2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'அரசியல்வாதிகளின் பெயர்களை வெளிப்படுத்த மாட்டேன்'

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 07 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ப. பிறின்சியா டிக்சி

'நிதி மோசடி தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் பெயர்களை நான் வெளிப்படுத்த மாட்டேன். ஆனால், விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை எடுத்தல் தொடர்பில் தாமதம் இருக்காது. சட்டம் தனது கடமையைச் செய்யும்' என, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமன்ன, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (07) தெரிவித்தார்.

குறித்த ஆணைக்குழுவின் அனுசரணையுடன், 'தூய ஆட்சி' எனும் கருப்பொருளில் எதிர்வரும் 09ஆம் திகதி, தாஜ் சமுத்திரா ஹோட்டலில் மாநாடொன்று நடைபெறவுள்ளது.

இம் மாநாடு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பொன்று, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'எவர்மீதும் எந்தவித அரசியல்சார்பும் இன்றி விசாரணைகளை விரைவுபடுத்தவும் வழக்குகளைத் துரிதப்படுத்தவும் பல புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊழலுக்கு எதிரான சகல நடவடிக்கைகளும் நாட்டின் சட்டத்துக்கு அமைய இருக்கும். ஊழலுக்கு எதிராக ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி இதற்கு மேல் என்னால் எதுவும் கூற முடியாது' என அவர் தெரிவித்தார்.

மாநாடு தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

இந்த மாநாட்டில், 'தனியார் துறையின் பார்வையில் அரசாங்கத்துறையில் காணப்படும் ஊழல் மீதான பார்வை', 'அரசாங்க ஊழியர்களை ஊழல் செய்யத் தூண்டுபவர்கள் யார்?', 'உத்தியோகபூர்வ கடமையில் - வெளிப்படைத் தன்மை, பொறுப்புக் கூறலுக்கும் இடையிலான முரண்பாடு' எனும் தலைப்புகளில் நடைபெறவுள்ள மூன்று அமர்வுகளில் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன கலந்துகொள்வார். இறுதி அமர்வுக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்குவார்.

இந்த மாநாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர் மற்றும் உயர் அதிகாரிகள் என, 700 பேர் வரைப் பங்குகொள்ளவுள்ளனர். அத்துடன், பல்வேறு துறைகளிலிருந்தும் 20 வளவாளர்கள் கலந்துகொள்வர்.

கடந்த மே மாதம் 12ஆம் திகதி, லண்டனில் நடைபெற்ற ஊழலுக்கு எதிராகப் பூகோள உச்சி மாநாட்டில் பங்குபற்றிய ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் எண்ணக்கருவில் குறித்த மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 'ஊழல் நடக்கும் நாடு முன்னேற முடியாது. ஊழலை ஒழிப்பது அபிவிருத்திக்கான அடிப்படை விடயமாகும். ஆகவே, இம்மாநாட்டுக்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. அபயகோன் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .