2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஆட்சியை கவிழ்க்க கள்வர்களுக்கு இடமளியேன்: பிரதமர்

Kanagaraj   / 2016 ஜூலை 24 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கடந்த அரசாங்கத்தின் ஊழல் பேர்வழிகளின் கூக்குரலால் நல்லாட்சி அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை இடை நிறுத்த முடியாது என்றும், இந்த நல்லாட்சி அரசாங்கம் ஐந்து வருடங்களுக்கு பயணிக்கும், அதனை கவிழ்ப்பதற்கு கள்வர்களுக்கு இடமளிக்கமாட்டேன் என  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கண்டி செங்கடகல தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை சேர்த்துக் கொள்ளும் நிகழ்வு, கண்டி குயின்ஸ் ஹோட்டலில் நேற்றுச் சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த ஆட்சியில் எதனை எடுத்துக் கொண்டாலும் திருட்டும், ஊழலும் மலிந்து காணப்பட்டன. ஊழல் இல்லாத எந்த ஒரு நிறுவனமும் இருக்கவில்லை. சகல துறைகளிலும் ஊழலே மலிந்து காணப்பட்டது.

இதன் காரணமாக சர்வசே நாடுகள் எம்மைப்பற்றி தவறான கண்ணோட்டத்திலே இருந்தன. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து உலக நாடுகள் எமக்கு உதவி செய்ய முன் வந்தன. இதனால் பில்லியன் ரூபாய் கணக்கில் எமக்கு உதவிகள் வந்து சேர்ந்துள்ளன. அப்படியான உதவிகளை திருடாமல் பார்த்துக்கொண்டிருக்க சிலரால் முடியாது. இதனாலே அவர்கள் ஆட்சி மாற்றம் ஒன்று தேவை எனக் கூக்குரலிடுகின்றனர். இதனை ஏற்க முடியாது. அதற்கு இடமளிக்கவும் மாட்டேன் என்றார்.

அப்படியான திருடர்களை சேர்த்துக்கொண்டு எம்மையும் திருடச் சொல்கின்றனர். அதனைச் செய்ய முடியாது. சர்வதேச அரங்கில் இலங்கைக்கு பாரிய அவப்பெயர் ஒன்று கடந்த ஆட்சியின் போது இருந்தது.
இதன் காரணமாக மேற்குலக உயர் மட்ட அங்கத்தவர்கள் எவரும் இலங்கைக்கு வரவில்லை. ஆனால், மங்கள சமரவீர, வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு, எமது நாடு பற்றிய நல்ல அபிப்பிராயம் ஏற்பட ஆரம்பித்தது.

ஆனால் ஒரு சில ஊடகங்கள் மங்கள சமரவீர பதவி விலக வேண்டும் எனக் கூறுகின்றன. இன்னும் சில ஊடகங்கள்  வரம்பு மீறுகின்றன. சிறுபான்மை இனங்களான தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைப்பற்றி தவறான கருத்தையே தொடர்ந்து எழுதுகின்றன. அவை எந்த ஊடகங்கள் என்பது எனக்குத் தெரியும். முன்னர் என்னையும் பதவி விலகச் சொல்லி அவர்கள் எழுதினார்கள்.

அதேபோல் இலங்கையின் பொருளாதரம் பற்றி எழுதும் பிரபல ஆங்கிலப் பத்திரிகை எமது பொருளாதாரத்தை கேவலமாக விமர்சித்தது. ஆனால், முன்பை விடக் கூடுதல் கடன் இவ்வருடம் கிடைத்துள்ளது. அதாவது உலக நாடுகள் எமது பொருளாதாரக் கொள்கையை ஏற்றுள்ளன. பத்திரிகைகள் எம்மை விமர்சிப்பதற்காக இக் கும்பலை சேர்த்துக்கொள்ள முடியாது.

கள்வர்களையும் ஊழல் பேர்வழிகளையும் உள்வாங்குவதற்காக அரசைக் கவிழ்க்க வேண்டும் எனக்கூறுபவர்களுக்காக நாம் எதனையும் அடிபணிந்து செய்ய மாட்டோம். கண்டியில் பாரிய அபிவிருத்திப் பணிகளை எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

எதிர்காலத்தில் கண்டி நகரானது பேராதனையில் இருந்து குண்டசாலை வரை விரிவடைந்து இருக்கும். முன்னைய ஆட்சியில் போன்று வடக்கு அதிவேக வீதி என்ற பெயரில் கண்டியின் எல்லையில் நாம் அதிவேக வீதி அமைக்கவில்லை. கண்டி நகரை ஊடாகச் செல்லும் பெருவீதியை அமைக்க உள்ளோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X