2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘குற்றமிழைத்தவர்கள் தெரிந்தும் தண்டிக்க முடியவில்லை’

Princiya Dixci   / 2017 மார்ச் 23 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

“றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலைக்கான பதிலை எமது அரசாங்கத்தாலும் இன்னும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. எனது நண்பரும் ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடையவர்கள் யாரென்றும் தெரிந்தும், இன்னும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இந்த சம்பவங்கள் தொடர்பில் குற்றமிழைத்தவர்கள் விரைவில் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும்” என, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 

நாடாளுமன்றில் நேற்று (22) இடம்பெற்ற இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கூறுகையில், தாஜுதீன், லசந்த, போன்ற பல சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் யார் என்று தெரிந்தும் இன்னும் தண்டிக்கப்படவில்லை. பயமின்றி எழுதிய லசந்த போன்றவர்கள் இல்லாமல் ஆக்கசெய்யப்பட்டமை நாங்கள் கண்டுள்ளோம். இந்த அநீதிக்கு, குறைந்தது சரிசெய்தல் நடவடிக்கைகளை யாவது மேற்கொள்ள வேண்டும். 

பெயர்களைச் சொல்லி சொல்லி நடவடிக்கை எடுப்பதற்கு எங்களுக்கு பயமில்லை. கால்கள் இரண்டையும் இரண்டு பக்கங்களில் வைத்துகொண்டு செயற்படும் நபர்கள் நாங்கள் அல்லர். 

பிரதமர் - ஜனாதிபதி தலைமையில் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து புதிய பயணத்தை இலங்கை மேற்கொண்டுள்ளது என்பதை உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. 

அரசியலை ஒரு பக்கம் வைத்துவிட்டு இலஞ்ச, ஊழலற்ற நாட்டை கட்டியெழுப்ப அனைத்து தரப்பினரும் எம்முடன் கைகோரக்க வேண்டும். 30 வருடங்களாக யுத்தத்தில் ஈடுபட்டு காலத்தை வீணாக்கிய நாங்கள், இன்று பொருளாதார யுத்தத்துக்கு முகங்கொடுத்துள்ளோம். 

பொருளாதார வெற்றிக்கு இலஞ்ச, ஊழல் செயற்பாடுகள் முட்டுக்கட்டையாக காணப்படுகின்றன. இலஞ்ச, ஊழலை குறைப்பது எங்கள் நோக்கமல்ல அதனை முற்றாக அழிப்பதே எமது நோக்கம். அதற்காகதான், நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். 

எதிர்க்கட்சிகள் சில, இலஞ்ச, ஊழல் பற்றி பேசினாலும், அவர்களது நடவடிக்கை இலஞ்ச, ஊழல் வழியில்தான் அமைகின்றன. தொழிற்சங்கள் சென்று பிரச்சினைகளை இன்று ஏற்படுத்துகின்றன.  

ஜனநாயகம் என்று கூறிக்கொண்டு, இன்று தினந்தோறும் எங்காவது ஓர் இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். முன்னர் இவ்வாறு இருந்திருந்தால், வௌ்ளை வான் ஊடாக இவை இல்லாது செய்யப்பட்டிருக்கும். ஜனநாயக கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் அதனை இவ்வாறான செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதா? இல்லை சிறந்த ஜனாநாயகத்துக்காக இதனை பயன்படுத்த வேண்டும். 

தவறுகள் இழைக்கப்பட்டிரு்ந்தால் அதனை சரி செய்ய வாய்ப்பு வழங்கப்பட​வேண்டும். ஆனால், நன்றான செல்லும் நாட்டில் இடையூறு விளைவிக்கும் வகையில் யாரும் செயற்பட்டால் அங்குதான் பிரச்சினை எழுகின்றது என்றார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .