2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'யுத்த குற்றங்களை விசாரிக்க சர்வதேச தீர்ப்பாயம் வேண்டும்'

Gavitha   / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றத்தை விசாரிப்பதற்கு சர்வதேச தீர்ப்பாயம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் எனக்கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியன ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலயத்துக்கு (பலைஸ் வில்ஸன்) கடிதமொன்றை செவ்வாய்க்கிழமை (01) அனுப்பியுள்ளனர்.

 'இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள்  விடுதலை கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய அமைப்புக்களை சேர்ந்த நாங்கள், இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மிக மோசமான சர்வதேச யுத்தக்குற்றங்களில் இருந்து தமிழ் மக்களை பாதுகாக்க ஐ.நா சபை தவறிவிட்டமையை மீண்டும் ஒருமுறை சர்வதேச சமூகத்துக்கு நினைவுறுத்த விரும்புகின்றோம்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை குற்றம் என்பவற்றை விசாரிப்பதுக்கான சர்வதேச பொறிமுறை ஒன்றினை கண்டறிவதற்கான கருத்தாடல்கள் மற்றும் அதற்கான நியாயாதிக்கங்கள் குறித்து விவாதிப்பதில் கடந்த ஆறு வருடங்கள் உருண்டோடிவிட்டன.

ஐ.நா மனித உரிமை ஆணையகம் இலங்கை மீதான, ஐ.நா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் விசாரணை தொடர்பாக மூன்று தீர்மானங்களை தொடர்ச்சியாக நிறைவேற்றியுள்ளது. இந்த விசாரணை தொடர்பான அறிக்கை விரைவில் வெளிவரவுள்ளது. இந்நிலையில், இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேசக் குற்றங்களை  விசாரிப்பதற்கான உள்ளக பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவதற்காக விவாதங்களும் பேச்சுவாத்தைகளும் இடம்பெற்று வருகின்றன.

இறுதிக்கட்ட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளக விசாரணை பொறிமுறையோ  அல்லது சர்வதேச கண்காணிப்புடனான உள்ளக விசாரணை பொறிமுறையோ நீதியை வழங்காது என்பதனை நாம் தெளிவாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். மேலும் இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச தீர்ப்பாயம் ஒன்றை உடனடியாக உருவாக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றோம்.

இது தொடர்பாக பின்வரும் விடயங்களை தங்களது மேலான கவனத்துக்கு கொண்டுவர விரும்புகின்றோம்.
இலங்கையின் சரித்;திரத்தில், நீதித்துறையானது காலம் காலமாக தமிழ்மக்களை ஒடுக்குவதற்கான செயற்பாடுகளில்; சிங்கள அரசியல் தலமைகளுக்கு கீழ்ப்படிந்ததாகவே செயற்பட்டு வந்திருக்கின்றது.

கடந்;த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட உள்நாட்டு விசாரணைக் ஆணைக்குழுக்கள் எவ்வித காத்திரமான நல்ல விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

ஆட்சி மாற்றங்களோ அரசு மாற்றங்களோ பெயரளவுக்கு மாத்திரமே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. குற்றச் செயல்களைப் புரிந்த முக்கிய நபர்கள் தற்போதும் முக்கிய அரசியல் மற்றும் இராஐ தந்திர பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் தமிழ் மக்கள் எந்தவகையான உள் விசாரணையையும் நிராகரிப்பதுடன் இலங்கையின் நீதித்துறை மீதும் முற்றாக நம்பிக்கை இழந்துள்ளனர். உள் விசாரணை என்பது குற்றவாளிகள், தம்மீதான குற்றங்களை தாமே விசாரிப்பதற்கு ஒப்பானதாகும்.

உள் விசாரணை நடத்தப்படும் என உறுதிமொழிகள் வழங்கப்பட்ட நிலையில், இலங்கையின் அரசியலமைப்புச் சட்டமானது, யுத்தக்குற்றங்களையோ, மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களையோ, தமிழ் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல்களையோ விசாரிப்பதற்கான அரசியல் சாசன சரத்துக்களையோ சட்ட வரைவாக்கத்தையோ கொண்டிருக்கவில்லை என்பதுடன், இக்குற்றங்களை விசாரிப்பதற்கு பின் திகதியிட்ட புதிய சட்டவரைவாக்கத்தை உருவாக்கவும் அனுமதியளிக்காது என்பது நிதர்சனமான உண்மையாகும்.

ஆகவே யுத்தக் குற்றங்களையோ, மனிதர்களுக்கு எதிரான குற்றங்களையோ, பொது மக்கள் மீதான வகைதொகையற்ற தாக்குதல் குறித்தோ விசாரிக்கப்படுவதற்கான எவ்வித சட்ட அடித்தளங்களும் கிடையாது.

உள் விசாரணைக்கோ அல்லது சர்வதேச கண்காணிப்புடனான உள்ளக பொறிமுறைக்கோ அனுமதியளிப்பதானது, சர்வதேச விசாரணை தொடர்பாக மற்றும் பொறுப்புக்கூறுதல் தொடர்பாக இதுவரை எட்டியுள்ள நல்ல பெறுபேறுகளை வலுவிழக்கச் செய்வதுடன் மீண்டும் ஒருமுறை ஐ.நா தமிழ் மக்களை நிர்க்கதியாக கைகழுவி விடும் நிலையையே உருவாக்கும்.

உள் பொறிமுறையானது தற்போதுள்ள ஆதாரங்களை இல்லாமல் செய்வதற்கு வழிவகுப்பதுடன், சாட்சிகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் மீண்டும் ஒருமுறை பாதுகாப்பற்ற ஆபத்தான சூழ்நிலைக்கே தள்ளும். ஏனெனில், இலங்கையின் சாட்சிகளை பாதுகாப்பதற்கான சட்டங்களோ பொறிமுறையோ எதுவும் தற்போது இல்லை. இது ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களை மீண்டுமொருமுறை பாதிப்படையச் செய்வதற்கே வழிவகுக்கும்.

இலங்கை ஒரு வளர்முக நாடு என்பதன் அடிப்படையில், இத்தகைய குற்றங்களை விசாரிப்பதற்கான பொறிமுறைகளோ, கட்டமைப்புக்களோ அது தொடர்பான நிறுவனங்களோ இலங்கை அரசிடம் இல்லை. இந்நிலையில் உள்ளக விசாரணைக்கான பொறிமுறையானது காலத்தைக் கடத்துகின்ற செயற்பாடாகவே அமையும்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஏனைய பல அமைச்சர்களும் வெளிப்படையாகவும் திட்டவட்டமாகவும் யுத்தக் குற்றங்கள் தொட்ர்பான எந்தவொரு அரசியல் உயர்மட்டத்தினரையோ இராணுவ உயர்மட்டத்தினரையோ தண்டனைக்குள்ளாக்க மாட்டோம் என்று கூறியதன் பின்னர், உள் விசாரணை என்பது எதற்காக என்ற கேள்வியும் எழுகின்றது.

மேலதிகமாக, ஐ.நா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை மீதான விசாரணைக்கான ஆணையானது யுத்தக்குற்றக்களுக்கான விசாரணையுடன் மட்டுப்படுத்தப்படாமல், பரந்த அளவில் இனப்படுகொலை குற்றத்தை உள்ளடக்கிய சகல சர்வதேசகுற்றங்களையும் விசாரிப்பதற்கும் அனுமதியளிக்கின்றது. எனவே  உள்ளக விசாரணையோ அல்லது சர்வதேச பொறிமுறையுடனான விசாரணையோ இலங்கை அரசினால் தமிழ் மக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக எவ்வித விசாரணைகளும் நடைபெறாமலே போய்விடும்.

இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் மேம்படச்செய்வதற்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும், சர்வதேசக்குற்றங்கள் மீண்டும் இடம்பெறாவண்ணம் கட்டுப்படு;த்துவதற்கும் உறுதிகொண்டிருக்கும் உங்களை நாம் பாராட்டும் அதேவேளை, உள்ளக விசாரணை அல்லது சர்வதேச பொறிமுறையுடன் கூடிய உள் விசாரணைக்கு மாறாக, இலங்கை தொடர்பான விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்குமாறோ அல்லது பொறுப்புக்கூறலுக்கான ஒரு சர்வதேச பொறிமுறையை உருவாக்குமாறோ அல்லது யுத்தக்குற்றங்களை விசாரிப்பதற்கான சர்வதேச தீர்ப்பாயத்தை அமைக்குமாறே அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்' என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .