2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'புகைப்பிடிப்போரின் தொகை 5% ஆல் குறைந்துள்ளது'

Gavitha   / 2016 ஜூன் 01 , மு.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

'புகைத்தலுக்கு எதிராக நாம் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவாக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்நாட்டில் புகைப்பிடிக்கும் ஆண்களின் தொகை, சுமார் 5 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மதுபானம் மற்றும் புகைத்தலுக்கு எதிரான வேலைத்திட்டத்தின்போது அரசாங்கம், மிகத் தெளிவானதும் நேரடியானதுமான தீர்மானங்களை மேற்கொள்ளும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் நேற்றாகும். அதனையொட்டி, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற, புகைத்தல் எதிர்ப்பு தின பிரதான வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தற்போது, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வருமானத்தில் 35  சதவீதம் மதுபானம் மற்றும் புகைத்தல் என்பவற்றுக்குச் செலவிடப்படுவதுடன், இது, நாட்டில் வறுமை நிலை அதிகரிப்பதற்கும் மக்களின் சுகாதாரம் குன்றுவதற்கும் முக்கிய காரணமாக அமைந்துள்ளதெனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது தொடர்பாக அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதாகக் குறிப்பிட்டார்.

ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், புகைத்தலுக்கு எதிராகத் தாம் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவாக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள், இந்நாட்டில் புகை பிடிக்கும் ஆண்களின் தொகை சுமார் 5 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும், இந்நிலைமையை மேலும் விருத்தி செய்வதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வர்த்தகத் துறையின் தந்திரோபாயங்கள் மற்றும் மக்களைக் கவரும் விதமான விளம்பரங்களினால், எமது இளைஞர் சமுதாயம் வழி தவறிச் செல்வதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இவற்றை தோற்கடிப்பதற்காகக் கைகோர்ப்பது அனைவரதும் பொறுப்பாகுமெனவும் தெரிவித்தார்.

'எமது நாட்டின் பெயரை உள்ளடக்கியதாக, இலங்கை புகையிலைக் கம்பனி செயற்பட்டபோதிலும், எமது நாடு இதன் பங்காளராகச் செயற்படவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவிதமான வருமான வழிகளுடனும் அரசாங்கம் பணியாற்ற மாட்டதென வலியுறுத்தினார்.

அன்று, சிகரெட் பக்கெட்டில் சுகாதார எச்சரிக்கையை 80 சதவீதமாக மாற்றுவதற்காக வர்த்தமானி அறிக்கை வெளியிடப்பட்டதன் காரணமாக, அலரி மாளிகையின கதிரைகளில் அமர்ந்திருந்த புகையிலைக் கம்பனிகளின் பணிப்பாளர்கள் முன்னிலையில் விளக்கமளிப்பதற்கு நேர்ந்த வரலாற்றை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இதனை நாட்டு மக்கள் அவதானத்துடன் நோக்கியதன் காரணமாக, இந்த நாட்டின் தாம் ஜனாதிபதியாகப் பதவி வகிப்பதாகவும் குறிப்பிட்டார்.

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்துடன் இணைந்ததாக, நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களையும், ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .