2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

திடீர் அனர்த்தங்கள்: 'தடுக்க முடியாது: எச்சரிக்கவே முடியும்'

Gavitha   / 2016 ஜூன் 01 , மு.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனனி ஞானசேகரன்

'நாட்டில் ஏற்படும் அனர்த்தங்களை எங்களால் நிறுத்;தி வைக்க முடியாது. அதற்கான எச்சரிக்கையை மட்டுமே விடுக்க முடியும்' என மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா கூறினார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்கிழமை (31) ஊடகவியலாளர் மாநாடொன்று இடம்பெற்றது. இதில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, 'கொழும்பில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கொலன்னாவையில் குப்பைகள் அதிகரித்துள்ளமையினால் பாரிய சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. குப்பைகளை அகற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
 இது குறித்து அனர்த்த முகாமைத்துவ தலைமை அதிகாரி ஆலோசனையினை முன்வைத்தார். அதாவது, நாட்டிலுள்ள மாகாணத் திணைக்களத்திடமும் உபகரணங்கள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி மூன்று நாட்களில் குப்பைகளை அகற்றத் திட்டமிட்டுள்ளோம்.

இதன்போது ஒரு மாகாணத்துக்கு ஒரு வாகனத்தையாவது அனுப்புவதற்கு கோரியுள்ளோம். அத்துடன், இது குறித்து அநுர பிரியதர்சன யாப்பாவுடன் இணைந்து அமைச்சவையில் கலந்துரையாடி பண ஒதுக்கீடு செய்யத் தீர்மானித்துள்ளோம் என்றார்.

மேலும், நல்லாட்சி அரசாங்கம், பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித உதவிகளையும் செய்யவில்லையெனக் கூறுகின்றனர். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலவிதமான உதவிகளை அரசாங்கம் செய்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், மேலும் பல உதவிகளை செய்வதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த பிரதேசங்களுக்கு அனர்த்தங்கள் ஏற்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், மக்கள் இதனைக் கவனத்தில் கொள்ளவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசாங்கம் எங்களுக்கு உதவவில்லை என மண்சரிவு ஏற்பட்ட பிரதேச வாசிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். அரசாங்கம் உதவவில்லையென எவ்வாறு கூறுகின்றார்கள்? அனர்த்தம் ஏற்பட்ட நாளில் இருந்து உதவுவது இராணுவத்தினர், கிராம சேவகர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் போன்றனரே உதவுகின்றனர். அப்படியெனில், எவ்வாறு அரசாங்கம் உதவவில்லையெனக் கூறுகின்றீர்கள்? என அமைச்சர் கேள்வியேழுப்பினார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட அரநாயக்க பகுதியிலுள்ளவர்களுக்கு தற்காலிக கூடாரங்கள் அமைத்துக் கொடுக்கவுள்ளதாகவும் அதற்காக 5 குழுக்களை நியமித்துள்ளதாகவும் அப்பகுதியிலுள்ள சேதமாகிய நிலப்பரப்புகளை விவசாய நிலமாக மாத்திரமே பயன்படுத்த முடியும், வீடுகள் அமைக்க முடியாது எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .