2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மரத்திலிருந்து பிரிந்தோர் கைகோர்க்க முஸ்தீபு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ப. பிறின்சியா டிக்சி

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து தனிக் கட்சிகளை உருவாக்கியவர்களையெல்லாம் ஒன்று சேர்த்து, கூட்டமைப்பை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக மு.காவின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவுத் தெரிவித்தார்.

மு.காவின் தவிசாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

சகலரும் இணைந்து ‘முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பு’ என்ற பெயரில் கூட்டமைப்பை உருவாக்கி, அதனூடாக அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

 “ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆரம்பத்தில் கொள்கை, கோட்பாடு, இலட்சியம் மற்றும் இலக்கு இருந்தது. அவற்றில் பிரதானமானது, முஸ்லிம்களுடைய அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான கருவியாகச் செயற்படுவதாகும். 

மு.காவின் 2015ஆம் ஆண்டினுடைய யாப்புத் திருத்தத்துடன், கிழக்கு மாகாணத்துக்கென்று இருந்த உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டன. இது வெறுமனே வெற்று அரசியல் நடத்தும் ஒரு அமைப்பாக மாறியிருக்கின்றது என்றும் அவர் கூறினார்.  

ரவூப் ஹக்கீம்’ என்ற இன்றைய தலைமையில் இருக்கின்ற இந்தக் கட்சியென்பது, ‘முஸ்லிம் காங்கிரஸ்’ என்றதொரு பெயர் பலகையை மாத்திரம் சுமந்ததொரு கட்சியாகும். அதன் கொள்ளைகள் இலட்சியங்கள் இல்லாதொழிக்கப்பட்டுவிட்டன.  

 ரவூப் ஹக்கிமீனுடைய அரசியல் நிலைப்பாடு, ‘கிழக்குக்கு உதவாது’ என்ற நிலைப்பாட்டில்தான் முஸ்லிம்கள் இருக்கிறனர் என்பது அண்மைக்காலத்தில் புரியத்தொடங்கி விட்டது.  ஆகவே, எல்லோரையும் இணைத்துப் பொதுவானதொரு அணிக்குக் கொண்டுவருவதாற்கான முயற்சியில் இருக்கின்றேன். அந்த முயற்சி, கோட்பாட்டு ரீதியாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. இப்படியொரு வேலைத்திட்டம் அவசியம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.  

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட இரு பிரதான கட்சிகளும் சில தேசியக் கட்சிகளும் கோட்பாட்டளவில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதுதொடர்பான விரிவான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்துவரும் காலப்பகுதியில் இடம்பெறும்.  

எல்லோரும் மு.காவில் இருந்தவர்கள் என்பதனால் ‘முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பு’ என்ற பெயரில்தான் இதை ஆரம்பிக்க வேண்டுமென்பது எனது கருத்து. எனினும், எல்லாக் கட்சிகளுடனும் உடன்பாட்டுக்கு வந்த பின்னர் பெயர் சம்பந்தமாகப் பின்னர் பேசி முடிவெடுக்கப்படும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .