2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தாய்மொழி தவறோம்

Administrator   / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 - த. மனோகரன்   
உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் பல்வேறு விடயங்களை நினைவு கூருமுகமாக, குறிப்பிட்ட சில தினங்கள் பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளன. அவை தொடர்பில், விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு, அந்தத் தினத்தைக் கொண்டாடுவதன் நோக்கத்தின் மேன்மை வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.   

அந்த வகையில், ஆண்டுதோறும் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதியன்று, சர்வதேச தாய் மொழி தினம் நினைவு கூரப்படுகிறது.   
மனித குலத்தின் உயிர் மூச்சாக விளங்குவது, மொழியாகும். மொழியின்றேல் ஏனைய உயிரினங்களுக்கும் மனித குலத்துக்கும் வேறுபாடு காண முடியாது. அதனால் தான், மொழி இன்றேல் மூச்சில்லை பேச்சில்லை என்று கூறப்படுகின்றது.   

மனிதனின் சிந்தனைக்கு மொழி அவசியம். சிந்திக்கும் ஆற்றலுக்கு மொழி எவ்வளவு அவசியமோ அதேபோல், சிந்தித்துத் தன் கருத்தை மற்றையோருக்கு வெளிப்படுத்தவும் மொழியே வழி சமைக்கிறது.   

மதங்களின் தத்துவங்களைப் புரிந்துகொள்வதற்கும் அறிவியல்சார் அனைத்தையும் அறிந்து கொள்வதற்கும் மொழியே துணைநிற்கிறது. எனவே, மனித குலத்தின் நாகரிக வளர்ச்சிக்கு, மொழியே அடிப்படையாக உள்ளது.  

எனவே, மொழியின்றேல் சிந்தனையுமில்லை, சமூகத் தொடர்புகளுமில்லை. விலங்குகளை ஒத்த நிலையிலேயே வாழவேண்டி ஏற்படும். விலங்குகளைப் போன்று உண்டு, உறங்கி, இனப்பெருக்கம் செய்யும் வாழ்க்கை மட்டுமே, மனிதனுக்கும் மிஞ்சும்.   

உலகளாவிய ரீதியில், மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதைப் பேண வேண்டிய கடப்பாட்டை வலியுறுத்தி உணர்த்தும் சிறப்புமிகு தினமாக, இந்தத் தினத்தை நோக்க வேண்டும். நாகரிகமடைந்த சமூகத்தை அளவிடும் அளவுகோலாக, அச்சமூகத்தின் சிந்தனையை வளம்படுத்திய, வளம்படுத்தி வரும் முக்கிய அம்சமாக, தாய்மொழி விளங்குகின்றது; பெருமையும் சேர்க்கின்றது. இந்நிலையிலேயே நாம் யார்,? நமது சிறப்பு என்ன? என்பவற்றை எடைபோட, நமது தாய்மொழியான தமிழ்மொழி வழிவகுத்துள்ளது. நமது இனத்தின் பெருமைக்கு சான்று பகர்கின்றது.   

உலக மொழிகளிலும் இன்று வழக்கிலுள்ள மொழிகளிலும், மூத்த மொழியான தமிழ் மொழி, நமது தாய் மொழி என்பதில் நமக்கு பெருமை உண்டு. ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடி’ என்று, வெறும் பெருமை பேசி, பெருமையடைவதை விடுத்து, யதார்த்த ரீதியில் நமது மொழியின் பெருமை என்ன? இருப்பென்ன? வளமென்ன? சிறப்பென்ன? என்பதைத் தெளிவாகக் கண்டறிந்து, உணர்ந்து வெளிப்படுத்த வேண்டும். அதுவே நமது இனத்துக்கு, நமது தாய் மொழிக்குப் பெருமை தரும்.   

‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம்’ என்று பாரதியார் பாடினார் என்று கூறிக்கொண்டிருப்பதில் பயனில்லை. அந்த இனிமை மற்றும் பெருமையை, பாரறியத் திறந்து விடவேண்டும்.

உலகத்தோர் உணர வழிவகை செய்யப்பட வேண்டும். நமது தாய் மொழியைப் பற்றி, நாம் தெளிவாக உணர்ந்து புரிந்து கொண்டால், ‘தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற கூற்றை மெய்ப்பித்த பேற்றின் உரித்தாளிகளாவோம்.   

திராவிட மொழிக் குடும்பத்தின் தாய்மொழி தமிழ் என்று, தனது ஆய்வின் மூலம் வெளிப்படுத்தியவர் மேலைத்தேசத்தைச் சேர்ந்த மொழி ஆய்வாளர் காட்வெல் பாதிரியார் ஆவார்.

அவரின் ஆய்வுப்படி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு மொழிகள் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவை என்று வெளிப்படுத்தினார். இந்திய நாட்டிலிருந்த மொழிகளை ஆய்வு செய்த அந்த அறிஞர் பெருமகன், இலங்கைத் தீவிலுள்ள மொழிகளைப் பற்றி ஆய்வு செய்யாமல் விட்டது துரதிர்ஷ்டமே!   

சிங்கள மொழி உள்வாங்கியுள்ள தமிழ் சொற்கள் ஏராளம். அவற்றை முறைப்படி ஆய்வு செய்தால், சிங்கள மொழியின் மூல மொழி எது என்பதை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர, பல ஆதாரங்கள் உள்ளன. ஆய்வு செய்யத்தான் எவரும் இல்லை; அரசும் செய்யாது. அறிஞரும் செய்யார்.   

எது எவ்வாறாயிருப்பினும், நமது தாய் மொழி தமிழ் என்று பெருமைப்பட, பல்வேறு ஆதாரங்கள் நமக்குண்டு. உலகின் பழம்பெரும் மூத்த மொழிகள் ஆறில், தமிழ் மொழியும் ஒன்று. அவற்றில் சமஸ்கிருதம், இலத்தீன் என்பன வழக்கிழந்த நிலையில், தளர்வின்றி தலைநிமிர்ந்து நிற்கும் மொழியாகத் தமிழ் மொழி விளங்குகின்றது.   

மொழியியல் ஆய்வாளரும் பேராசிரியருமான அலெக்ஸ் கொலியர், உலகின் மூத்த மொழி தமிழ் என்பதைத் தனது ஆய்வில் கண்டறிந்து நிரூபித்துள்ளார். 1995ஆம் ஆண்டில், அமெரிக்கப் பல்கலைக்கழக மொழியியல் பற்றிய ஆய்வின்போது, தனது இந்த ஆய்வின் முடிவைப் பகிரங்கப்படுத்தியுள்ளார்.   

 இந்த ஆய்வின்படி, வழக்கிலுள்ள மொழிகளில் அதிக சொற்களைக் கொண்ட மொழியாக முதலிடம் வகிப்பது தமிழ் மொழியாகும். நம் தமிழ் மொழி, சர்வதேச மொழி எனப்படும் ஆங்கிலத்தை, இரண்டாமிடத்தில் நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.   

தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், இன்று உலகில் ஐந்து கண்டங்களைச் சேர்ந்த 64 நாடுகளில் வாழ்கின்றார்கள். தெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில், மூன்றுக்கு மேற்பட்ட நாடுகளின் பயன்பாட்டிலுள்ள மொழி என்ற பெருமை, தமிழ் மொழிக்குண்டு. 

இலங்கை, இந்தியா, மியன்மார், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், ஹொங்கொங், கம்போடியா, இந்தோனேசியா என்று நாடுகள் விரிவடைகின்றன. அதற்கப்பால் பிஜி, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா என்று கிழக்குப் பக்கமாக நீளும் அதேவேளை, மேற்கே மொறிசியஸ், தென்னாபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜேர்மனி, டென்மார்க், சுவீடன், நோர்வே, சுவிட்சர்லாந்து, ஒல்லாந்து, இத்தாலி, கனடா, ஐக்கிய அ​மெரிக்கா, பிரிட்டிஷ், கயானா என்ற பட்டியல், உலகளாவிய ரீதியில் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் பரந்து விரிந்து செல்கின்றது.   

பிரித்தானியரின் ஆட்சிக்குப் பின்பே, இலங்கையின் வெளிநாட்டுத் தொடர்பு மொழியாக, ஆங்கிலம் வழக்கத்தில் வந்தது. அதற்கு முற்பட்ட காலத்தில் இலங்கையின் வெளிநாட்டுத் தொடர்பு மொழியாகத் தமிழ் மொழியே இருந்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் உள்ளன.

சிங்கள மொழி கருக்கட்டாத காலத்திலேயே, அதாவது 2,500 ஆண்டுகளுக்கு முன்னர், தமிழ் வழக்கில் இருந்த பாண்டிய நாட்டிலிருந்து, தமிழ்ப் பெண்களை வரவழைத்து, விஜயனும் அவனுடைய தோழர்களும் திருமணம் செய்து கொண்டார்கள் என, வரலாறு கூறுகின்றது.   

தமிழ் மொழிக்குரிய மற்றொரு பெருமை, உலகிலேயே மதச்சார்பற்ற மொழியாக தமிழ் மொழியே திகழ்கின்றது. உலகிலுள்ள முக்கிய சகல சமயங்களின் தத்துவங்களையும் உள்வாங்கி, இலக்கியமாக வெளிப்படுத்தியுள்ள ஒரே மொழி, தமிழ் மொழியாகும். இந்து, பௌத்தம், சமணம், இஸ்லாம், கிறிஸ்தவம் என்று சகல தத்துவங்களையும் தமிழ் மொழி உள்வாங்கியுள்ளது. இந்தச் சிறப்பு, உலகிலுள்ள வேறெந்த மொழிகளுக்கும் கிடையாது.   

சமயம் சாராத அறக்கருத்துகள் நிறைந்த பெட்டகமாகவும் தமிழ் மொழி திகழ்கின்றது. திருக்குறள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நன்னெறி என்று பட்டியல் நீளுகின்றது. 

அறமொழி, அறிவியல் மொழி, பக்தி மொழி, செம்மொழி, செந்தமிழ் மொழி, முத்தமிழ் மொழி என்று, எத்தனையோ அடைமொழிகளால் அழைக்கப்படும். நமது தாய்மொழியை அதன் பண்டைய இருப்பை, வரலாற்றை, பெருமையை, வளத்தை, சிறப்பை, உலகளாவிய ரீதியில் நினைவில் கொள்ளப்படும் தாய்மொழி தினத்திலே, நாமும் அம்மொழியை நினைவில் கொண்டு பெருமை அடைய வேண்டும்.  

உலகிலுள்ள நூற்றுக்கணக்கான மொழிகள் பட்டியலில், தாய்மொழியின் உரிமையாளர் பட்டியலில் தமிழர்கள் 14ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டு உள்ளமையும் பெருமிதத்துக்கு உரியது.

நமது சிந்தனைக்கு உரைக்கு, செவிமடுத்தலுக்கு, எழுத்துக்கு, பார்வைக்கு உரித்தான நமது தாய்மொழியான தமிழ் மொழியைப் போற்றுவது, நமது கடமையாகும். அத்துடன், நமது அன்றாடக் கடமைகளுக்குரிய மொழியாகத் தாய்மொழியைப் பயன்படுத்தி, அதனை வளம்படுத்தி, வலுவூட்ட வேண்டிய பொறுப்பு நமக்குண்டு.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .