2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'மந்தபோஷணத்தில் நுவரெலியா மாவட்டம் முதலிடம்'

Princiya Dixci   / 2017 ஜனவரி 21 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்

நாட்டில் மந்தபோஷணத்தில் நுவரெலியா மாவட்டம் முதலிடத்தில் இருப்பதாகவும் இதனையடுத்து மொனராகலை மாவட்டம் இருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தலவாக்கலை, சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் 25 வருடகால ஆய்வுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக தேயிலை அறிமுகமும் குறுந்தகவல் மற்றும் தகவல் அறியும் நிலையமும், ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால், இன்று (21) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதன்போது கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'இலங்கையில் தேயிலை, மரக்கறி, பழவகைகள் ஆகிய உற்பத்திகளினால் தேசிய ஆதாயத்தில் வருமானம் கிடைக்கின்றது. அதில் தேயிலை முதலிடம் பெற்றுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் மந்தபோஷணத்தினால் இங்குள்ள மக்கள் பாரிய பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து வருவதாக அறிவிக்கப்படுகின்ற நிலையில,  இந்த மாவட்டத்தில் மந்தபோஷணத்திலிருந்து மக்களைக் காப்பாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

அதேவேளையில் நுவரெலியா மாவட்டத்தில் கல்வி, சுகாதாரம், அபிவிருத்தி போன்ற நடவடிக்கைகளிலும் விசேட கவனம் செலுத்தப்படும். இன்று தலவாக்கலைக்கு ஹெலிகொப்டரில் பயணித்த நான் காலநிலை சீர்கேட்டினால் கொட்டகலை பிரதேசத்தில் இறங்க நேரிட்டது.

இதன்மூலம் அப்பகுதியில் உள்ள சிறார்கள், பொது மக்கள் போன்றோர்களைச் சந்திக்கவும் நேரிட்டது. இதன்போது அவர்களிடம் அவர்களின் குறைபாடுகள், எதிர்பார்ப்புகள் என்னவென்பதை அறிந்துக்கொள்ளவும் சந்தர்ப்பம் கிடைத்தது.

இந்நிலையில், கொட்டகலை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு மலசலகூட வசதிகள் உள்ளிட்ட குடிதண்ணிர் பிரச்சினைகள் வைத்தியசாலைக்கு போக்குவரத்துக்கென அம்புலன்ஸ் வண்டி பிரச்சினைகள் எனப் பல குறைபாடுகளை இம்மக்கள் அனுபவிப்பது தொடர்பில் என்னிடம் குறைபாடுகளை தெரிவித்தனர்.

இதனடிப்படையில் கொட்டகலை பிரதேச பாடசாலை ஒன்றில் மலசலகூடங்களை திருத்தம் செய்து தருவதற்கு எதிர்வரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதேபோல் அம்புலன்ஸ் வண்டி சேவையை துரிதப்படுத்துவதற்காகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தேன்.
 
தேயிலை ஆராய்ச்சி நிலையம் அதிக சக்தி உடன் அதன் சேவைகளை முன்னெடுத்து வருகின்றது. இங்கு பல ஊழியர்கள் நிரந்தர ஊழியர்கள் அற்ற ரீதியில் இருப்பதாக என்னிடம் முறைபாடுகள் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் இதற்குப் பொறுப்பான அமைச்சராகிய நவீன் திஸாநாயக்கவுடன் கலந்துரையாடியுள்ளேன். வெகுவிரைவில் இங்குள்ள ஊழியர்கள் பலர், நிரந்தர ஊழியர்களாக்கப்படுவர்.

நுவரெலியா, பதுளை, மாத்தளை, கண்டி ஆகிய மாவட்டங்களில் இயற்கை வளங்கள் நாசமாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நமது நாட்டிற்கு வளங்களை தரக்கூடிய வனவளங்களை பாதுகாக்க கூடியவாறு ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.

இதற்கென வனவளங்களைப் பாதுகாப்பது தொடர்பில் வெகுவிரைவில் அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இன்னும் பல வகைகளில் முற்றாகப் பாதிக்கப்பட்டு வருகின்ற இந்த மாவட்டத்தின் தோட்ட தொழிலாளர்கள் தொடர்பில் அவதானங்கள் செலுத்தப்பட்டு அவர்களின் வாழ்க்கையில் சுபீட்சம் ஏற்படும் அளவிற்கு அபிவிருத்தி பணிகளை செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்றார்.

தேசிய வருமானத்தை ஈட்டித் தரும் தேயிலை, இறப்பர் போன்ற பயிர்களுக்கு சக்தி அளிக்கப்படும் எனவும், எதிர்காலத்தில் இவைகள் சிறந்த முறையில் அபிவிருத்திகள் செய்யப்படும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி, தேயிலை ஆராயச்சி நிலையத்தின் சேவைகள் மென்மேலும் உயர சேவையாளர்களையும் அதிகாரிகளையும் ஊக்குவிப்பதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .