2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு இல்லையேல் இ.தொ.கா போராட்டத்துக்கு தயார்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மடுல்சீமை பிளாண்டேசனுக்குரிய தோட்டத் தொழிலாளர்கள்  எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிடின் தொழிற்சங்கப் போராட்டமொன்றுக்கு தயாராகப் போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மடுல்சீமை பிளாண்டேனுக்கு கோரிக்கை விடுத்திருப்பதாக அதன் உப தலைவரும் சிரேஸ்ட தொழிலுறவு இயக்குனருமான எம்.வேங்குருசாமி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது,

தொழிலாளர்களின் பெரும்பாலான குடியிருப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் தோட்ட நிர்வாகங்கள் அசிரத்தை காட்டுகின்றன. ஏனோ, தானோ என்ற நிலையில் தொழிலாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தோட்ட மலைகள் முற்றிலும் காடாக மாறி வருகின்றன. அதனை முறையாக சுத்தம் செய்வதில்லை.

இதேவேளை, தோட்ட நிர்வாகத்தால் தொழிலாளர்களின் மாதச்சம்பளத்திலிருந்து அறவிடப்படும் வங்கிக் கடன்கள், கோவில் நிதி மற்றும் மரண சகாயநிதி போன்றவைகளை குறித்த தினங்களுக்கு முன்பதாக வங்கிக்கு அனுப்பப்படுவதில்லை. இதனால் தொழிலாளர்கள் அவதியுறும் நிலையும் காணப்படுகின்றது. முன்னரை விட இப்போது தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களின் கோரிக்கைகளை உரிய முறையில் தீர்வு காண்பதில் தவறுகின்றன.

படித்த இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்காது தன்னிச்சையாக வெளியாருக்கு நியமனங்களை வழங்கி வருகின்றன. புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றின்படி தொழிலாளர்களின் படித்த பிள்ளைகளுக்கு தோட்டங்களிலேயே வேலை வழங்கப்பட வேண்டும் என்பது அவ்வொப்பந்தத்தின் நியதியாகும். 

இவ்வாறான, நிலைகள் தொடர்ந்து நீடிக்காது தொழிலாளர்களின் பிரச்சினைகளில் கரிசனையுடன் இருக்க வேண்டிய பாரிய பொறுப்பு தோட்ட நிர்வாகங்களைச் சார்ந்ததாகும். இது விடயத்தில் உரிய தீர்வை மடுல்சீமை பிளாண்டேசனிடமிருந்து கிடைக்காத பட்சத்தில், தொழிற்சங்க சுழற்சிமுறைப் போராட்டமொன்றுக்கு எம்மை தயார்படுத்த நேரிடும் என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .