2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முக்கொலை விவகாரம்: நிர்வாணமாக நின்றார் கணவன்: சோபை இழந்தது கிளிக்குஞ்சு

Kanagaraj   / 2016 நவம்பர் 13 , பி.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

குடும்பத்தலைவன் ஒருவன், வாளொன்றினால் தனது மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும், வெட்டிச் சரித்த சம்பவத்தினால், கிளிக்குஞ்சுமலைக் கிராமமே சோபை இழந்து சோகத்தில் மூழ்கியுள்ளது.

திருகோணமலை, கன்னியா உப்புவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நான்காவது ஒழுங்ககையில் உள்ள வீடொன்றிலேயே இந்தக் கோரச் சம்பவம், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தையடுத்து, அக்கிராமத்தைச் சேர்ந்தவர்களின் உதவியுடன், சந்தேகநபரான அக்குடும்பத்தின் தலைவனான ராஜலக்‌ஷ்மனன் (வயது 35) என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அந்தச் சந்தேகநபருக்கு எவ்விதமான காயங்களும் ஏற்பட்டிருக்கவில்லை என்று அறியமுடிகின்றது. 

இந்தச் சம்பவத்தில், தனது மனைவியான ராஜலக்‌ஷ்மனன் நித்தியா (வயது 32), இவரது மகள்களான காயத்திரி (வயது 10), சந்தியா (வயது 08) ஆகியோரே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர்.

வீட்டுக்குள் வைத்து மூவரையும் வெட்டிச் சாய்த்தமையால், அந்த வீடே இரத்தவெள்ளக் காடாக காட்சியளித்தது, தரைகள் இரத்தத்தினால் தோய்ந்திருந்த நிலையில், சுவர்களில் இரத்தக் கறைகள் படிந்திருந்தன. அவ்வீட்டின் ஒரே அறையிலேயே அந்த மூவரும் கிடந்தனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து அந்த வீட்டை, குற்றப்பிரதேசமாக அடையாளப்படுத்திய பொலிஸார், அவ்வீட்டுக்குள் யாரும் நுழைவதற்கு இடமளிக்கவில்லை. எனினும், வீட்டு யன்னல்கள் மற்றும் கதவிகளின் ஊடாகப் பார்க்கும் போது, அங்கு பெரும் கோரச் சம்பமொன்று இடம்பெற்றுள்ளமையை காணக்கூடியதாக உள்ளது.

வழமையாகவே கலகலப்பாக இருக்கின்ற அந்தக் கிராமம், இந்தச் சம்பவத்தினால் சோபையிழந்து சோகமயமாகக் காட்சியளிக்கின்றது.

சம்பவ தினமான நேற்றுக் காலையில், மனைவியையும் தன்னுடைய பிள்ளைகளையும், மனைவியின் அக்காவின் வீட்டுக்கு, வழமையாகவே அழைத்துச் செல்லும் சந்தேக நபர், அவ்வாறே அழைத்துச் சென்றுள்ளார்.

அவர்கள் வந்ததும்,  மனைவியின் அக்கா, கின்னியாவுக்குக்  கடைக்குச் சென்றுள்ளார். அவ்வீட்டிலிருந்த அம்மம்மா உறவு முறையான வயோதிபப் பெண்ணும், ஆடு மேய்ப்பதற்காகச் சென்றுள்ளார்.

இந்நிலையிலேயே, காலை 11 மணியளவில், அவ்வீட்டிலிருந்து அபயக் குரல் கேட்டுள்ளது. இரண்டு, மூன்று நிமிடங்களுக்கு, அக்குரல் அமையடைந்தது. சத்தம் வந்த திசையில் உள்ள வீட்டில் ஏதாவது விபரீதம் இடம்பெற்றிருக்கலாம் என்று, அக்கம் பக்கத்தினர் அவ்வீட்டை நோக்கி படையெடுத்தனர்.

அபயக்குரல், காற்றோடு காற்றாக கலக்க, அக்கிராமத்தைச் சேர்ந்தவர்களே  அவ்வீட்டைநோக்கி விரைந்துவிட்டனர். எனினும், வீட்டுக்குள் யாரும் போகவில்லை.  வீட்டிலிருந்த கதவுகள் மற்றும் யன்னல்கள் யாவும் மூடியிருந்தமையால், அயலவர்களின் உதவியுடன், அக்காவுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்துக்கும் அறிவிக்கப்பட்டது. உப்புவெளிப் பொலிஸார், ஸ்தலத்துக்கு உடனடியாக விரைந்துவந்தனர். அவ்வீட்டில் ஏதோவொரு விபரீதம் இடம்பெற்றுள்ளதை உணர்ந்துகொண்ட பொலிஸார், தங்களுடன் இரண்டொருவரை கூரையின் மீதேற்றி, கூரைத்தகட்டைக் கழற்றிப் பார்த்துள்ளனர்.

அதுவரையிலும், சந்தேகநபரான ராஜலஷ்மனன் வாளை ஏந்தியவாறு, நிர்வாணக்கோலத்தில் நின்றுகொண்டிருந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்னும் சில கூரைத்தகடுகளைக் கழற்ற முற்படுகையில், அவற்றிலிருந்த சிறிய துண்டொன்று, சந்தேகநபரின் உடலில் விழுந்துவிடவே, சந்தேகநபர் வாளுடன் சரிந்துவிட்டதாகவும் அதன்பின்னரே, கதவுகளை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்து, சந்தேகநபரைக் கைதுசெய்ததுடன், வெட்டுக்காயங்களுக்கு இலக்காகியிருந்தவர்களை வைத்தியசாலைக்கு அனுமதிக்க எடுத்துச்சென்றுள்ளனர். எனினும், அந்த மூவரும் மரணமடைந்துவிட்டனர்.

மயக்கமடைந்த நிலையில் இருந்த சந்தேகநபர், திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

குறித்த சந்தேகநபர், பயபக்தி உடையவர் என்றும் தன்னுடைய வீட்டுக்கு அருகில் உள்ள கோயிலில் அவ்வப்போது பூஜைவழிபாடுகளில் ஈடுபடுபவர் என்றும் தெரிவிக்கும் அயலவர்கள், கணவனும்-மனைவியும் புரிந்துணர்வுடன் வாழ்பவர்கள் என்றும், தங்களுடைய பிள்ளைகள் இருவரையும் அன்பாகவும் பாசத்துடன் கவனிப்பவர்கள் என்றும் அறியமுடிகின்றது.

சம்பவ தினமான நேற்று, தனது இரு பிள்ளைகளையும், தனது வீட்டில் வைத்து, மஞ்சள் நீரினால் நீராடச் செய்த பின்னரே, தனது மனைவியின் அக்கா வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவற்றை உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உப்புவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னியா பிரதேசத்தில், இன்று (நேற்று) காலை 11 மணியளவில், தாயும் அவருடைய பெண் பிள்ளைகள் இருவரும் கூரிய ஆயுதத்தினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்தது.

இரத்தத்தினால் தோய்ந்திருந்த நிலையில், அந்த வீட்டுக்குள்ளிருந்த மூவரும், கிராமவாசிகளின் உதவியுடன் மீட்கப்பட்டனர். எனினும், அந்த மூவரும் மரணமடைந்திருந்தனர்.

இந்நிலையில், இந்த முக்கொலையின் சூத்திரதாரி, சம்பவத்தில் மரணமடைந்துள்ள அந்த இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையெனக் கூறப்பட்டது. இதனையடுத்து  கன்னியா, கிளிக்குஞ்சுமலையைச் சேர்ந்த 34 வயதான ராஜலஷ்மனன் என்பவர், உப்புவெளிப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார். 

இந்தச் சம்பவம் எதற்காக இடம்பெற்றது என்பது தொடர்பில், சந்தேகநபரின் மயக்கம் தெளிந்ததன் பின்னரே அறியமுடியும் என்று தெரிவித்த உப்புவெளிப் பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளையும் மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X