2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

'இந்துக்களின் நல்லெண்ணங்களை மதிக்கின்றேன்'

Niroshini   / 2016 ஜூன் 25 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நான் இந்துக்களை மதிக்கின்றேன். இதுவரை இந்துக்கள் எந்த ஒரு மாற்று மதத்தவரின் இடத்தையும் கைப்பற்றி இடையூறு செய்ததாக எனக்கு முறைப்பாடுகள் வந்ததில்லை. உங்கள் எல்லை கடந்த பொறுமையையும் நல்லெண்ணங்களையும் நான் மதிக்கின்றேன்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய வளாகத்தில் மாற்று மதத்தினர் பலாத்காரமாக சிலை வைத்துள்ள விவகாரம் தொடர்பாகவும் மட்டகளப்பு காசி லிங்கேஸ்வரர் ஆலய வரலாற்று தொல்பொருள் சின்னங்கள் அமைந்துள்ள பிரதேசம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்ற விடயங்கள் தொடர்பாகவும் இந்துக்கள் எதிர்நோக்கும் சமகால பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதியை தெளிவூட்டும் அவசர சந்திப்பொன்று இந்து சம்மேளனத்தின் தலைவர் அருண்காந்த் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதிக்கு அருண்காந்தால் புனித பகவத் கீதை நூல் ஒன்று நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

இங்கு இந்து சம்மேளனத்தின் தலைவர் அருண்காந்த் கூறுகையில்,

“நாம் என்றுமே இந்து மதம் விதந்துரைத்துள்ள அஹிம்சை கொள்கைகளையே கடைபிடித்து வருகின்றோம். இலங்கையில் மட்டுமல்ல உலகில் எங்குமே மாற்று மதத்தவரின் புனித இடங்களில் அநாவசியமாக எமது மதச் சின்னங்களை நிறுவிய வரலாறு கிடையாது. அப்படி இருக்கையில் எமது அஹிம்சை கொள்கையை பலவீனமாக கருதி பல்வேறு மதப்பிரிவினர் எமது ஆலயங்களுக்குச் சொந்தமான இடங்களைக் கைப்பற்றுவது மட்டுமல்லாது அவ்விடங்களில் அநாவசியமாக சிலைகளையும் நிறுவி வருகின்றனர்.

ஏன் அஹிம்சையை மதிக்கின்ற, பின்பற்றுகின்ற எங்கள் மக்களுக்கு மட்டும் இவ்வாறு இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றது? நாம் இந்த நாட்டில் சமய நல்லிணக்கத்தை வேண்டுகின்றவர்கள். அதனால் தான் பௌத்த இந்து மாநாடுகளை நடாத்தி வருகின்றோம். இதன் மூலம்  பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து வருகின்றது.

எனினும், எங்களால் இவ்விரண்டு பிரச்சினைகளையும் தீர்க்க முடியாததற்கு காரணம் இவ்விரண்டு பிரச்சினைகளிலுமே அரசியல்வாதிகள் பின்புலமாக இருந்து அவரவர் மக்களை பிழையாக வழிநடாத்தி வருகின்றனர்.

எனவே, இந்துக்களின் ஆத்மாவாக விளங்கும் திருக்கேதீஸ்வர வளாகத்தினை காப்பாற்றித் தாருங்கள்” என்றார்.

இதனை  செவிமடுத்த ஜனாதிபதி  தமது பதிலுரையில் கூறியதாவது,“

“நான் இந்துக்களை மதிக்கின்றேன். இதுவரை இந்துக்கள் எந்த ஒரு மாற்று மதத்தவரின் இடத்தையும் கைப்பற்றி இடையூறு செய்ததாக எனக்கு முறைப்பாடுகள் வந்ததில்லை. உங்கள் எல்லை கடந்த பொறுமையையும் நல்லெண்ணங்களையும் நான் மதிக்கின்றேன்.

இந்து பௌத்த சமயங்களில் சொல்லப்படுகின்ற மற்றவர்களுக்கு ஊறு விளைவிக்காத மனிதத்துவத்தை, பசுவதையில் ஈடுபடாமை போன்ற விடயங்களில் நீங்கள் உறுதியாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது. எனினும், மற்றைய மதத்தினர் அவரவர் மதங்களில் சொல்லப்பட்டிருப்பதை அவர்கள் பின்பற்றுவதை நாம் எதிர்க்கத் தேவையில்லை.

நான் உங்களுடைய புனித பிரதேசமான திருக்கேதீஸ்வரம் ஆலய வளாகத்தில் இடம்பெற்றுள்ள பிரச்சினை தொடர்பாகவும், மட்டகளப்பு காசிலிங்கேஸ்வரர் ஆலய தொல்பொருள் பிரதேசம் தொடர்பாகவும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி கூறுவதற்காகவும் நீங்கள் குறிப்பிட்ட மூன்று அமைச்சர்களையும் உடனடியாக அழைத்துப் பேசுவேன்.

நீங்கள் என் மீதும் எனது அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைக்கலாம். நீங்கள் எனக்கு வழங்கிய பகவத்கீதையை நான் ஒரு உயர்ந்த பொக்கிஷமாகவும் தினம் வாசிக்கும்படியும் பத்திரப்படுத்துவேன்” என்றார்.

இந்தச் சந்திப்பில் இந்து சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .