2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'மீள்குடியேற்றத்தைக் குழப்பும் வகையில் சில அரசியல் தலைமைகள் செயற்படுகின்றன'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 26 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மட்டக்களப்பு மாவட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கையை குழப்பும் வகையில் இம்மாவட்டத்தின் சில அரசியல் தலைமைகள் செயற்பட்டு வருவதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் செவ்வாய்க்கிழமை (25) மாலை விடுத்துள்ள அறிக்கையில், 'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை துரிதப்பட்டுள்ளது. அந்த வகையில், இடம்பெயர்ந்து இதுவரைகாலமும் மீள்குடியேற்றப்படாத மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தைக் குழப்பி இடையூறு விளைவித்து, இனங்களுக்கு இடையிலான முறுகல் நிலைமையை ஏற்படுத்துவதற்கு சில அரசியல் தலைமைகள் முயற்சிக்கின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல்; பிரதேச செயலாளர் மட்டத்தில் நடைபெறுவதுடன், மட்டக்களப்பு மாவட்டக் கலந்துரையாடல் எனது தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு, அம்மக்களைத் துரிதகதியில் மீள்குடியேற்றுவது தொடர்பில் அண்மையில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய காணி ஏலம் நடத்துவதற்கான ஆலோசனையை நான் முன்வைத்து, இதற்காக கடந்த மாதம் 17ஆம் திகதி காணிக்கச்சேரி நடத்தப்பட்டது. இதில் சட்டரீதியான ஆவணங்களைக் கையளிப்பவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் பிரதேச செயலகத்துக்கு பணித்திருந்தேன்.  
அத்துடன் எலவட்டமடு, மாங்கேணித் தெற்கு, மேவாண்டகுளம், பனிச்சங்கேணி, புதிய நகரம் ஆகிய பிரதேசங்களில் மக்களை உடனடியாக மீள்குடியேற்றுவதற்கு தேவையான நிதியும் மீள்குடியேற்ற அமைச்சால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

எனினும், இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் அரசியல்வாதி ஒருவர்  உண்மைக்குப் புறம்பான சில விடயங்களைத் தெரிவித்து வருகின்றார். இவ்வாறு அவர் கருத்துத் தெரிவித்துவருகின்றமை மீள்குடியேற்ற முயற்சிக்குத் தடையாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .