2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

சப்ரகமுவ மாகாணத்தில் நாம் காலூன்றியுள்ளோம்: அமைச்சர் மனோ

Kogilavani   / 2015 நவம்பர் 30 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களில் திறந்து வைக்கப்பட்டுள்ள எமது அலுவகங்கள், இம்மாவட்டங்களின் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைந்த மாவட்ட செயலகங்கள் ஆகும். இந்த செயலகங்கள் மூலமாக அரசியல், தொழிற்சங்க தலைமைகளை நேரடியாக வழங்கி, மாவட்ட தமிழ் மக்களை அரவணைக்க நான் முடிவு செய்துள்ளேன்' என ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் தலைவரும் தேசிய கலந்துரையாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.   

இதற்கான ஒருங்கிணைப்பை முன்னெடுப்பது, ஜனநாயக மக்கள் முன்னணியின்  இரத்தினபுரி, களுத்துறை மாவட்ட செயலாளர்களின் தலையாய கடமைகளாகும். இதன்மூலம் இன்று நாம் இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களில் காலூன்றியுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, தமில் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயலகங்கள் இல.10, பட்டியோவிட வீதி, இரத்தினபுரி நகரிலும், இல. 23, கொஸ்வத்தைகொடை வீதி, மத்துகம நகரிலும் அமைச்சர் மனோ கணேசனால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'மலையகம் என்ற அடைமொழிக்குள்ளே மத்திய மாகாணத்தையும் மேலகம் என்ற அடைமொழிக்குள்ளே கொழும்பு, கம்பஹா மாவட்டங்களையும்  மாத்திரம் சமகால வரலாறு நடைமுறையில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இதன்மூலம், உரிய தேசிய அவதானத்தை இரத்தினபுரி, களுத்துறை மற்றும் கேகாலை மாவட்டங்கள் பெறத் தவறியுள்ளன. இந்த வரலாற்று குறைப்பாட்டை நிவர்த்தி செய்ய வேண்டியது, எனது கடமையாகும்.

நமது ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸுக்கு, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்கள் உள்ளடங்கிய சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறையிலும் பாரிய தொழிற்சங்க வரலாறு உள்ளது. நான் வளர்ந்தது கண்டியாக இருந்தாலும் சப்ரகமுவ மாகாணத்தின், கேகாலை மாவட்ட, எட்டியாந்தோட்டை பிரதேசத்திலே பிறந்தேன்.

எனவே இப்பிரதேசம் தொடர்பில் விசேட அக்கறை உண்டு.  2003 ஆண்டிலிருந்து  எமது அரசியல் நடவடிக்கைகளை இம்மாவட்டங்களில் நாம் முன்னெடுத்தோம். ஆனால், வடக்கில் நடைபெற்ற யுத்தம் காரணமாகவும் அதனுடன் தொடர்புபட்டு தென்னிலங்கையில் முன்னெடுக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் அரச பயங்கரவாதம் காரணமாகவும் நமது அரசியல் நடவடிக்கைகளை இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை மாவட்டங்களில் பெரிய அளவில் முன்னெடுக்க நான் விரும்பியிருக்கவில்லை. அப்படி செய்து அதன்மூலம், இங்கு வாழும் நமது ஆதரவாளர்களை, கஷ்டத்தில் தள்ளக்கூடாது என்ற பொறுப்புள்ள முடிவை நான் அப்போது எடுத்திருந்தேன்.  

எங்களது இடைவிடா போராட்டங்களின் மூலமாக இன்று காலம் மாறியுள்ளது. மஹந்த  ராஜபக்ஷவின் நேரடியான அரச பயங்கரவாத அராஜகம் இன்று இல்லை. ஆட்சியாளரின்  நேரடி ஆசீர்வாதத்துடன், இனவாத சக்திகள் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுத்த வெளிப்படையான இனவாதத்தை இன்று முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். அதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் துணைபோன அரசாங்க நிர்வாக, பொலிஸ், இராணுவ போக்குகளையும் நாம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். இந் நிலைமையை ஏற்படுத்த உயிராபத்துமிக்கமிக்க சூழலில், பல்வேறு அர்ப்பணிப்புகளுடன் இடைவிடாமல் நாட்டில் தேசிய ரீதியாக போராடிய முதல் ஐந்து பேரில் நானும் ஒருவன். இந்த உண்மை அரசியல் குருடர்களுக்கு தெரியாவிட்டாலும் கூட,  நமது மக்களுக்கு நன்கு தெரியும்.

நமது இனத்துக்கு இன்று எல்லாம் கிடைத்துவிடவில்லை. அதற்கான அரசியல், தொழிற்சங்க சூழல்தான் உருவாகியுள்ளன. இந்த நல்ல சூழலை பயன்படுத்தி இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை மாவட்டங்களில் பிறந்து வாழும் எனது மக்களுக்கு பணியாற்றவே ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட எமது அரசியல் அமைப்புகளின் அலுவலகங்கள் இன்று இங்கே திறந்து வைக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில், அரசியல், தொழிற்சங்கரீதியாக  வாடகை வீடுகளில் நீங்கள் குடி இருந்தீர்கள். அது இனிபோதும். இது உங்கள் சொந்த அரசியல், தொழிற்சங்க வீடு. ஆகவே இங்கு எல்லோரும் வந்து சேர்ந்து கொள்ளுங்கள். சில்லறை முரண்பாடுகளை மறந்து விடுங்கள். அனைவரும் ஒன்று சேருவோம்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .