2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

எதிர்காலத்தோடு தொடர்புபடுத்தப்பட்ட இலங்கையை கட்டியெழுப்பும் பணி

Thipaan   / 2015 ஒக்டோபர் 07 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவன  குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) திலீப விஜேசுந்தர, அண்மையில் வழங்கியுள்ள ஒரு செவ்வியில், அடுத்த ஐந்தாண்டு காலத்தில் ஸ்ரீ லங்கா டெலிகொம்முக்கான தனது மூன்று பெறுமானங்கள் கொண்ட திட்டப் பிரேரணையை விளக்கியிருந்தார். மக்கள் திட்டப் பிரேரணை, பெறுமானத் திட்டப் பிரேரணை மற்றும் இலாபத் திட்டப் பிரேரணை என்பவையே அவையாகும். புதிய கருத்துக்களை உள்வாங்குவது மற்றும் அவரது ஆற்றல் என்பன, பல நாடுகளில் கூட்டாண்மை கலாசாரப் பின்னணியைக் கொண்டுள்ள அவரின் 35 வருடங்களுக்கு மேற்பட்ட தொழில்சார் முதிர்ச்சியின் விளைவால் உருவானவை.

பொறியியல், முகாமைத்துவம், கலந்துரையாடல் நடத்தல், சந்தைப்படுத்தல், புத்தாக்க சிந்தனைகள், உறவுகளில் கவனம் செலுத்துதல், பேரம் பேசலில் கவனம் செலுத்துதல் என்பன அவரது இரண்டாவது இயல்புகள் ஆகியுள்ளன. பல்வேறு நிலைகளில் அவரின் உலக வலம் இதற்குப் பெரும் துணையாக அமைந்துள்ளது.

அவர் தன்னுடைய வேலையையும் ஏனையவர்களுடன் வர்த்தகம் செய்வதை மிகவும் விரும்பிய போதிலும், தனது தனிப்பட்ட நேரத்தை, ஸ்ரீ லங்கா டெலிகொம்மின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அன்றி, அவருடைய நேரத்தை அவருடைய குடும்பத்துடனும் நண்பர்களுடனும் கழிப்பதற்கு முன்னுரிமை அளிப்பவர். எதிர்காலம் தொடர்புபடுத்தப்பட்ட இலங்கையைக் கட்டியெழுப்புவதை,  தனது இலக்காகக் கொண்டுள்ள இந்தப் பிரதம நிறைவேற்று அதிகாரி வழங்கிய நேர்காணலின் விவரம் வருமாறு...

கே: ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியாக நீங்கள் தெரிவாகியமைக்கு  பலர் இதுவரை வாழ்த்துக்களைத் தெரிவித்திருப்பார்கள். நீங்கள் மேற்கொள்ளவுள்ள இந்தப் பயணத்தில் எதிர்நோக்கவுள்ள சவால்களைச் சந்திப்பதற்கான உங்களது மூலோபாய அணுகுமுறை எவ்வாறு அமையவுள்ளது?

ஒரு நிறுவனம் என்ற வகையில் நாங்கள் முதலில் எமது அடிப்படைகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். என்னுடைய அனுபவத்தில், ஒரு நிறுவனத்தின் மிக முக்கியமான சொத்து அதன் ஊழியர்களே. ஒரு நிறுவனத்துக்குள் தொழில்துறையில் இருக்கின்ற தொழில்நுட்ப ஆற்றல் மற்றும் நிபுணத்துவம் என்பன, சவால்களை எதிர்கொள்ளும் மூலோபாயங்களை வகுப்பதில் மிகவும் முக்கியமானவை.

வரலாற்று ரீதியாக இதனை நோக்கினால் ஸ்ரீ லங்கா டெலிகொம் 150 வருடங்களாகச் செயற்பட்டு வரும் ஒரு நிறுவனம். எனவே, அதன் அனுபவத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. இந்தச் சக்தியை மேலும் அபிவிருத்தி செய்வதுதான் எனது பிரதான இலக்காகும். சகலவிதமான திறமைகளையும் ஒன்று திரட்டி, வர்த்தக ரீதியாகவும் தொழில்நுட்ப முன்னேற்றங்களிலும் ஸ்ரீ லங்கா டெலிகொம்மை மிகவும் உறுதியான ஒரு நிறுவனமாக நிலைநிறுத்துவதே, இந்த இலக்காகும். இங்கு எனது முதலாவது ஆறு மாத காலத்தில், உயர் மட்டத்தில் குழுக்களை ஒன்றிணைக்க என்னால் முடிந்துள்ளது. அத்துடன், குழுமத்தில் அவர்களுக்கிடையிலான ஒத்துழைப்பையும் ஒன்றிணைக்க முடிந்துள்ளது.

கே: உங்களது குறுகிய கால ஒப்பந்த சேவைகள் உட்பட நீங்கள் எங்கெல்லாம் பணியாற்றி உள்ளீர்கள் என்று கூற முடியுமா?

இங்கிலாந்து, கனடா, சுவீடன், எகிப்து, கட்டார், அல்ஜீரியா, நைஜீரியா, வெனிசுவேலா,

மலேஷியா, இந்தோனேஷியா, தாய்வான், சீனா, இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் நான் கடமையாற்றியுள்ளேன்.

கே: நீங்கள் ஸ்ரீ லங்கா டெலிகொம்முக்குப் பாரிய அனுபவத்தைக் கொண்டு வந்துள்ளீர்கள். இதனை எவ்வாறு ஸ்ரீ லங்கா டெலிகொம்முக்குச் சிறந்த பயனளிக்கும் வகையில் பயன்படுத்துவீர்கள்?

நான் இங்கு கொண்டுவந்திருப்பது பன்முகத் தன்மை கொண்ட கூட்டாண்மை அனுபவம் மற்றும் கூட்டாண்மை முகாமைத்துவ செயற்பாடுகளாகும். போட்டித்தன்மை மிக்க, உயர்திறன் கொண்ட, உறுதியான குழுக்களை உருவாக்கவே இவற்றைக் கொண்டு வந்துள்ளேன். ஒரு நிறுவனத்துக்குள் திறமைகளை இனங்காண்பது, அவற்றை முழு சாத்தியம் கொண்டதாக வளர்த்தெடுத்தல் என்பன சகல இடங்களிலும் எனது வெற்றிக்கு வழியமைத்துள்ளன. எனவே, நான் கவனம் செலுத்தும் பிரதான பிரிவாக ஸ்ரீ லங்கா டெலிகொம் குழுமத்துக்குள் திறமைகளை இனங்காண்பது அமைந்துள்ளது.

அவற்றுக்கு வலுவூட்டி மேலே கொண்டு வரப்படும். மேலும், வேலைத்திட்டங்களை முறையாகத் திட்டமிடும் செயற்பாடு ஒழுங்குபடுத்தப்படும். எமது உற்பத்தியிலும் சேவைகளிலும் அதியுயர் தரம் வாய்ந்த மூலப்பொருள்கள் பிரயோகிக்கப்படும். இதனை நாம் உறுதி செய்வோம். தரம் குறைந்த மூலப் பொருள் பாவனைக்கு எந்தவகையிலும் இடமளிக்கப்படமாட்டாது.

கே: உங்கள் அடுத்த நடவடிக்கையைத் திட்டமிட சந்தை நிலைவரம் பற்றி அறிந்து கொண்டீர்களா?

ஆம். இந்த விடயத்தில் நாம் செவிகளைக் கூர்மையாக்கியுள்ளோம். நீங்கள் எங்களது வர்த்தகத்தை நோக்கினால், அது ஒரு குறிக்கோளுடன் நிலை நிறுத்தப்பட்டுள்ளதைப் புரிந்து கொள்வீர்கள். அதுதான் ஸ்ரீ லங்கா டெலிகொம் அதன் நீண்ட கால பெருமைக்குரிய வரலாற்றில், வெற்றிகரமாக வர்த்தகத்தில் நிலைத்திருக்க காரணம். வர்த்தக விடயங்கள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நிபுணர்களாலும் இணை நிபுணர்களாலும் நிறுவனத்துக்குள் கட்டியெழுப்பப்பட்டுள்ளன.

சந்தை தொடர்பான ஆழமான அறிவு கொண்ட பிரதான அதிகாரிகள் எம்மிடம் உள்ளனர். அவர்கள் தமது கண்டுபிடிப்புக்களை என்னிடம் கொண்டு வருவதை, ஊக்குவிப்பதுதான் என்னுடைய பணியாகும். அதில் நான் என்னுடைய சொந்த அனுபவத்தையும் கலந்து,  மிகப் பெரிய அளவில் வெளியே கொண்டு வந்து முன்னோக்கிச் செல்கிறேன்.

சரியான திசையில் பணிகளை மேற்கொண்டு இலக்குகளை உரிய காலத்தில் அடைந்து கொள்ள ஒட்டுமொத்த ஸ்ரீ லங்கா டெலிகொம் அதிகாரிகளுக்கும் நான் பூரண சுதந்திரம் அளித்துள்ளேன். அவர்களுடைய பணிகள் தொடர்பான என்னுடைய அணுகுமுறையில், நான் மிகவும் சுதந்திரமாக உள்ளேன் என்பது அவர்களுக்குத் தெரியும். அதி உச்ச செயற்பாடு, குறிப்பிட்ட காலத்தில் பெறுபேறு என்பனவற்றில் நான் மிகவும் கண்டிப்பானவன்.

கே: தொலைத் தொடர்புத்துறை வர்த்தகத்தில்; மாறிவரும் வெளித்தோற்றத்தை நீங்கள் இனங்கண்டு கொண்டீர்களா?

ஆம். அதுபற்றி நாங்கள் நன்கு அறிந்து கொண்டுள்ளோம். உதாரணமாக, அண்மையில் நாம் எமது சந்தைப்படுத்தல் திசையை மாற்றியமைத்துள்ளோம். எம்மிடம் விரிவான தொலைத்தொடர்பு தெரிவுகள் உள்ளன. அத்துடன், கணிசமான தொழில்நுட்ப முன்னேற்றங்களும் உள்ளன. ஆனால், நாம் பாரம்பரியமானதோர் சந்தைப் பிரிவுக்கு தான் விநியோகித்து வந்தோம். சந்தையின் முழுமையான சாதக நிலையையும் நாம் அடையாளம் கண்டிருக்கவில்லை.

எனவே, சந்தையின் விரிவின் அவசியத்தை உணர்ந்து, ஒரு புதிய யுகத்தை நோக்கி, கூட்டு நிபுணத்துவத்தை வழிநடத்துவதில் பங்களிப்புச் செய்ய வேண்டும் என நான் நினைக்கின்றேன். வாடிக்கையாளருக்கு பெறுமதிகளை வழங்கக் கூடிய திட்டப் பிரேரணைகளையும் நிறுவனத்துக்கு இலாபம் தரக் கூடிய திட்டப் பிரேரணைகளையும் கொண்ட தீர்வுகளை முன்வைப்பதன் மூலம் இதனைச் செய்ய முடியும்.

கே: வாடிக்கையாளரின் தேவைகளைக் கவனத்தில் கொண்டுள்ளீர்களா?

ஆம். என்னுடைய உலகளாவிய அனுபவத்தின் மூலம் நான் மிகவும் ஆழமாக அவதானிக்கின்ற ஒரு விடயம் இதுவாகும். சந்தையில் ஏற்கெனவே என்ன உள்ளது என்பதைத் தீர்மானிக்கவும் அதிகரித்து வரும் சந்தைப் போக்கினைப் புரிந்து கொள்ளவும், சந்தை நிலை மாற்றங்களைப் புரிந்து கொள்ளவும் நான் அவதானம் செலுத்தி வருகின்றேன்.

இங்கு மிகவும் முக்கியமான விடயம், புதிய சந்தை இடைவெளியை ஏற்படுத்துவதாகும். ஸ்ரீ லங்கா டெலிகொம்மின் புதிய கண்டுபிடிப்புக்கள், வாடிக்கையாளர்களை இணங்கச் செய்யும் வகையிலான சலுகைகள் என்பனவற்றின் மூலம் இதனை மேற்கொள்ள வேண்டும்.

கே: இந்தத் தொழில்துறையில் வருமானம் தரும் பிரதான மூலமாக தரவுச் சேவைகள் அமைந்துள்ளன. இது பற்றிய உங்கள் கருத்தென்ன?

உலகத்தை உற்று நோக்கினால், தரவு முன்னேற்றம் மிக விரைவாக அதிகரித்துள்ளது. குரல் வழிச் சேவைகள் மூலம் மட்டும் வருமானம் ஈட்டலாம் என நினைப்பது பிரயோசனம் தராது. வர்த்தக நோக்கத்துக்காக தரவுகளைச் சேகரித்து வைத்தல், பரிமாற்றம் செய்தல் என்பன போன்ற தேவைகள் அதிகரித்துள்ளன. பாரியளவில் தரவுப் பரிமாற்றம் செய்வதும் கணிசமாக அதிகரித்துள்ளது. தரவு விடயத்தை நாம் மிகவும் பாரதூரமாக நோக்குகின்றோம். தரவு தான் எதிர்காலம்.

கே: ஸ்ரீ லங்கா டெலிகொம்மின் உற்பத்தி, கண்டுபிடிப்புக்கள் பற்றி ஏதாவது கூற முடியுமா?

பிரயோகங்களை நீங்கள் பார்க்க வேண்டும். உதாரணமாக, ஸ்ரீ லங்கா டெலிகொம்   பிரயோகத்தில், சமையல் கலை குறிப்புக்கள் பற்றியும் இருந்தால் வாடிக்கையாளர்களுக்கு இது மிகவும் ஆர்வத்தைத் தூண்டி அவர்கள் அதை உற்சாகமாகப் பயன்படுத்துவர். இலங்கையர்களுக்கு சிறந்த தொலைத்தொடர்புத் தீர்வுகளை வழங்குவதில் நாம் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். அதன் மூலம் அவர்களைப் புதிய உலகின் சொந்தக்காரர்கள் ஆக்கவுள்ளோம். நாங்கள் அதைச் செய்தால் ஸ்ரீ லங்கா டெலிகொம்  சந்தேகமற்ற ஒரு வர்த்தக முத்திரை என்பதும் இது இல்லாமல் உங்களால் முடியாது என்பதும் உறுதியாகும். இதுதான் நாம் உண்மையிலேயே எதிர்ப்பார்க்கும் மூலோபாயத் திசையாகும்.

கே: ஸ்ரீ லங்கா டெலிகொம்மின் கடலுக்கு அடியிலான கேபிள் வலையமைப்பு, மொபிடெல்லின் 4G LTE வலையமைப்பு FTTH  தொழில்நுட்பம் ஊடான அதிவேக அகலப்பட்டை சேவை என்பன பற்றி சற்று விளக்க முடியுமா?

கடலுக்கு அடியிலான புதிய கேபிள் வலையமைப்பு 2017இல் செயற்படத் தொடங்கும். இது ஸ்ரீ லங்கா டெலிகொம்க்கு புதிய சர்வதேச வர்த்தகத்தை திறந்து விடும். இதேவேளை, FTTH திட்டம் முன்னேற்றம் கண்டு வருகின்றது. துரிதப்படுத்தல் பிரசாரம் காரணமாக இதன் விற்பனை கடந்த ஐந்து மாதத்தில் அதிகரித்துள்ளது. LTEக்கும் இதேபோன்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பசுமை வர்த்தகச் செயற்பாடுகளில் இதன் தேவை அதிகரித்துள்ளது.

கே: சந்தையில் ஸ்ரீ லங்கா டெலிகொம்முக்கு என்று ஒரு களநிலை தினம் இல்லை. நீங்கள் எவ்வாறு போட்டியாளர்களுக்கு முகம் கொடுப்பீர்கள்?

எந்தவொரு போட்டியாளரையும் எம்மால் கையாள முடியும். போட்டி என்பது ஆரோக்கியமானது. அது எம்மைச் சரிபார்த்து மேலும் சிந்திக்கத்

தூண்டும். போட்டியில்லாத இடத்தில் ஆரோக்கியமான வர்த்தக சூழல் அமைய முடியாது. எமது போட்டியாளர்களிடம் ஓர் உறுதி உள்ளது. அது எம்மிடம் வேறு விதமாக உள்ளது. சந்தை என்பது எல்லோருக்கும் பொதுவானது. எனவே, போட்டியைக் கண்டு அச்சமடையும் தேவை எமக்கு இல்லை என்று நான் நினைக்கின்றேன். போட்டி எங்களுக்கு உற்சாகம் அளிக்கின்றது.

 அது எமது வர்த்தகத்துக்கு நவீன தகவல்களை வழங்கிய வண்ணம் உள்ளது. உங்களுக்கு 18 அல்லது 20 வயதாக இருந்த காலப்பகுதியைச் சற்று மீட்டிப் பாருங்கள். அங்கு ஓர் அழகான பெண் இருக்கின்றாள். நீங்கள் மட்டுமன்றி, அவளின் கவனத்தை பலரும் ஈர்க்க முயற்சிக்கின்றீர்கள். அங்கு போட்டி இருப்பதால், உங்களால் அதை எளிதான ஒரு விடயமாக எடுத்துக் கொள்ள முடியாது. இங்கு நீங்கள் செய்ய வேண்டியது அவளைக் கவரும் விடயத்துக்கு முன்னுரிமை வழங்கி ஆர்வம் காட்ட வேண்டியதுதான். இது உண்மையான வாழ்வில் இருந்து ஒரு சிறிய உதாரணம். போட்டி ஆரோக்கியமானது என்பதை இது வெளிப்படுத்துகிறது. அது உங்களை கடினமாக முயற்சிக்க வைக்கும் வகையில் வலுவூட்டுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .