2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தமிழர் இருவர் கடத்தல்; அநுரவிடம் வாக்குமூலம்

Kogilavani   / 2017 பெப்ரவரி 24 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில், வெள்ளை வானில் இருவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்கவிடம், எதிர்வரும் 28ஆம் திகதி வாக்குமூலம் பெறவுள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில், நேற்று (23) அறிவித்தனர்.  

இக்கடத்தல் தொடர்பில், கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரிகளாக இருந்த பொலிஸ் பரிசோதகர் சமந்த குலதுங்க மற்றும் தற்போதைய பிரதிப் பொலிஸ்மா அதிபர் நுவான் வேதசிங்க ஆகியோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக சீ.ஐ.டியினர் மன்றில் தெரிவித்தனர்.

கடத்தப்பட்ட இருவரில் ஒருவரின் அலைபேசியைப் பயன்படுத்திய லெப்டின் கொமாண்டர் தயானந்தவைக் கைது செய்யத்தயாராகிய போது, கைது செய்யவேண்டாம் என, அப்போதைய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்கவினால் தாம் பணிக்கப்பட்டதாக இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாக சீ.ஐ.டியினர் குறிப்பிட்டதுடன், வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள அநுர சேனநாயக்கவிடம் 28ஆம் திகதி வாக்குமூலம் பெறவுள்ளதாகவும் தெரிவித்தனர்.  

இதனைத்தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வெலிசறமுகாமின் அதிகாரியாக இருந்தவரும் தற்போது, கடற்படை லெப்டின் கொமாண்டராக உள்ளவருமான தம்மிக அனில் மாபாவை, மார்ச் 9ஆம் திகதி திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிமன்ற மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி உத்தரவிட்டார்.  

அத்துடன், லெப்டினன் கொமாண்டர் தயானந்தவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக அவருக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும் அவர் பயிற்சி முகாமொன்றில் இருப்பதாகத் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்த சீ.ஐடியினர், 14 நாட்களுக்குள் குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அவருக்குத் தகவல் வழங்கியுள்ளதாகக் கூறினர்.  

பக்கரிசாமி லோகநாதன், இரத்தினசாமி பரமானந்தன் ஆகியோர், 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் வானொன்றில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாகவும் அந்தக் கடத்தற் சம்பவத்துடன் தொடர்புடைய வான், வெலிசறை கடற்படை முகாமுக்குப் பின் பகுதியில் இருந்தாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர்.  

அத்துடன், கடத்தப்பட்டவர்களில் ஒருவரான லோகநாதன் என்பவரின் அலைபேசியில் சிம் அட்டை மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டமை தமது விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்திருந்தமை குறிப்பித்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .