2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'நுண்கடனால் தமிழர்களின் வாழ்வு சீரழிகின்றது'

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

நுண்கடன் எனும் போர்வையில் செயற்படும் நிதி நிறுவனங்களானது தமிழர் பிரதேசங்களில் கொள்ளை நோய் போல் பரவி, அவர்களின் வாழ்வைச் சீரழித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

சுயதொழில் மற்றும்; விவசாயக்கடன் உதவியாக 280 பேருக்கு 2 கோடி 80 இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கும் நடவடிக்கை, மகா சக்தி அமைப்பின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்புப் பிரதேசத்தில்; புதன்கிழமை (26) நடைபெற்றது.

இங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'நுண்கடன் எனும் போர்வையில் நிதி நிறுவனங்களைத் தமிழர் பிரதேசங்களில் சிலர் திட்டமிட்டுச் செயற்படுத்துகின்றனர். இதன் மூலம் தமிழர்களை நலிவடையச் செய்யலாம் என்பதே அந்நிதி நிறுவனங்களின் நோக்கம் என்பதையும் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்' என்றார்.

'அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துவரும் தற்கொலைகளுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், பிரதான காரணமாக அமைவது இவ்வாறான நிதி நிறுவனங்களின் செயற்பாடுகளே. இங்கு வாழும் அநேகமான மக்கள் சமகாலத்தில் பல்வேறு நிதி நிறுவனங்களிலும் கடனைப் பெறுகின்றனர். பெறுகின்றவர்களும் எதற்காக கடனைப் பெறுகின்றோம் எந்த வட்டி வீதத்தில் பெறுகின்றோம் என்பது பற்றி எண்ணுவதில்லை.

கடன் வழங்குகின்ற நிதி நிறுவனங்களும் எவ்வாறாயினும் கடன் வழங்கினால் போதும் என்ற நிலையில் வழங்கிவிட்டு, பின்னர் அக்கடனை அறவீடு செய்யும் வேளையில் மக்களைப் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்க வைக்கின்றன.
இதனால் கடனாளியாக மாறும் குடும்பங்களுக்கு இடையில் பிணக்கு உருவாகின்றது. இவ்வாறு ஆரம்பிக்கும் பிணக்கு நாளடைவில் வலுப்பெற்று தற்கொலைகளில் முடிவுறுகின்றது. ஆகவே, இவ்வாறான நிதி நிறுவனங்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்பதுடன், மக்களையும் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன்' எனவும் அவர் கூறினார்.  

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .