2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கையேந்தும் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர்: சுகாதார அமைச்சர்

Menaka Mookandi   / 2016 ஜூலை 29 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

நாட்டில் ஏற்பட்ட கொடிய யுத்தமும் அதனால் ஏற்பட்ட இடம்பெயர்வுகளும், எமது சமூகத்தை மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளியுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் நடைபெற்ற பாடசாலைக்கான போட்டோ பிரதி இயங்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது இலங்கைத்தமிழர்கள் கடின உழைப்பாளிகள் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர்கள். தங்களின் தேவைகளை தாங்களே தேடிக்கொள்பவர்கள். எனினும், நாட்டில் ஏற்பட்ட தொடர்ச்சியான யுத்த சூழ்நிலை மக்களை அவர்களது சொந்த இடங்களிலிருந்து அடிக்கடி இடம்பெயர வைத்தது. இதனால், பொருள் சேதம், உயிர்சேதமென அனைத்தையும் இழந்து, உழைப்பை இழந்தவர்களாக மற்றவர்களிடம் தமது தேவைக்காக கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

எனினும் நாம், மனம்தளரக்கூடாது. சொத்தை இழக்கலாம், பொருட்களை இழக்கலாம். ஆனால் யாராலும் எம்மிடமிருந்து பிரிக்க முடியாதது கல்வியொன்றுதான். உங்கள் பெற்றோர்கள் பல இழப்புகளை சந்தித்தவர்கள்.

ஆனாலும், உங்களை சமூகத்தில் சிறந்த கல்விமான்களாக ஆக்குவதற்காக கனவுகளை சுமர்ந்தவர்களாக உங்களை பாடசாலைக்கு அனுப்புகிறார்கள். படிக்கும் காலத்தில் உங்கள் கடமைகளை சரிவரச்செய்யுங்கள், அப்போதுதான் உங்கள் பெற்றோர்களின் கனவுகளை நனவாக்கமுடியும் என்றார்.

பாடசாலை அதிபர் திருமதி கௌரிமனோகரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சரின் நிதியொதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட போட்டோ பிரதி இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியொர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .