2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

'குடிநீர் உள்ளிட்ட தேவைகளை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுப்பேன்'

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 28 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன்ஆனந்தம், பதுர்தீன் சியானா

தற்போது நிலவுகின்ற வரட்சி காரணமாக மக்களுக்கான குடிநீர் உள்ளிட்ட தேவைகளைத் தீர்ப்பதற்கு உடனடியாகத் தான் நடவடிக்கை எடுப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

இப்பிரச்சினையை ஆராயும் வகையிலேயே தனது  விஜயம் அமைந்ததாகவும் அவர் கூறினார்.

திருகோணமலை மாவட்டத்துக்கு விஜயம் செய்த அமைச்சர், மாவட்டச் செயலகத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் தற்போதைய வரட்சி மற்றும் அனர்த்த நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் திருகோணமலை மாவட்டத்தில் வரட்சியின் பாதிப்பு சற்றுக்; குறைவாக இருந்தாலும், தற்போது நிலவுகின்ற காலநிலை காரணமாக இதன் தாக்கம் அதிகரிக்கக்கூடும். இதற்கான தேவைகளை எனக்கு மாவட்டச் செயலகம் ஊடாக தெரியப்படுத்த வேண்டும். இதற்காக முடிந்தளவு நிதியை நான் ஒதுக்கீடு செய்வேன்'; என்றார்.

'தற்போது நிலவுகின்ற வரட்சி காரணமான பாதிப்பு இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தாக்கம் இங்கு சற்றுக் குறைவாகக் காணப்பட்டாலும், அது மேலும் அதிகரிக்கலாம் என்பதே ஆய்வுகளின் மூலம் தெரிவிக்கப்படுகின்றது. எனவே அதற்கான தயார் நிலைக்குத் தேவையான நிதியை எமது அமைச்சு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும். அதன் விவரங்களை மாவட்டச் செயலகம் ஊடாகத் தெரியப்படுத்துங்கள்.

திருகோணமலை மாவட்டத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களின் பாதிப்பிலிருந்து  பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்வதற்கான நிலையான பல திட்டங்கள் பலராலும் இங்கு முன்வைக்கப்பட்டன.

வெள்ளம் மற்றும் சுனாமி பற்றிய அனர்த்தங்களால் எதிர்காலத்தில் வரக்கூடிய ஆபத்தைத் தடுக்க பல அதிகாரிகளும் பல விடயங்களை முன்வைத்தீர்கள். அவற்றை மாவட்ட அபிவிருத்திக் குழுவில் ஆராய்ந்து சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு அனுப்பி வையுங்கள். அவற்றைச் செயற்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடன் நானும் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பேன்.' எனவும் அவர் கூறினார்.  

இம்மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட  7 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 24 கிராமங்களில் மக்களுக்கு குடிநீர் வழங்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அமைச்சருக்கு இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கு 2 மில்லியன் ரூபாய் நிதி தேவை என்பதுடன்,  நீர் வழங்குவதற்கு 51 பவுசர்கள் பயன்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அனர்த்த அலாரன்கள் 5 பிரதேச செயலகங்களுக்கு அமைச்சர் இதன்போது கையளித்தார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .