2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அவன்ட் காட் வழக்கு: மார்ச் 15 விசாரணை

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அவன்ட் காட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் உட்பட எழுவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குத் தொடர்பான விசாரணைக்கு மார்ச் 15ஆம் திகதியை நிர்ணயித்த

கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார, எழுத்து மூலமான அடிப்படை எதிர்ப்பைச் சமர்பிக்குமாறு இரு தரப்பினருக்கும் உத்தரவிட்டார். 

அவன்ட் காட் மெரிடைம்ஸ் நிறுவனத்தினூடாக மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை அமைத்து, அரசாங்கத்துக்கு 11.4 பில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டு தொடர்பில், இலஞ்ச, ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நேற்று (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

வழக்கு விசாரணையின் போது, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.  

குற்றச்சாட்டை முன்வைக்கும் அந்த ஆணைக்குழு சான்றுப்படுத்துவது அவசியம் என, சந்தேதகநபர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ரொமேஷ் டி சில்வா நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். 

ஆணையாளரால் சான்றுப்படுத்தப்பட்டு அனுமதி கிடைக்கப் பெறாததன் காரணமாக, சந்தேகநபர்களை விடுவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

அவ்வாணைக்குழுவின் ஆணையாளரின் பணிப்புரைக்கு அமைய, ஆணையாளரின் அனுமதியுடன் தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என, முறைப்பாட்டாளர் தரப்பில் ஆஜரான அரச சட்டத்தரணி ஜனக பண்டார கூறினார். 

வழக்கு ஆரம்பித்த போது, 2 ஆவது சந்கேநபர் நாட்டில் இல்லாததால், அவர் இல்லாமலேயே வழக்கு விசாரணையை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்பட்டது. 

அவரை மன்றில் ஆஜராகுமாறு பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணையைக் கொண்டு சென்ற போது அவர் வீட்டில் இருக்கவில்லை எனவும் கிராம சேவையாளரூடாக அவர் நாட்டில் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டதாக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் உப-பொலிஸ் பரிசோதகர் தோரவகே பிறேமசிறி தெரிவித்தார். 

இவ்விடயத்தை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தினூடாக உறுதிப்படுத்தியதாகவும் திஸநாயக்க முதியன்சலாகே தமயந்தி ஜயரத்ன என்ற அந்த சந்தேகநபர், 2015.12.11அன்று நாட்டை விட்டு வெளியேறியதாகவும் அறிவித்தார். 

2ஆவது சந்தேகநபர் இல்லாவிடினும் வழக்கு விசாரணையை நடத்தமுடியும் என நீதவான் அறிவித்ததையடுத்து, வழக்குரைஞர் ரொமேஷ் டி சில்வாவினால் அடிப்படை எதிர்ப்பு ஆற்றுப்படுத்தப்பட்டது. 

எதிராளி மற்றும் முறைப்பாட்டாளர் சார்பிலான அடிப்படை எதிர்ப்பை எழுத்துமூலம் மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான் வழக்கு விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .