2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சாட்சியை அச்சுறுத்தியோரைக் கைது செய்யுமாறு உத்தரவு

Niroshini   / 2016 மே 25 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கொன்றின் சாட்சியை அச்சுறுத்திய கிளிநொச்சி நகரிலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கம் ஒன்றின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரை உடன் கைது செய்யுமாறு, கிளிநொச்சி தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா இன்று புதன்கிழமை (25) உத்தரவிட்டார்.

பெண் ஒருவரை ஏமாற்றி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு இன்று புதன்கிழமை (25) நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்குடன் தொடர்புடையவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 2 சந்தேகநபர்கள் மற்றும் பிணையில் விடுவிக்கப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் என நான்கு சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

மன்றுக்குச் சமூகமளித்த பாதிக்கப்பட்ட பெண், “தனது கிராமத்தின், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் இந்த வழக்கை வாபஸ் பெறுமாறு அச்சுறுத்தியதாக” தனது சட்டத்தரணியூடாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதவான், உடனடியாக அந்த மூவரையும் கைது செய்து நாளை வியாழக்கிழமை (26) மன்றில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவிட்டதுடன், “நீதிமன்ற வழக்கில் யாரும் தலையிடக்கூடாது. அவ்வாறு தலையிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .