2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஒரு குழந்தையை பெறுமதியுள்ள மனிதனாக மாற்ற ஆசியரால் முடியும்: ஜனாதிபதி

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு தாய் பெற்றெடுக்கும் குழந்தையை பெறுமதியுள்ள மனிதனாக மாற்ற ஓர் ஆசிரியரால் முடியும். அதேவேளை, அக்குழந்தையை தத்துவவாதியாக, அறிஞராக, கலைஞனாக, அரசியல்வாதியாக, மக்கள் தலைவனாக ஆக்குவதற்கான இடமாக இருப்பது பாடசாலையாகும் என்று ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தெரிவித்தார். 

உலக ஆசிரியர் தினத்தையொட்டி, கல்வி அமைச்சு ஏற்பாட்டில் பண்டாராக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (6) நடைபெற்ற 'குரு பிரதீப பிரபா - 2015' நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாணவர்களை அறிவுள்ளவர்களாக, ஒழுக்கமுள்ளவர்களாக, திறமையான சிந்தனைகளை கொண்டவர்களாக ஆக்கும் பிரதானமான பொறுப்பு ஆசிரியர்களுடையது. ஆசிரியப் பணியானது தொழில் என்பதையும் தாண்டி சமூகத்துக்கு பொறுப்பானவர்களை உருவாக்கும் உன்னத பணியாக காணப்படுவதாலேயே ஆசிரியர்கள் சமூகத்தில் மதிக்கப்படுபவர்களாக இருக்கின்றார்கள். 

ஆசிரியர்கள் மாணவர்களது திறமைகள் மற்றும் அறிவினை வளர்ப்பதனூடாக மாணவர்களது வாழ்கையில் அவர்களை வெற்றிபெற வைப்பதுடன் மட்டும் நின்றுவிடாது அவர்களை சிறந்த பண்புகளைக் கொண்ட மனிதனாக மாற்றுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். 

அப்பாவிக் குழந்தைகள் சமூகம்விடும் தவறுகள் காரணமாக பாதிக்கப்பட்டுகின்றனர். சிறுவர்களுக்கு வகுப்பறைகளினூடாக கற்பித்தலை வழங்கும் அதேவேளை சமூகத்தினை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பாகவும் வழிகாட்டவேண்டிய நேரம் இது என்றார்.  

பாடசாலை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக பெரியவர்களை வழிகாட்டும் தேசிய வேலைத்திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்துவதன் அவசியம் தொடர்பாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இவ்விரிவான வேலைத்திட்டமானது கல்வியமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார். 

அதிபர்கள், ஆசிரியர்கள், பிரிவேனாக்களுடைய தலைவர்கள், பிரிவேனாக்களுடைய விரிவுரையாளர்கள் மற்றும் அருட்சகோதரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .