2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வவுனியாவில் நேற்றும் துப்பாக்கிப் பாகங்கள் மீட்பு

George   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-க.அகரன், ரொமேஸ் மதுசங்க

வவுனியா, ஓமந்தை இறம்பைக்குளம் பகுதியில் எல்.எம்.ஜி துப்பாக்கிப் பாகங்கள் 38 மீட்கப்பட்டுள்ளதாக ஒமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்குமார, நேற்று திங்கட்கிழமை(29) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில், 'கடந்த வியாழக்கிழமை ஓமந்தை, இறம்பைக்குளம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றினை துப்புரவு செய்த போது, அதில் புதையுண்ட நிலையில் துப்பாக்கிகள் இருப்பதைக் கண்ட காணி உரிமையாளர், ஒமந்தைப் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

இதனையடுத்து, ஒமந்தை பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது, 30 எல்.எம்.ஜி துப்பாக்கிப் பாகங்கள் மீட்கப்பட்டன. இதனையடுத்து, அப்பகுதியில் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் எனக் கருதிய பொலிஸார், அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட வவுனியா நீதிமன்றின் அனுமதியைக் கோரியிருந்தனர்.

வவுனியா நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, வவுனியா நீதிமன்ற பதிவாளர் எம்.எஸ்.அமரட்ண முன்னிலையில் நேற்றுக் காலை, விசேட அதிரடிப்படையினரால் தோண்டும் பணிகள் மீண்டும் இடம்பெற்றன.

இதன்போது 8 எல்.எம்.ஜி துப்பாக்கிப் பாகங்கள் மீட்கப்பட்டதுடன் குறித்த பகுதியில் இருந்து மொத்தமாக 38 எல்.எம்.ஜி துப்பாக்கிப் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன' என அவர் மேலும் கூறினார்.

இப்பகுதியில் முன்னர், இராணுவ முன்னரங்க காவல் நிலைகள் இருந்ததுடன், வவுனியா, ஆசிகுளம், மயிலங்குளம் பகுதியில் இருந்து 3 கிலோகிராம் எடை கொண்ட கிளைமோர் ஒன்றும் இரு கைக்குண்டுகளும் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .