2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கழுகுகள் கிரிக்கெட் இரவு: முடிசூடியது சாவகச்சேரி சிவன்

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 28 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமரர் மார்க்கண்டு நாகராசா ஞாபகார்த்தமாக, வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம், கடந்த வெள்ளிக்கிழமை (24), சனிக்கிழமை (25), ஞாயிற்றுக்கிழமைகளில் (26) தமது மைதானத்தில் நடாத்திய கழுகுகள் கிரிக்கெட் இரவு என வர்ணித்து நடாத்திய, அணிக்கு எட்டு பேர், ஆறு ஓவர்கள் கொண்ட, நாடாளாவிய ரீதியிலிருந்து 52 அணிகள் பங்கு கொண்ட, விலகல் முறையிலான மாபெரும் மென்பந்தாட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் சம்பியனாக சாவகச்சேரி சிவன் விளையாட்டுக் கழகம், சம்பியனாக முடிசூடிக் கொண்டது.

சிவன் விளையாட்டுக் கழகத்துக்கும் மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டுக் கழகத்தின் பி அணிக்குமிடையே இடம்பெற்ற இறுதிப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற டிஸ்கோ பி அணி, சிவன் விளையாட்டுக் கழகத்தை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிவன் விளையாட்டுக் கழகம், ஆறு ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 44 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக தர்ஷன், எட்டுப் பந்துகளில், 2, ஆறு ஓட்டங்கள், 1, நான்கு ஓட்டம் உள்ளடங்கலாக 17 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

பந்துவீச்சில், டிஸ்கோ பி அணி சார்பாக, இரண்டு ஓவர்கள் பந்துவீசிய அபி, 11 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் இலங்கை தேசிய அணிக்கு தெரிவாகியிருந்த சஞ்சீவன், தனது ஓவரில், நான்கு ஓட்டங்களை விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு 45 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய டிஸ்கோ பி அணி, ஆறு ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 43 ஓட்டங்களைப் பெற்று, பரிதாபகரமாக ஒரு ஓட்டத்தால் தோல்வியைத் தளுவியது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, மூன்று பந்துகளை எதிர்கொண்ட ஆனந், 2, ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 12 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

பந்துவீச்சில் சிவன் விளையாட்டுக் கழகம் சார்பாக, இரண்டு ஓவர்கள் பந்துவீசிய தீபன், 13 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், தர்ஷன் தனது ஓவரில், ஏழு ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்தார்.

மேற்படி இறுதிப் போட்டியின் நாயகனாக, சாவகச்சேரி சிவன் விளையாட்டுக் கழகத்தின் தர்சன் தெரிவானார்.

இத்தொடரில் பங்கேற்ற 52 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும் 13 அணிகள் இடம்பெற்று, விலகல் முறையிலேயே போட்டிகள் இடம்பெற்றிருந்தன.

அந்தவகையில், குழு ஏயிற்கான காலிறுதிப் போட்டியில், கொக்குவில் ஸ்ரீ காமாட்சி விளையாட்டுக் கழகத்தை ஒன்பது ஓட்டங்களால் தோற்கடித்து, சாவகச்சேரி சிவன் விளையாட்டுக் கழகம் அரையிறுதிக்கு தகுதி பெற்றதுடன், குழு பியிற்கான காலிறுதிப் போட்டியில், பருத்தித்துறை வீனஸ் விளையாட்டுக் கழகத்தை இரண்டு விக்கெட்டுகளால் தோற்கடித்து அரியாலை ஐக்கியம் விளையாட்டுக் கழகம் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்ததுடன், குழு சியிற்கான காலிறுதிப் போட்டியில், மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டுக் கழகத்தின் ஏ அணியினை ஆறு விக்கெட்டுகளால் தோற்கடித்து கொக்குவில் ஏ.பி விளையாட்டுக் கழகம் அரையிறுதிக்கு சென்றதுடன், குழு டியிற்கான காலிறுதிப் போட்டியில், வதிரி ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகத்தினை ஐந்து விக்கெட்டுகளால் தோற்கடித்து மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டுக் கழகத்தின் பி அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தன.

முதலாவது அரையிறுதிப் போட்டியில், அரியாலை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தினை எட்டு ஓட்டங்களால் தோற்கடித்து சாவகச்சேரி சிவன் விளையாட்டுக் கழகம், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்ததோடு, இரண்டாவது அரையிறுதியில், கொக்குவில் ஏ.பி விளையாட்டுக் கழகத்தினை 38 ஓட்டங்களால் தோற்கடித்து மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டுக் கழகத்தின் பி அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .