2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விசாரணையை ஆரம்பித்தால் ‘யுத்தம் ஏற்படலாம்’

George   / 2017 மார்ச் 24 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

“படையினருக்கு எதிராக விசாரணையை ஆரம்பித்தால் அது தமிழ், சிங்கள மக்களிடையே விரிசலை ஏற்படுத்தி விடுவதுடன், மீண்டுமொரு யுத்தத்துக்கு கூட வழிசமைத்து விடும். போர்க்குற்ற விசாரணை குறித்த சர்வதேச அழுத்தங்களுக்கு அரசாங்கம் அடிபணியாது.

நாட்டுக்கு என்ன தேவையோ அதைத்தான் அரசாங்கம் செய்யும்” என்று, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, தெரிவித்தார்.   
“போர்க்குற்ற விசாரணையையும் நல்லிணக்கப் பொறிமுறையையும் ரயில் தண்டவாளத்தின் இரண்டு நிரல்கள் போன்றவை அவற்றை ஒரே தடவையில் முன்னெடுக்கமுடியாது” என்றார்.   

நாடாளுமன்றத்தில் நேற்று (23) இடம்பெற்ற நன்கொடை உறுதிகளை கைமீட்டல், குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல், குற்றவியல் சட்டக்கோவை தொடர்பிலான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்தவுடன், ஐக்கிய நாடுகள் சபைக்கும் அதன் கீழான ஏனைய சபைகளுக்கும் அரசாங்கத்தால் சில உறுதிமொழிகள் வழங்கப்பட்டன.   

ஐ.நா. வின் முன்னாள் செயலாளர் நாயகத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஷபக்ஷ கைச்சாத்திட்ட கூட்டறிக்கையின் பிரகாரமே தருஸ்மன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை ஆரம்பமானது.  

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு கடந்த அரசாங்கம் முயற்சித்திருந்தாலும், அந்த நடவடிக்கை திருப்தியுடையதாக இருக்கவில்லை. இராஜதந்திர கட்டமைப்பும் உரிய வகையில் செயற்படவில்லை.   

உண்மையைக் கண்டறியும் குழுவை அமைக்குமாறு தற்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொறுப்புக்கூறல் பொறிமுறையின்போது, சர்வதேச நீதிபதிகள் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  

எனினும், இலங்கையின் அரசியலமைப்பை சவாலுக்குட்படுத்தும், அதை மீறும் வகையில் செயற்படுவதற்கு அரசாங்கத்துக்கு அதிகாரம் இல்லை என 2015 ஆம் ஆண்டிலேயே ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அறிவித்துவிட்டோம்.   

நாட்டின் அரசியலமைப்பில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க இடமில்லை. ஆனால், வெளிநாட்டு பங்களிப்பு அவசியம் என ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்துகின்றன. இலங்கையின் அரசியலமைப்பை மீறிச் செயற்படுமாறாசர்வதேச நாடுகள் கூறுகின்றன? இது இலங்கையின் சுயாதீனத்துக்கு விடுக்கப்படும் சவாலாகவே பார்க்கின்றோம்.  

எமது நாட்டு மக்களின் மனித உரிமைகளை காக்கும் கடப்பாடு அரசாங்கத்துக்கு இருக்கின்றது. அதில் அரசாங்கமே கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இது விடயத்தில் சர்வதேசம் அழுத்தம் பிரயோகிக்கமுடியாது. நாட்டு மக்கள் மீது அரசாங்கத்துக்கு இல்லாத அக்கறையா அனைத்துலக சமூகத்துக்கு இருக்கப்போகின்றது?  

புதியதொரு அரசியலமைப்பை உருவாக்கி நல்லிணக்கத்தை நோக்கிப் பயணிப்பதற்கு அரசாங்கம் தயாராகிவருகின்றது. ஆனால், அது குறித்தும் தவறான கருத்துகள் பரப்பட்டுவருகின்றன. ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களை பகிரவே அரசாங்கம் தயாராக இருக்கின்றது. பௌத்த மதத்துக்கு காணப்படும் முன்னுரிமை அப்படியே இருக்கும். அதில் மாற்றம் வராது.  

இந்நிலையில், விசாரணை நடத்தி தண்டனை வழங்குமாறும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துமாறும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. ரயில் தண்டவாளத்தின் இரண்டு நிரல்கள் போன்றுதான் இவை. இரண்டுமே ஒன்றுசேராது. அதுபோல்தான் விசாரணையையும், நல்லிணக்கத்தையும் ஒன்றாகச் செய்யமுடியாது.  

இவர்தான் அதைச் செய்தார், இதுதான் போர்க்குற்றம் என சாட்சியம் வழங்கப்பட்டால் அது நாட்டுக்காகப் போராடிய படையினரிடையே கவலையையும், கலகத்தையும் ஏற்படுத்திவிடும். சிங்கள, தமிழ் மக்களிடையே விரிசல் ஏற்பட்டுவிடும். சிலவேளை, மீண்டுமொரு போருக்குகூட அது வழிசமைத்துவிடக்கூடும். போர்என்பதே குற்றம். பிறகு அதில் எப்படி குற்றத்தை தேடமுடியும்?” என்றார்.  

நாட்டுக்கு என்ன தேவையோ அதைத்தான் அரசாங்கம் செய்யும்” என்று, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, தெரிவித்தார்.   
“போர்க்குற்ற விசாரணையையும் நல்லிணக்கப் பொறிமுறையையும் ரயில் தண்டவாளத்தின் இரண்டு நிரல்கள் போன்றவை அவற்றை ஒரே தடவையில் முன்னெடுக்கமுடியாது” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .