2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'குற்றம் இளைத்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 22 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

'எங்களுக்கு இராணுவம் வேண்டாம்', 'சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் சிவில் பொலிஸ் எங்கள் நண்பர்கள்' என்று தற்போது சொல்லத் தொடங்கியிருக்கும் யாழ்ப்பாணத்து மக்களை, மீண்டும் பொலிஸ் மீது அவநம்பிக்கை கொள்ள வைக்கும் சம்பவங்கள் இவை. பொலிஸ் துறை தொடர்பில் புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்த, குற்றம் இளைத்தோர் மீது கடும் நடவடிக்கைகளை, சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு எடுக்க வேண்டும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.   

தனது அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பு கொட்டாஞ்சேனையில் இன்று சனிக்கிழமை (22) இடம்பெற்ற, 'அரசசேவை உங்களுக்காக' என்ற தொனிப்பொருளிலான நடமாடும் சேவையில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மரணம், 'படுகொலைகள்' எனக் கருத வேண்டிய சாட்சியங்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. பொலிஸ் காவலரணில் நிறுத்தாமல் செல்வோரைத் துரத்திப் பிடிக்கவே, பொலிஸாருக்கு அதி நவீன 1000சீசீ மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. காவலரணில் நிற்காமல் வேகமாக போனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துகொண்டு போனதாகத் தகவல் இல்லை. இந்நிலையில் ஏன் சுட வேண்டுமெனத் தெரியவில்லை.

ஆகவே, அவர்களைத் துரத்திச் சென்று வழிமறித்துப் பிடிக்க வேண்டும். அப்படியே சுட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் முதலில் ஆகாயத்தை நோக்கியும், பின்னர் முழந்தாளுக்குக் கீழேயும் சுட வேண்டும் என்ற விதிகள் சிறு மூன்றாம் வகுப்புக் குழந்தைக்கும் தெரியும். இவை பயிற்சி பெற்ற இந்தப் பொலிஸாருக்குத் தெரியவில்லை.

சில வாரங்களுக்கு முன் மலையகத்தில் புசல்லாவையில் ஒரு இளைஞர் பொலிஸ் காவலில் இருந்தபோது மரணமடைந்தார். இப்போது  யாழ்ப்பாணத்தில் இந்த இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. நேற்று முதல் நாள் வரை, இந்நாட்டில் விஜயம் செய்திருந்த ஐ.நா சபையின் சிறுபான்மை விவகார அறிக்கையாளர் ரீடா ஐஷக், இங்கே இருக்கும் போது, இந்தச் சம்பவம் நிகழ்ந்திருந்தால் இன்னமும் நிலைமை கேவலமாக இருந்திருக்கும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .