2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சபையின் தீர்மானத்துக்கு சவால் விடுவது சிறப்புரிமை மீறல்: பிரதமர்

Kanagaraj   / 2016 மே 26 , மு.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான தீர்மானம் தொடர்பில், சபாநாயகரினால் தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைவான தீர்மானமொன்றும் நாடாளுமன்றத்தினால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த தீர்மானத்தை நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்துவது சிறப்புரிமை மீறலாகும் என்றும் சுட்டிக்காட்டிய அவர், மேற்படி மனு விவகாரம் தொடர்பில் சபாநாயகர் தீர்ப்பொன்றை வழங்கி, அதை உயர்நீதிமன்றத்துக்கும் அறிவிக்க வேண்டும் என்றும் கோரிநின்றார்.

நாட்டைச் சில நாட்களாக ஆட்கொண்டிருந்த இயற்கை அனர்த்தம் தொடர்பில் விவாதிப்பதற்கான சிறப்பு அமர்வு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று பிற்பகல் 1 மணிக்கு கூடியது.

சபாநாயகரின் அறிவிப்பையடுத்து எழுந்த பிரதமர் ரணில் ரணில் விக்கிரமசிங்க, சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை முன்வைத்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றி விளக்கமறிக்கையில்,

'ரியர் அட்மிரல் டொக்டர் சரத் வீரசேகர மற்றும் பேராசிரியர் விமலதர்ம அபேவிக்ரம ஆகியோரால், எனக்கு எதிராக மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவுக்கு அமைவாக, அரசியலமைப்புக்கு முரணான வகையில் எனக்கு அழைப்பாணையும் விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய அரசாங்கம் பற்றிய தீர்மானம் மற்றும் அந்தத் தீர்மானத்துக்கு எந்தெந்த கட்சிகள் அவசியம் என்பது பற்றி, சபாநாயகரால் 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி தீர்ப்பொன்று வழங்கப்பட்டது.

அதன் பிரகாரம் நான், தீர்மானமொன்றைச் சமர்ப்பித்திருந்தேன். அந்தத் தீர்மானமும் சபையினால் அங்கிகரிக்கப்பட்டது.
தற்போது அந்த விடயம் அனைத்தும் முடிந்துவிட்டன. இனி, சபாநாயகரின் தீர்ப்பு, கேள்விக்கு உட்படுத்தப்பட முடியாது. இது, இந்த மீயுயர்சபையின் அதிகாரங்களில் ஓர் அங்கமாகும்.

எனினும், சபாநாயகரினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம் நிறைவேற்றப்பட்ட விடயமொன்று தொடர்பில் பதிலளிப்பதற்காக, என்னையோ அல்லது எனது சார்பான சட்டத்தரணியையோ, நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களித்த ஒரேயொரு எம்.பி என்றும், மனுதாரர் தம்மை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அரசாங்கமொன்று எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்ற மொத்தத் தீர்மானத்தையும் அவர், நீதிமன்றத்தில் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார். எனினும், இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை அவர் இங்கு குறிப்பிடவில்லை.
அத்துடன், நாடாளுமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட மேற்படி செயல்நோக்கம் கொண்ட தீர்மானமானது, சட்டத்தின் அமுலில் கிடையாது என்றும் மனுதாரர் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு பல்வேறு விடயங்களும் இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும், அரசியலமைப்பினால் எமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், சபாநாயகரினால் வழங்கப்பட்ட தீர்ப்பையும் சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் கேள்விக்குட்படுத்துவதற்கு ஒப்பானதாகவே அமைந்துள்ளன.

இந்த சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தைக் கேள்விக்கு உட்படுத்துவது, சிறப்புரிமையை மீறும் செயலாகும். இது வேண்டுமென்றே செய்யப்பட்டதொன்றாகும். ஏனெனில், சபாநாயகரால் வழங்கப்பட்ட தீர்ப்பு, இந்த மனுவில் வெளிப்படுத்தப்படவில்லை. மனுதாரர், இந்த சபையில் உறுப்பினராக இருந்தவர் என்ற வகையில், அது தொடர்பில் அவர் அறிந்திருக்க வேண்டும். அதைவிடுத்து, தமக்குத் தெரியாது என்று கூற முடியாது.

அது மட்டுமல்லாது, எமக்கு (நாடாளுமன்றத்துக்கு) அளிக்கப்பட்டுள்ள நீதிமன்ற அதிகாரம் உள்ளிட்ட நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள், அந்த மனுவில் வெளிப்படுத்தப்படவில்லை.

ஆகவே, மனுதாரர்கள் இருவராலும் வேண்டுமென்றே இழைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல் விடயத்தைக் கவனத்தில் எடுத்து, அது தொடர்பில் தீர்ப்பொன்றை வழங்குமாறும், அந்தத் தீர்ப்பை உயர்நீதிமன்றத்துக்கும் அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்' என்று தெரிவித்தார்.

அத்துடன், இந்த வேண்டுகோளை தாங்களும் முன்வைப்பதாக, அமைச்சர்களான கயந்த கருணாதிலக மற்றும் ஹரீன் பெர்ணான்டோ ஆகிய இருவரும் சபாநாயகரிடம் தெரிவித்தனர்.

இதேநேரம், இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க, சிறு கால அவகாசமொன்றைத் தருமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X