2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மணல்குன்று பிரதேசத்தில் வீடு தீக்கிரை

Thipaan   / 2015 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம். சனூன்

புத்தளம், மணல்குன்று பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) மதியம் வீடொன்று தீக்கிரையாகியுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

மணல்குன்று, செம்மண்திடல் வீதியில் புத்தளம் பெரிய பள்ளியினால் ஏழ்மை நிலையில் வாழும் மக்களுக்காக வழங்கப்பட்டுள்ள 20 வீடுகளைக் கொண்ட பைதுஸ்ஸகாத் வீடமைப்புத் திட்டத்தின் 05ஆம் இலக்க வீடொன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

குறித்த வீட்டில் தனது இரு பிள்ளைகளும் வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்த போது கட்டிலின் கீழ் இருந்து புகை வெளிவந்ததாக தனது பிள்ளைகள் கூறியதாக  குறிப்பிடும் வீட்டின் உரிமையாளரான பெண், தீ எவ்வாறு ஏற்பட்டது என தெரியவில்லை எனத் தெரிவித்தார்.

எனினும், இந்த தீ அனர்த்தத்தினால் எவருக்கும் எவ்வித காயங்களோ அல்லது உயிராபத்துக்களோ ஏற்படவில்லை.
தீ பரவுவதை பொது மக்கள் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும் கூட சுய தொழில் வேலைவாய்ப்பில் ஈடுபடும் குறித்த வீட்டின் உரிமையாளரின் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புதிய ஆடைகள், தையல் இயந்திரம் மற்றும் பெட்டிக்கடை உள்ளிட்டவைகள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.  
இதேவேளை, அங்கு கூடிய பொதுமக்கள், இதற்கு முன் வீசிய மினி  சூறாவளியில் குறித்த வீடமைப்பு திட்டத்தின் இரு வீடுகளின் கூரை சீட்டுகள் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தீ அனர்த்தம் ஏற்படுவதற்கு கூட இங்குள்ள கட்டட அமைப்புகளின் சீரின்மையே காரணம் என குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக இந்த வீடமைப்பு திட்டத்தை அமைத்து வழங்கி அதனை தற்போதும் நிர்வகித்து வரும் புத்தளம் முஹியத்தீன் ஜும்மா பள்ளி தலைவர் பீ.எம். ஜனாபிடம் வினவியபோது, தீ அனர்த்தம் ஏற்பட்டதும் தமது குழுவினர் நேரில் சென்று ஆராய்ந்தாகவும் குடியிருப்பளர்கள் தமது வீடுகளை தாமே கண்காணிக்க வேண்டும் என்றும் தீயில் சேதமாகிய வீட்டுக்கு நஷ்டஈடு வழங்க தாம் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .