2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘தினமும் இருவர் கொல்லப்படுகின்றனர்’

Niroshini   / 2017 மார்ச் 22 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா 

“இலங்கையில், ஆண்களில் மிக அதிகமாகக் காணப்படும் புற்று நோய், வாய்ப்புற்று நோயாகும். இதனால் இலங்கையில் தினமும், இருவர்  கொல்லப்படுகின்றனர்” என, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.

உலக வாய்ச் சுகாதார தினத்தை முன்னிட்டு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தின் ஏற்பாட்டில், அக்கரைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களுடன் இணைந்து, அக்கரைப்பற்றில் நேற்று பிற்பகல் நடத்தப்பட்ட, முச்சக்கரவண்டி விழிப்புணர்வு ஊர்வலமும் இலவச வாய்ச் சுகாதார வைத்திய முகாமும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“ஆரம்ப காலத்தில், பல்சூத்தை என்ற பாதிப்பு, மிகக் குறைந்தளவிலேயே காணப்பட்டுள்ளது. ஆனால், இன்று உணவுப் பழக்கவழக்கம் மற்றும் ஏனைய தவறான செயற்பாடுகளினால், வாய்ச் சுகாதாரம் அதிகம் பாதிக்கப்பட்டு, பல்வேறுபட்ட நோய்களும் மரணங்களும் ஏற்படுகின்றன.

"ஒரு மனிதனின் வாய்ச் சுகாதாரத்தை வைத்தே அவனது ஆராக்கியத் தன்மையை அறிய முடிகின்றது. கர்ப்பிணித் தாய்மாரும், வாய்ச் சுகாதாரத்தைச் சிறந்த முறையில் பேணி வர வேண்டும். கர்ப்ப காலத்தில், வாய்ச் சுகாதாரம் பாதிக்கப்படுவதால், அவர்களது வயிற்றில் வளரும் குழந்தையின் இதயம் பாதிக்கப்படுவதுடன். மூளை வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது” என்றார். 

“வெற்றிலை, பாக்கு மெல்லுதல், புகைத்தல், மதுபானம் பாவித்தல், சத்துணவுக் குறைபாடு, சுகாதாரமற்ற முறையில் வாயைப் பேணுதல், ஹியுமன் பப்பிலோ வைரஸ் தொற்றுதல் போன்றவற்றினால், புற்று நோய் வருவதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

"ஆகவே, அருகிலுள்ள அரச பல் வைத்திய நிலையங்களில் பரிசோதனைகளை மேற்கொள்வதுடன், கண்ணாடியின் மூலமாக, வாயை அடிக்கடி சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

"மேலும், பிரதான உணவு வேளையில், சமப்படுத்தப்பட்ட போஷாக்குணவு உட்கொள்ளுதல், இயன்றளவு இனிப்புத்தன்மையான உணவைத் தவிர்த்தல், உப்பு, கொழுப்பு உணவுகளை அளவாக உணவில் சேர்த்துக் கொள்வதோடு, ஒரு நாளைக்கு 08 கோப்பை தண்ணீரையும் பருக வேண்டும். 

"மேலும், நாளாந்தம்  உடற்பயிற்சி  மேற்கொண்டு வருவதுடன், புளோரைட்டு பற்பசை மூலம், ஒரு நாளைக்கு குறைந்தது இரு தடவைகள் பல் துலக்க வேண்டும். இதேவேளை, தவறாது 06 மாதங்களுக்கு ஒரு முறை, பல்வைத்தியரிடம் சென்று பரிசோதனை செய்வதன் மூலமும், வாய்ப்புற்று நோயிலிருந்து பாதுகாப்பைப் பெற முடியும்” எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .