2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பெற்றுக்கொடுத்துள்ளோம்'

Niroshini   / 2016 ஜூன் 25 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இந்நாட்டு மக்களுக்கு இல்லாமலிருந்த ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் தற்போதைய அரசாங்கம் பெற்றுக்கொடுத்துள்ளது என தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  2015ஆம் ஆண்டு ஜனாதிபதி  தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்றும் கடப்பாட்டுடன் அரசாங்கம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தை அதிகாரத்துக்குக் கொண்டுவருவதற்காக ஆதரவளித்த சட்டத்தரணிகளுடன் நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஒரு சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பொருமையுடன் அரசாங்கத்துடன் கைகோர்க்குமாறும் ஜனாதிபதி சட்டத்தரணிகளிடம் கேட்டுக்கொண்டார்.

அரசியல் மற்றும் சமூகப் புரட்சியினூடாக புதிய அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதற்காக சட்டத்தரணிகள் வழங்கிய பங்களிப்புகளுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

தம்மை சந்திப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தருமாறு சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளித்த ஜனாதிபதி, தம்மை சந்திக்கவரும் எந்த ஒருவருக்கும் தமது உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவுகள் திறந்தே உள்ளது எனக் குறிப்பிட்டார்.

மக்கள் எதிர்பார்த்த ஒரு ஜனாதிபதியாக தாம் எல்லோருடைய கருத்துக்களுக்கும் செவிசாய்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் பைசர் முஸ்தபா, முன்னால் இராஜாங்க அமைச்சர் ராஜா சமரநாயக, சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் உபுல் ஜயசூரிய, சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.சி வெலியமுன, சிரேஷ்ட சட்டத்தரணி கான்தி கண்ணங்கர ஆகியோரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .