2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கண்ணகி கலை இலக்கியவிழா 2016

Gavitha   / 2016 ஜூன் 25 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

2011ஆம் ஆண்டு முதல் வருடாவருடம் கண்ணகி கலை இலக்கியக் கூடல் அமைப்பினால் நடத்தப்பட்டு வரும் கண்ணகி இலக்கிய விழாவின் ஆறாவது விழா, இன்று 25ஆம் திகதி மற்றும் நாளை 26ஆம் திகதி, மட்டக்களப்பு கன்னன்குடா மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான அறிவித்தல்களை ஊடகங்களுக்கும் வழங்கும் ஊடகச் சந்திப்பு, நேற்று வெள்ளிக்கிழமை (24) மட்டக்களப்பிலுள்ள வொயிஸ் ஒப் மீடியா நிறுவன மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கண்ணகி கலை இலக்கியக் கூடலின் செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன், அ.செல்வேந்திரன், அன்பழகன் குரஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கண்ணகி தொடர்பான கலை, இலக்கியங்களை அறிமுகம் செய்து பரவலாக்குதல்,  பண்டையகாலம் தொடக்கம் இன்றுவரை பயின்றுவரும் கண்ணகி தொடர்பான தொன்மங்களை மீட்டுப் பார்த்தல், கிழக்கிலங்கையின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் கண்ணகி இலக்கியங்களை வெளிக்கொணர்தல், தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் குறிப்பாக கிழக்கிலங்கையிலும் நிலவும் கண்ணகி நம்பிக்கைகளுக்கிடையேயான பொதுமைகளை ஆராய்தல் போன்ற நோக்கங்களைக் கொண்டு, 2011இல் ஆரம்பிக்கப்பட்ட கண்ணகி இலக்கியவிழா, 2016ஆம் ஆண்டு மட்டக்களப்பின் கன்னன்குடாவில் நடைபெறவுள்ளது.

2011ஆம் ஆண்டு தொடக்கவிழா அன்று வெளியிடப்பட்ட கண்ணகி இலக்கியவிழா  பட்டயத்துக்கு அமைவாக, இந்த நிகழ்வு வருடம் தோறும் நடத்தப்பட்டு வருகின்றது.

முதலாவது கண்ணகி இலக்கியவிழாவை, கண்ணகி இலக்கிய விழா- 2011 ஜூன் 18, 19ஆகிய திகதிகளில் மட்டக்களப்பிலுள்ள அரசடி மகாஜனக் கல்லூரிக் கலை அரங்கில் நடைபெற்றது.

இரண்டாவது விழாவான கண்ணகி இலக்கியவிழா- 2012 ஜூலை 28, 29 ஆகிய திகதிகளில் மட்டக்களப்பில் புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலய மண்டபத்திலும் மூன்றாவது விழாவான கண்ணகி இலக்கியவிழா- 2013ஐ ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்திலும், நான்காவது கண்ணகி இலக்கிய விழா- அம்பாறை மாவட்டம் தம்பிலுவிலில் 2014 ஓகஸ்ட் 01,02,03 ஆகிய தினங்களில் தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய கண்ணகிகலை அரங்கு மற்றும் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய மண்டபத்திலும் நடத்தப்பட்டன.

ஐந்தாவது விழாவான கண்ணகி இலக்கியவிழா- 2015 ஐ மட்டக்களப்பு மாவட்டத்தில் வந்தாறு மூலையில் ஜூன் 13, 14 ஆகிய தினங்களில் வந்தாறுமூலை விஷ்ணு மகாவித்தியாலய விபுலானந்த மண்டபத்திலும் நடத்தப்பட்டது.

எமது பாரம்பரியக் கலைவடிவங்களையும் இலக்கியங்களையும், பண்பாட்டு விழுமியங்களையும் மீளக் கட்டமைத்துப் பேணி வளர்தெடுக்கும் மற்றும் எதிர்காலத்தில் கிழக்கிழங்கைத் தமிழ்ச் சமூகத்தைப் பண்பாட்டுத்தளத்தில் ஒன்றிணைந்து அவர்களது சமூக, பொருளாதார, கல்வி, கலை, இலக்கிய, ஆன்மீக மேம்பாட்டை நோக்கி அவர்களை அறிவுபூர்வமாக ஆற்றுப்படுத்தும் நோக்கங்களையும் கொண்டு கண்ணகி கலை இலக்கியக் கூடல் செயற்பட்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .