2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

த்ரிஷா சல்லிக்கட்டை ஆதரிப்பது முரணானது: பீட்டா

George   / 2017 ஜனவரி 21 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாய்களுக்கு ஏற்படும் கொடுமைகள் குறித்து பிரசாரம் மேற்கொள்கிற நடிகை த்ரிஷா, சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்பது முரண்பாடாக உள்ளது என்று பீட்டா அமைப்பின் இயக்குநர் வி. மணிலால், த்ரிஷாவைச் சாடியுள்ளார்.

தமிழகத்தின் கலாசாரப் பாரம்பரியத்துடன் இணைந்த விளையாட்டாக விளங்கும் சல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படுகிறது. 2 ஆயிரம் ஆண்டுகள் மிகப் பழமையானது இந்த விளையாட்டுப் போட்டி. ஆனால், தமிழகத்தில் சல்லிக்கட்டுப் போட்டி நடத்த தடை விதித்து கடந்த 2014ஆம் ஆண்டு மே 7ஆம் திகதி உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

தமிழகத்திலும், மகாராஷ்டிரத்திலும் சல்லிக்கட்டு, எருதுப் போட்டிகள் மூலமாக விலங்குகளை காட்சிப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து சல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுக்க தீவிரமான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த நடிகை த்ரிஷா பற்றி பீட்டா அமைப்பின் இயக்குநர் வி. மணிலால் ஒரு பேட்டியில் கூறியதாவது, “த்ரிஷா எங்களுடைய விளம்பரத் தூதர் கிடையாது. நாய்களுக்கு ஏற்படும் கொடுமைகளை எதிர்த்துப் பேசவும் நாய்கள் குறித்த விழிப்புணர்வுக்காகவும் எங்களுடன் இணைந்து போராடினார்.

ஆனால், தற்போது த்ரிஷா மேற்கொண்டு வரும் விமரிசங்களுக்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். விலங்குகளுக்கு நல்லது செய்ய நாங்கள் எண்ணினோம். அது அவரைச் சிரமமான சூழலுக்குக் கொண்டு சென்றுவிட்டது.

இப்போது, தான் சல்லிக்கட்டை ஆதரிப்பதாக த்ரிஷா கூறுகிறார். இதில் உள்ள முரண்டுபாடுகளைக் கவனியுங்கள். ஒருபக்கம், நாய்களுக்கு ஏற்படும் கொடுமைகள் குறித்து பிரசாரம் மேற்கொள்கிறார். அதேசமயம் காளைகள் துன்புறுத்தப்படுவதாக உச்ச நீதிமன்றம் தடை செய்த சல்லிக்கட்டு அவருக்குச் சரி என்று படுகிறது.

இது அவர் சொந்தக் கருத்து. நாங்கள் அவரைப் போன்ற பிரபலங்களுக்கு சல்லிக்கட்டு குறித்த தகவல்களை வழங்குகிறோம். இறுதியில் எதை ஆதரிப்பது என்பது அவர்களுடைய முடிவு.

ஏ.ஆர்.ரஹ்மானும் விஸ்வநாதன் ஆனந்தும் சல்லிக்கட்டை ஆதரிப்பது அவர்களுடைய விருப்பம். இவ்விருவரிடமும் சல்லிக்கட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்று, அவர்கள் கருத்தை மாற்ற முயற்சி செய்வோம்” என்று அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .