2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அ.இ.ம.கா.இன் நிர்வாகத் தெரிவுக்கு எதிரான வழக்கு 17 வரை ஒத்திவைப்பு

Gavitha   / 2016 மே 03 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுக்கு எதிராக, அக்கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீடினால் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணை, எதிர்வரும் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாடு, கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி அக்கட்சியின் தலைவரான அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையில் குருநாகலில் நடைபெற்றது. இம்மாநாட்டின் போது, கட்சிக்கு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. இதன்போது புதிய செயலாளராக சுபைதீன் ஹாஜியார் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த மாநாடு, கட்சியின் யாப்பு விதிகளுக்கு முரணாக கூட்டப்பட்டது என்றும் அதனால் புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிர்வாகம் செல்லுபடியற்றது என்றும் உத்தரவிடக்கோரி, அதன் முன்னாள் செயலாளர் நாயகமான வை.எல்.எஸ்.ஹமீட் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்கின் முதற்க கட்ட விசாரணை கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போது, அந்த வழக்கு 03ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த வழக்குடன் தொடர்புடைய விசாரணைகள் செவ்வாய்க்கிழமை (03) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதிபதி அதனை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

இந்த வழக்கின் பிரதிவாதிகளாக கட்சியின் தலைவரான அமைச்சர் றிஷாத் பதியுதீன், தவிசாளரான பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, புதிய செயலாளர் நாயகம் சுபைதீன் ஹாஜியார் , முன்னாள் தேசிய அமைப்பாளரான இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, முன்னாள் பிரதித் தலைவர் சட்டத்தரணி என்.எம்.சஹீத், முன்னாள் தேசிய கொள்கை பரப்பு செயலாளர் முபாரக் அப்துல் மஜீத் மௌலவி உள்ளிட்ட 15 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

எனினும் இன்று அமைச்சர் றிஷாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் நீதிமன்றுக்கு சமூகமளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .