2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆலய முரண்பாடு: கடும் நிபந்தனையுடன் குழுக்களுக்கு பிணை

Princiya Dixci   / 2017 மார்ச் 22 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

காரைநகர் வேல் முருகன் ஆலயம் தொடர்பில் இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நான்கு பெண்கள் உட்பட 15 பேர், இன்று புதன்கிழமை, கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் இன்று (22) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது, இரு குழுவினர் சார்பிலும் முன்னிலையான சட்டத்தரணிகள் பிணை விண்ணப்பம் செய்ததை அடுத்து அவர்களை பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

குறித்த கோயில் தொடர்பில் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் சிவில் வழக்கு விசாரணையில் உள்ளது. அந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆலயம் சார்பில் இரண்டு குழுக்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டு உள்ளது.

இதன்போது, ஒரு குழுவை சேர்ந்த சகோதர்கள் மூவர் உட்பட நெருங்கிய உறவினர்களான ஐந்து பேர் மற்றைய குழுவை சேர்ந்த ஒருவரை தாக்கியுள்ளனர். அதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து தாக்குதலாளிகள் ஐவரும், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டனர்.

அந்நிலையில், மற்றைய குழுவினர் ஆலயத்தை இடித்து தரைமட்டம் ஆக்கினர் என ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் 4 பெண்கள் மற்றும் மற்றைய குழுவினரால் தாக்குதலுக்கு இலக்கான நபர் உட்பட பத்து பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அதனை தொடர்ந்து அவர்களையும் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவு இட்டார். அந்நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இரு குழுவினர் சார்பிலும் இரு சட்டத்தரணிகள் முன்னிலையாகி தமது தரப்பினரை பிணையில் விடுவிக்குமாறு மன்றில் பிணை விண்ணப்பம் செய்தனர்.

அதனை தொடர்ந்து இரு தரப்பினரையும் பிணையில் விடுவித்தால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் எனவும் இரு தரப்பினரின் முரண்பாட்டால் ஆலய பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளதாகவும் பிணையில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்றில் ஊர்காவற்துறை பொலிஸார் விண்ணப்பம் செய்தனர்.  

அதனை தொடர்ந்து இரு தரப்பினரின் விண்ணப்பங்களையும் பரிசீலித்த நீதவான், இந்த முரண்பாடானது இரு ஊர்களுக்கு இடையில் ஏற்பட்டதோ அல்லது, பெரும் சனத்திரளுக்கு மத்தியில் ஏற்பட்ட முரண்பாடு இல்லை. இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடாகவே மன்று கருதுகின்றது. பொலிஸார் ஆலய சூழலுக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர். அவர்கள் மீது நம்பிக்கை உள்ளது. அமைதிக்கு பங்கம் ஏற்படாதவாறு பாதுகாப்பார்கள. எனவே இவர்களை பிணையில் விடுவிப்பதனால், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படாது என மன்று கருதுகின்றது.

எனவே இரு தரப்பினரையும் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆள் பிணையிலும், 20 ஆயிரம் ரூபாய் காசு பிணையிலும், செல்வதற்கு அனுமதித்ததுடன், இரு தரப்பினரும் தமக்கு இடையில் எந்த தொடர்பும் வைத்து இருக்க கூடாது எனவும் வழக்கு முடிவடையும் வரையில் இரு தரப்பினரும் ஆலய பகுதிக்கு செல்ல கூடாது என கடும் நிபந்தனையும் நீதவான் விதித்தார். நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் பிணை இரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .