருந்தது.

72 பந்துகளில் 74 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்த கிளார்க், ஒரு லட்சத்தை அண்மித்த ரசிகரின் கரகோஷத்துடனும் மரியாதையுடனும் நியூசிலாந்து வீரர்களின் வாழ்த்துக்களோடும் விடைபெற்றார்.

அதன்பின் வொட்சன் உள்ளே வர, ஸ்மித்தின் துடுப்பினால் பெறப்பட்ட 4 ஓட்டம் ஒன்றுடன் மீண்டும் ஓர் உலகக்கிண்ணம் அவுஸ்திரேலியா வசமானது.

உலகக்கிண்ண அணியில் இடம்பெறுவாரா என்பதுவும், பின்னர் பதினொருவரில் இடம்பிடிப்பாரா என்பதும் கேள்விக்குறியாகவிருந்த வொட்சன் - ஆடுகளத்திலே நிற்க, எதிர்கால அவுஸ்திரேலியா நம்பியிருக்கும் அடுத்த தலைவரும் நம்பிக்கை நட்சத்திரமுமான ஸ்மித்தின் துடுப்பின் மூலம் வெற்றி ஓட்டம் பெறப்பட்டது சிறப்பு.

1992இல் சொந்த மண்ணில் அரையிறுதிக்கு கூட வர முடியாமல் போன ஏமாற்றம், இம்முறை தங்கள் மக்களுக்கு முன்னால் பெறப்பட்டது வரலாறில் இடம்பிடிக்கும் ஒரு மாபெரும் பெற்றி.

இப்போது அவுஸ்திரேலிய அணி மட்டுமே அத்தனை கண்டங்களிலும் உலகக்கிண்ணம் வென்றுள்ள ஒரே அணி.

101 பந்துகள் மீதம் இருக்க இலகுவான வெற்றியைப் பெற்ற அணி, இந்த வெற்றியை தங்கள் தலைவர் மைக்கேல் கிளார்க் சொன்னதன் படி, தங்கள் மரித்துப்போன வீரன் பிலிப் ஹியூசுக்கு அர்ப்பணித்தது.

கோலாகலமான கொண்டாட்டங்களின் மத்தியில், தனது ஓய்வை உலகக்கிண்ண வெற்றியுடன் பெருமையுடன் அறிவித்த கிளார்க் (அவருடன் விக்கெட் காப்பாளர் பிரட் ஹடினும் சேர்ந்துகொண்டார்), தங்களது பயிற்றுவிப்பாளர் டரன் லீமன், தங்களது வீரர்கள் அத்தனை பேரையும் பூரண உடற்தகுதியோடு வைத்திருக்கும் அணியின் உதவியாளர்கள், மருத்துவர்கள், உடற்பயிற்சி ஆலோசகர்களையும் நன்றியுடன் குறிப்பிடத் தவறவில்லை.

ஒரு தலைவனாக முன்னின்று சரியான பாதையில் செலுத்தி, அணியாக அத்தனை பேரையும் ஒற்றுமைப்படுத்தி, இறுதிப் போட்டியில் தானே ஓட்டங்களைக் குவித்து, தன்னைப் பற்றியிருந்த அவநம்பிக்கைகளையும் போக்கி பெருமிதமாக கிளார்க் விடைபெற்றிருக்கிறார்.

மறுபக்கம் 8 போட்டிகளைத் தொடர்ந்து வென்று வந்து, இறுதிப்போட்டியில் தோற்றுப்போன நியூசிலாந்து ரசிகர்களின் அன்பை வென்றுகொண்டது.

இந்த அவுஸ்திரேலிய அசுரப் புயல் முன் எந்த அணியும் நின்றிருக்க முடியாது என்பதே உண்மை.

ஆனால், இப்படியொரு வாய்ப்பு இனியொரு தடவை நியூசிலாந்துக்கு கிட்டுமா என்பதும் சந்தேகமே.

பெரிய இறுதிப்போட்டிகள் வந்திராத அனுபவக் குறைவும், அழுத்தமும் மக்கலமின் திறமையான அணியை சறுக்கிவிட்டது நேற்று.

2011இல் நம்மவர் முத்தையா முரளிதரன் போல, அன்றைய தோல்வியுடன் நியூசிலாந்தின் டானியல் வெட்டோரி ஓய்வு பெறுகிறார்.

முக்கிய தருணங்களில் விக்கெட்டுக்களை உடைத்த போல்க்னர், போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.

38 சதங்கள் குவிக்கப்பட்ட (இவற்றில் இரண்டு இரட்டைச் சதங்கள்), போட்டியொன்றுக்கு கிட்டத்தட்ட 10 சிக்சர்கள் வீதம் பெறப்பட்ட, துடுப்பாட்ட வீரர்களின் ஆதிக்கம் அதிகரித்த உலகக்கிண்ணத் தொடரின், தொடர் நாயகன் விருது 22 விக்கெட்டுக்களை 10க்கு அண்மித்த சராசரியில் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் இடது கை இளமைப் புயல் மிட்செல் ஸ்டார்க்குக்குக் கிடைத்தது, மிகப்பொருத்தமும், அவரது முயற்சிக்கும் ஆற்றலுக்குமான பரிசேயாகும்.

இந்தியாவின் கிரிக்கெட் 'கடவுள்' சச்சின் டெண்டுல்கரைக் கொண்டு இந்த விருதுகளை வழங்க வைத்தது கிரிக்கெட்டுக்கும் பெருமையாகும்.

அவுஸ்திரேலியா கைப்பற்றிய உலகக்கிண்ணம் மற்ற அணிகளை விட 1987 முதல், இந்த 30 ஆண்டுகளில் கிரிக்கெட்டின் ஆதிக்கம் எங்களிடம் இருக்கிறது என்பதை மீண்டும் அறுதியிட்டு சொல்லியிருப்பதோடு, மைக்கேல் கிளார்க்கையும் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு தலைவராக உறுதியாக காட்டிவிட்டு செல்கிறது.

ஆனால், மற்ற அணிகளின் தலைவர்கள் விடைபெறும்போது விட்டுச் செல்லும் பாரிய வெற்றிடம் போல இல்லாமல், கிளார்க் அடுத்த தசாப்த காலத்துக்காவது உலகை ஆட்டிப்படைக்கப் போகும் ஒரு கிரிக்கெட் அணியையும், அந்த அணியை வழி நடத்தப்போகும் தற்காலிகத் தலைவர் ஜோர்ஜ் பெய்லி, மற்றும் நீண்டகாலத்துக்கான இளமைத் தெரிவு ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரையும் அடையாளம் காட்டிவிட்டு விடைபெற்றுள்ளார்.

இலங்கையின் கிரிக்கெட் சிகரங்கள், உலக கிரிக்கெட்டில் உன்னத இடம்பிடித்த மஹேல ஜெயவர்த்தன, குமார் சங்கக்கார மற்றும், பாகிஸ்தானின் ஷஹிட் அப்ரிடி, மிஸ்பா உல் ஹக், சிம்பாப்வேயின் நம்பிக்கை நாயகன் பிரெண்டன் டெய்லர் ஆகியோரின் ஓய்வுகளை நெகிழ்ச்சியோடு பார்த்த எமக்கு, இன்னும் முக்கிய மூன்று முத்துக்களின் ஓய்வையும் தந்து அவுஸ்திரேலியா என்ற பொருத்தமான இடத்தை தெரிவு செய்து உலகக்கிண்ணம் விடைபெற்றுள்ளது.

தனது 'இளைய சகோதரன்' பிலிப் ஹியூசுக்கான அர்ப்பணமாக உலகக்கிண்ணத்தை தானே வென்று, அணிக்கும் நாட்டுக்கும் ரசிகருக்கும் பெருமை தேடி, தான் உப ஆகா இருந்தபோது இந்தியாவிடம் இழந்த கிரீடத்தை, சொந்த மண்ணில் வென்று கொடுத்துப் பெருமையுடன் விடைகொள்கிறார் கப்டன் கிளார்க்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .