2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

'எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை...' காலத்தை வென்ற கவிஞன்

George   / 2016 ஜூன் 24 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று கவியரசர் கண்ணதாசனின் 89ஆவது பிறந்த தினமாகும் அவரைப் பற்றிய சில மலரும் நினைவுகள் இதோ...

சிவங்கை மாட்டம் சிறுகூடல் பட்டியில் பிறந்தவர் கண்ணதாசன். பெற்றவர்கள் வைத்த பெயர் முத்தையா, வளர்த்தவர்கள் வைத்த பெயர் நாராயணன், அவரே அவருக்கு வைத்துக் கொண்ட பெயர் கண்ணதாசன். 

கண்ணனை அவருக்கு மிகவும் பிடிக்கும். கண்ணைப்போல தன் வாழ்க்கையிலும் லீலைகள் செய்தவர். காரை முத்துப்புலவர், வணங்காமுடி, கமகப்ரியா, பார்வதி நாதன், ஆரோக்கியசாமி இவரது புனைப்பெயர்கள்.

படித்தது எட்டாம் வகுப்புதான். எட்டு வருட படிப்பிலேயே தமிழ் இவர் ரத்தத்தில் கலந்தது. புலவர் அப்பாதுரையிடம், இலக்கணமும், இலக்கியமும் கற்றார். திருமகள், சண்டமாருதம், திரையலி, தென்றல் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார். 

கிரகலட்சுமி பத்திரிக்கையில் எழுதிய 'நிலவொளியில்' தான் இவர் எழுதிய முதல் கதை. 8 வயதில் 'கடைக்கு போனேன், காலணா கொடுத்தேன், கருப்பட்டி வாங்கினேன்...' என்ற கவிதை முதல் கவிதை. 'கன்னியின் காதலி' பாடல் எழுதிய முதல் திரைப்படம்.

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளில் 5 ஆயிரம் திரைப்பாடல்கள், 4 ஆயிரம் கவிதைகள். நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இவர் சாதனை. யேசு காவியமும், அர்த்தமுள்ள இந்து மதமும், வனவாசமும், பாண்டமாதேவியும் தமிழ் உள்ளவரை வாழும் நூல்கள், 'சேரமான் காதலி'க்காக சாகித்ய அகாடமி வாங்கினார். திரைப்பாடலுக்காக பல முறை தேசிய விருது வென்றார்.

சில திரைப்படங்களில் நடித்தார். சில திரைப்படங்கள் தயாரித்தார், 'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு' என்று உண்மை பேசினார். 'என்னை பின்பற்றாதீர்கள், என் எழுத்துக்களை பின்பற்றுங்கள்' என்றார். 'படைப்பதினால் நானும் இறைவன். எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை' என்று தத்துவம் பேசினார்.

தயாரித்த திரைப்படங்கள் அவரது சேமிப்பை சுரண்டியது. அருந்திய மது அவரது ஆரோக்கியத்தை சுரண்டியது. 54 வயதில் பாடுவதையும், மூச்சு விடுவதையும் நிறுத்திக் கொண்டார். ஆனால் அவர் பாடல்கள் உலகில் காற்று உள்ளவரை வாழ்ந்துகொண்டே இருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X