2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நீங்கள் விரும்பினால் விலக்குங்கள்: தெமர்

Editorial   / 2017 மே 23 , பி.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

உச்ச நீதிமன்றத்தினால் உத்தியோகபூர்வமாக குற்றஞ்சாட்டப்பட்டாலும், தான் பதவி விலக மாட்டேன் என, பிரேஸில் ஜனாதிபதி மிஷெல் தெமர் தெரிவித்துள்ளார்.   

பிரேஸிலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மாபெரும் ஊழல்களில் ஒன்றில், சாட்சியாக வரக்கூடிய ஒருவருக்குப் பணம் கொடுத்து, அவரை அமைதியாக்குவதற்கு, ஆசீர்வாதம் வழங்கினார் என, சாட்சியமொன்றில் ஜனாதிபதி தெமர் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி தெமர் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கைகள் அதிகரித்த நிலையிலேயே, ஜனாதிபதி தெமரின் மேற்படி கருத்து வெளியாகியுள்ளது.   

“நான் இராஜினாமாச் செய்ய மாட்டேன். நீங்கள் விரும்பினால் என்னைப் பதவி விலக்குங்கள், ஆனால், நான் பதவி விலகினால், குற்றத்தை நான் ஒப்புக் கொள்வதாய் அமையும்” என பிரேஸிலின் மிகப்பெரிய பத்திரிகையான பொல்ஹா டி சாபோலோவில், நேற்று வெளியான நேர்காணலில், ஜனாதிபதி தெமர் தெரிவித்துள்ளார்.   

இந்நிலையில், பிரேஸிலின் மாபெரும் இறைச்சி வணிக நிறுவனமொன்றின் தலைவரான ஜோஸ்லி பட்டிஸ்டா, கடந்த மார்ச்சில் மேற்கொண்ட கலந்துரையாடலின் ஒலிப்பதிவானது, கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் மாற்றியமைக்கப்படவில்லை என உச்ச நீதிமன்றம் உறுதியாகத் தீர்மானிக்கும் வரை, தனக்கெதிரான விசாரணையை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி தெமர் கோரியமை குறித்து இவ்வாரம் நீதிமன்றம் தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

இதேவேளை, பிரேஸில் மத்திய பொலிஸார், ஒலிப்பதிவின் விசாரணையை முடித்து, அது மாற்றியமைக்கப்பட்டதா உறுதிப்படுத்தும் வரைக்கும், ஒலிப்பதிவு பிரச்சினையை நீதிமன்றம் எடுக்காது என பிரதம நீதியரசர் கார்மென் லூசியா தெரிவித்துள்ளார்.   

இதனைத் தொடர்ந்து, விசாரணை இடைநிறுத்தப்பட வேண்டும் என்ற தமது கோரிக்கையை கைவிடுவதாக, ஜனாதிபதி தெமரின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .